பதிவு செய்த நாள்
14
ஆக
2012
10:08
ரம்ஜான் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏக இறைவனாகிய அல்லாஹ்விடம் தொழுகையை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த சமயத்தில் எப்படி பிரார்த்திக்க வேண்டும், அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோமா? கருணை மனத்திற்கும் பாவ மன்னிப்பிற்கும்: எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் செய்து கொண்டோம். எங்களை நீ மன்னித்து கிருபை செய்வாயாக. எங்களுக்கு கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் இழப்புக்குரியவர்களாகி விடுவோம்.
உயர்ந்த நன்மை பெற: எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக. மேலும், நரக வேதனையிலிருந்தும் எங்களைக் காத்தருள்வாயாக. பொறுமையுடன் இருக்க: எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக. எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக. மேலும், இறை நிராகரிப்பாளர்களான கூட்டத்தினரை வென்றிட எங்களுக்கு உதவி செய்வாயாக.
மனசுத்தம் ஏற்பட: எங்கள் இறைவனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு, எங்கள் இதயங்களை நேர்வழியில் இருந்து பிறழச் செய்திடாதே. மேலும், எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக. திண்ணமாக, நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கின்றாய். இன்னும் சில பிரார்த்தனைகளை நாளை பார்ப்போம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.44
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.32