பதிவு செய்த நாள்
06
பிப்
2013
11:02
ஈரோடு: பவானி கூடுதுறையில், காவிரி வறண்டதால், காக்கை குளியலிடும் அவல நிலைக்கு, பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர். குடிநீருக்கு, பக்தர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், காசிக்கு அடுத்த படியாக, திரிவேணி சங்கமிக்கும் இடமாக, ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள, சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. காசி, ராமேஸ்வரம் வரிசையில், சங்கமேஸ்வரர் கோவில் சிறப்பு பெற்றது. காவிரி, பவானி, அமுத நதி சங்கமிக்கும் முக்கூடலில், சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அமாவாசையன்று, முன்னோருக்கு திதி கொடுக்க, தமிழகத்தின், பல மாவட்டங்களில் இருந்தும், மக்கள் இங்கு குவிவர். கூடுதுறையில் குளித்து, முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு.
தண்ணீர் தட்டுப்பாடு: தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால், நீராதாரமான ஆறுகள், குளங்கள், குட்டைகள் வறண்டுள்ளன. பவானி கூடுதுறையும் வறண்டு, காவிரி குட்டை போல் காணப்படுவதால், சங்கமேஸ்வரர் கோவிலில், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது:பவானி கூடுதுறையை, முக்கடல் சங்கமிக்கும் இடம் எனக் கூறுவதால், இங்கு புனித நீராடி, சுவாமியை தரிசித்தல், தர்ப்பணம் கொடுத்தல், தங்குதல் புனிதமாக கருதப்படுகிறது. தற்போது, கூடுதுறை வறண்டு ஆங்காங்கே, குட்டைபோல் தண்ணீர் தேங்கி உள்ளது.கடந்த மாதம், பழனிக்கு பாதயாத்திரை சென்றவர்கள், ஆற்றில் குளிக்க தண்ணீர் இல்லாததால், தொட்டியில், மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பி இருந்ததில் குளித்துச் சென்றனர்.
காக்கை குளியல்: தற்போது, ஆற்றில் தண்ணீர் முற்றிலும் வற்றி, பக்தர்கள் காக்கை குளியலிடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் காசியாக விளங்கும் கூடுதுறை, வறண்டு காணப்படுவது, வேதனை அளிக்கிறது.இவ்வாறு பக்தர்கள் கூறினர்.
அதிகாரிகள் கூறுகையில், "பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், பக்தர்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் குளிப்பதற்காக, படித்துறை அருகே தொட்டியில் தண்ணீர் நிரப்பி உள்ளோம். காவிரியில் குளிக்க முடியாதோர், தொட்டியில் இருக்கும் நீரை பயன்படுத்தி கொள்கின்றனர் என்றனர்.
ஈரோடு மாநகராட்சி பொறியாளர் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். மக்கள் பயன்பாட்டுக்கு, காவிரி ஆற்றில், ஒன்பது இடங்களில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு, 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுத்து, சுத்திகரித்து வினியோகிக்கின்றனர்.தடுப்பணையில், மின் உற்பத்திக்காக தண்ணீர் தேக்கியதால், பம்பிங் ஸ்டேஷன் மூலம் தண்ணீர் எடுப்பது சிரமம் இன்றி இருந்தது. தற்போது, மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு குறைந்து, தடுப்பணை திறக்கப்பட்டதால், காவிரி வறண்டுள்ளது.தவிர, காவிரியில் இருந்து பல கூட்டு குடிநீர் திட்டம், கிராமங்களுக்கு தேவையான குடிநீர் எடுக்கும் பணிகள் முற்றிலும் தடைபட்டுள்ளது. காவிரியில் வரும் நீரை, தடுப்பணை மூலம் மீண்டும் தேக்க, மின்துறை அதிகாரிகளுடன், பேச்சு நடத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.