மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அருகே கோபுரப்பட்டியில் ஆதிநாயகி தாயார் உடனுறை ஆதிநாயகப் பெருமாள் கோவிலில் 108 கோ பூஜை சிறப்பாக நடந்தது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கோபுரப்பட்டியில் 512 ஆண்டுகள் பழமையான ஆதிநாயகப்பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் சிதிலமடைந்திருந்த இக்கோவில் புதுக்கப்பிக்கப்பட்டு 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு காலை எட்டு மணியளவில் திருவாய்மொழி சேவாகாலம் துவக்கப்பட்டது.பின் 108 பசுக்களுக்கு மாலை அணிவித்து சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. பின் பசுக்கள் கோவிலின் தெற்கு வாசல் வழியாக, கோவிலுக்குள் நுழைந்து திருக்கோவிலை வலம் வந்தன. பக்தர்கள் பசுக்களை தொட்டு வணங்கினர். பூஜைகளை ஸ்ரீரங்கம் முரளி பட்டர் நடத்தி வைத்தார். விழாவில் ஆதிநாயகப் பெருமாள் கைங்கர்ய சபா நிர்வாகிகள் ஆடிட்டர் ராமச்சந்திரன், பஞ்சாயத்து தலைவர் அனந்தராமன், கணேசன், கார்த்திகேயன், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.இன்று காலை எட்டு மணிக்கு திருவாய்மொழி சேவாகாலம் துவக்கமும், பெருமாள் தாயார் திருமஞ்சனமும், மாலை நான்கு மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு ஏழு மணிக்கு கருட சேவையும் நடக்கிறது.