பதிவு செய்த நாள்
08
செப்
2012
10:09
சென்னை: தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில், குடியிருப்புகள் கட்டி விற்கும் வீட்டு வசதி வாரியத்தின் திட்டத்துக்கு, பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், இத்திட்டம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, கோவில்களுக்கு சொந்தமான காலி நிலங்களையும், கதர் கிராம தொழில் வாரியத்துக்கு சொந்தமான காலி நிலங்களையும் வாங்கி, அதில் குடியிருப்புத் திட்டங்களை மேற்கொள்ள, வீட்டு வசதி
வாரியம் முடிவு செய்தது.
ஒப்பந்த முறை: இதில், கோவில் நிலங்களை பொறுத்தவரை, அந்த நிலங்கள் அனைத்தும் பக்தர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டவை என்பதும், இந்நிலங்களை வணிக நோக்கத்திலான திட்டங்களுக்காக, பிற துறைகளுக்கு வழங்குவதில், சட்ட சிக்கல்கள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, விலைக்கு வாங்கும் திட்டம் கைவிடப்பட்டு, கோவில் நிர்வாகிகள் என்ற அடிப்படையில், இந்து சமய அறநிலையத் துறையை பங்குதாரராகச் சேர்த்து, கூட்டு ஒப்பந்தம் அடிப்படையில், இத்திட்டங்களைச் செயல்படுத்த வீட்டு வசதித் துறை முடிவு செய்தது. கடந்த மாதம், வீட்டு வசதித் துறை செயலர் பணீந்திர ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில், இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. இது தொடர்பாக, கடந்த மாதம், 20ம் தேதி, தினமலர் நாளிதழில், விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, பல்வேறு இந்து சமய அமைப்புகள், இத்திட்டத்துக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
முதல்வருக்கு கடிதம்: இதுகுறித்து, விஷ்வ இந்து பரிஷத் சார்பில், அதன் மூத்த தலைவர்கள், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கடிதத்தின் விவரம்: தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறக்கட்டளைகள் சட்டம் - 1959ன், 340வது பிரிவின் படி, கோவில் சொத்துக்களை குத்தகை அல்லது விற்பதாக இருந்தால், அந்த சொத்து தானமாக வழங்கப்பட்ட நோக்கம், கோவிலின் நன்மை ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஷரத்துகளை உறுதிப்படுத்தி, பல்வேறு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை அளித்துள்ளது. மேலும், கோவில்களின் நிர்வாக சீரமைப்புக்காக, 1989ம் ஆண்டு, நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும், கோவில் நிலங்களை விற்கக் கூடாது; நீண்ட கால குத்தகைக்கு விடக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. எனவே, இவற்றை கருத்தில் கொண்டு, கோவில் நிலங்களில் குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய, அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து முன்னணி போன்ற அமைப்புகளும், இதே கருத்தை வலியுறுத்தி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
ஆலோசனை: இதுகுறித்து, வீட்டு வசதித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இத்தகைய சட்ட சிக்கல் குறித்தும், கோவில் நிலங்களில் குடியிருப்புத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கம் அளிக்குமாறு, வீட்டு வசதி வாரியத்திடம் கேட்டுள்ளோம், என்றார். இந்நிலையில், கோவில் நிலங்களை தவிர்த்து விட்டு, கதர் கிராம தொழில் வாரிய நிலங்களை மட்டும், குடியிருப்புத் திட்டங்களுக்கு எடுத்துக் கொள்ளலாமா என்பது குறித்து, வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகக் கூறப்பட்டது.