பதிவு செய்த நாள்
05
அக்
2012
10:10
கடையநல்லூர்: ஊர்மேலழகியானில் ஷீரடி சாய்பாபா படம் வீதியுலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஷீரடி சாய்பாபா பொதுநல அறக்கட்டளை சார்பில் ஊர்மேலழகியானில் சுரண்டை - இடைகால் சாலையில் புதிய கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பூஜை நடந்துள்ளது. இதனையடுத்து இப்பணியின் முதற்கட்டமாக ஷீரடி சாய்பாபாவிற்கு தற்காலிக பந்தல் அமைத்து திருஉருவ படத்தினை வைத்து சிறப்பு பூஜைகள் தினசரி செய்திட பக்தர்களால் திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஷீரடி சாய்பாபா படம் வீதியுலா ஊர்மேலழகியானில் நேற்று நடந்தது. முக்கிய தெருக்களின் வழியாக வீதியுலா வந்த ஷீரடி சாய்பாபா படத்திற்கு பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து கோயில் கட்டப்படவுள்ள பகுதியில் சங்கரி கேசவன், பார்வதி குலசேகரன் குத்துவிளக்கேற்றினர். ஓய்வு பெற்ற இன்ஜினியர் சுப்பிரமணியன், பஞ்., துணைத் தலைவர் ஜெயக்குமார் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து நடந்த அன்னதானத்தை பஞ்.,தலைவி முத்துலட்சுமி, வக்கீல் முத்துகுமாரசாமி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஊர்மேலழகியான் ஷீரடி சாய்பாபா பொதுநல அறக்கட்டளை தலைவர் கதிரேசன், துணைத் தலைவர் பார்வதி குலசேகரன், செயலாளர் இன்ஜினியர் சுப்பிரமணியன், இணை செயலாளர் ரத்தினசாமி, பொருளாளர் சாந்தலிங்கம், கார்த்திகேயன், இளங்கோவன், சங்கர்தாஸ், ஜெய்சங்கர், ஜெயப்பிரகாஷ் நாராயணன், சாந்திகிருஷ்ணன், சங்கரி கேசவன், பூவானந்தம், இந்திராகாந்தி, சுப்புராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.