பதிவு செய்த நாள்
31
ஜன
2013
11:01
ஈங்கூர் ஸ்ரீமகா மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது: சென்னிமலை தலபுராணம் பாடியவர் சரவண மாமுனிவர். சென்னிமலையில் சிறப்புக்களையும், முருகனின் திருவருளையும் தன் செந்தமிழ் கவிகளால் போற்றிப் பாடியிருக்கிறார். சரவண மாமுனிவரும் கடைசி வரை சென்னிமலையிலேயே வாழ்ந்து, அங்கேயே ஜீவ சமாதி அடைந்தார். புண்ணாக்கு சித்தர் கோவில் அமைந்துள்ள இடத்திலேயே, சரவண மாமுனிவரின் சமாதியும் அமைந்துள்ளது. இக்கோவிலின் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண ஸ்வாமிக்கு தனிக் கோவில் உள்ளது. இதற்கு பக்தர்கள் கோழி, ஆடு பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவர். கருப்பண ஸ்வாமி கோவிலுக்கு செல்ல கரடுமுரடான மலைப்பாதைதான் இருந்தது. இதனால் பக்தர்கள் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். அதன் பிறகே, 10 லட்சம் ரூபாய் செலவில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. இங்குள்ள தன்னாசி அப்பனை வணங்குவதால் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை ஆகிய துன்பங்கள் நீங்கி வாழ்வில் வளமுடன் வாழலாம் என்ற ஐதீகம் பக்தர்களிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வானில் வந்தவர்: இங்கேயே வாழ்ந்தார் இவரது இயற்பெயர் தன்னாச்சி அப்பன் சித்தர். "இறைவன் கிருபையும், அருளையும் மறுத்துரைப்பவர்களின் நாவானது புண் பொருந்திய நாக்கு என்று கூறிய முனிவர் இவர். இதனால் இவரை "புண் நாக்கு சித்தர் என்று அழைத்தனர். பிற்காலத்தில் "புண்ணாக்குச் சித்தர் என்று பெயர் மருவியது. சித்தராக வானவீதி வழியாக பறந்து வந்த இவர், நிலையாக இவ்வாலயத்தில் இருந்து சென்னிமலை சுப்ரமணியரை நினைத்து யோக நிலையில் தவம் புரிந்தார். பின்னர் சென்னிமலையிலேயே புண்ணாக்குச் சித்தர் சிவ சமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த பின்னர் அவருடைய சிலையை தற்போதைய இடத்தில் நிறுவி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ஆண்டி வடிவில் அமைந்து அருள்பாலிக்கும் முருகனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் புண்ணாக்குச் சித்தர். சென்னிமலையில், 1,740 அடி உயரத்தில் குகை வடிவில் அமைந்துள்ள கோவிலில் இவர் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை சன்னதிக்கு மேல், 800 அடி நீளப்பாதையில் கிழக்கு முகமாக இக்குகை உள்ளது. மக்கள் குறையைப் போக்கும் ஆலயமாக விளங்குகிறது.