பதிவு செய்த நாள்
18
ஆக
2012
05:08
ஈத்துவக்கும் இன்பப்பெருநாளான ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாட இருக்கிறோம். நோன்பிருந்து அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்ததன் மூலம், அவனிடம் இருந்து கருணையைப் பரிசாகப் பெற்றுக் கொண்டோம். சுவனத்தின் (சொர்க்கம்) பாதையை வலுப்படுத்தியுள்ளோம். பசியின் கொடுமையை உணர்ந்து, எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தத்துவத்தை உணர்ந்திருக்கிறோம். ஷவ்வால் மாதத்தில் நோன்பை முடித்து, உண்டு களித்து மகிழ்ச்சியுடன் இருக்க மார்க்கம் அனுமதித்திருக்கிறது. அதற்காக, வரம்பு மீறி செயல்பட்டு விடக்கூடாது. கேளிக்கை நிகழ்ச்சிகள் இஸ்லாமுக்கு ஏற்புடையதல்ல. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அறிவுரைப்படி, ஆண்களும், பெண்களும் நோன்புப் பெருநாள் தொழுகையில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். ""நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் இளம்பெண்களையும், மாத விடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும், வாலிபப்பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் என எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் மட்டும் தொழும் இடத்தில் இருந்து விலகி, நல்ல காரியங்களில் பங்கெடுக்க வேண்டும். முஸ்லிம்களின் அழைப்புப்பணியிலும் பங்கெடுக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டார்கள், என உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பெருநாளுக்கு ஆடம்பரமாக ஆடை அணிவதையும் நபிகளார் ஆதரிக்கவில்லை. உமர் (ரலி) அவர்கள், நபிகளாரிடம் ஒரு பெருநாளன்று, ஒரு பட்டாடையைக் கொண்டு வந்து தந்த போது, ""நிச்சயமாக இது பாக்கியமற்றவர்களின் ஆடையாகும், என்றார். ரம்ஜானை இனிமையாகக் கொண்டாடி மகிழ்வோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.42.