பதிவு செய்த நாள்
27
டிச
2012
10:12
பழநி:பழநி கோயிலில், பஞ்சாமிர்தம் தயாரிக்க, தேவையான பழங்கள் "ஸ்டாக் இல்லாததால், தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், தனியார் கடைகளில் விலை அதிகரித்துள்ளது. பழநி கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். மலைக்கோயில் மூன்று கடைகளிலும், அடிவாரம், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் உள்ள கடைகளிலும் தேவஸ்தான பஞ்சாமிர்தம் "ஸ்டாக் இல்லை. விலை உயர்வு: இதனால், பக்தர்கள் தனியார் கடைகளில் பஞ்சாமிர்தம் வாங்க குவிகின்றனர். இதை பயன்படுத்தி, சில கடைக்காரர்கள் அரைக்கிலோ 30 ரூபாய்க்கு விற்ற பஞ்சாமிர்தத்தை, தற்போது 40 முதல் 50 ரூபாய் வரை விலை உயர்த்தியுள்ளனர். பக்தர்களும் வேறு வழியின்றி வாங்கிச் செல்கின்றனர். பழநி கோயிலுக்கு, ஆண்டுக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் தரும், பஞ்சாமிர்தம் தயாரிப்பில், தேவஸ்தான நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். முக்கிய விழாக்காலங்கள், விசேஷ நாட்களில் கூடுதலாக தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பு. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""பஞ்சாமிர்த டப்பாக்களை வழங்குவதில், தனியார் நிறுவனம் காலதாமதம் செய்கிறது. வாழைப் பழங்கள் வழங்கும் ஒப்பந்ததாரரிடம் பழம் கிடைக்காததாலும், தயாரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைவில் தட்டுபாடு நீங்கி விடும், என்றார்.
ரூ.1.31 கோடி வசூல்: பழநி கோயில் உண்டியல் வசூல் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாயை எட்டியது. காணிக்கை விபரம்: ரொக்கம் ஒரு கோடியே 30 லட்சத்து 60 ஆயிரத்து 775 ரூபாய் . தங்கம் 356 கிராம். வெள்ளி 4 ஆயிரத்து 206 கிராம். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு கரன்சி 802. தங்கத்தினாலான வேல், மாங்கல்யம், செயின், மோதிரம், வெள்ளியிலான வேல், கொலுசு, ஊஞ்சல், ஆள்ரூபம், பாதம், பித்தளை மணி, வேல் மற்றும் பரிவட்டங்கள்,ஏலக்காய் மாலை, கைகடிகாரங்கள். இந்த வசூல் 15 நாட்களில் கிடைத்ததாகும். உண்டியல் திறப்பின் போது கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் இருந்தனர்.