பதிவு செய்த நாள்
19
டிச
2012
11:12
சென்னை: ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பிப்பவர்கள், பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசின் செய்திக்குறிப்பு: இந்த ஆண்டில், ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர், குறைந்த பட்சம், 2014ம் ஆண்டு மார்ச் மாதம், 31ம் தேதி வரை செல்லத்தக்க, பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். இந்த, பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களே, விண்ணப்பிக்க தகுதியானவர் என, இந்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது. அடுத்தாண்டு, பிப்ரவரி மாதம், ஹஜ் பயணத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்பதால், தற்போது, பாஸ்போர்ட் இல்லாதவர்கள், அதற்கு முன்,புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும். ஏற்கனவே, பாஸ்போர்ட் பெற்றுள்ளவர்கள், அவரவர் பாஸ்போர்ட்களில் செல்லுபடியாகும் காலத்தை சரிபார்த்து, வரும், 2014 மார்ச் மாதம் வரை இல்லையெனில், புதுப்பித்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஸ்போர்ட்டில் விசா பதிவிற்காக, குறைந்த பட்சம் அருகருகே, இரண்டு பக்கங்கள் காலியாக இருக்கும்படியாக, வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், ஹஜ்-2013க்கு விண்ணப்பிப்பவர்கள், இந்திய நிதி அமைப்பு குறியீடு எண்ணை குறிப்பிடுவது அவசியம். எனவே, ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிப்பவர்கள், ஐ.எப்.எஸ்., குறியீடு உள்ள வங்கிகளில், புதிதாக, வங்கிக் கணக்கு துவங்க வேண்டும். அவ்வாறு துவங்கப்பட்டதற்கு சான்றாக, ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்ட, காசோலை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.