பதிவு செய்த நாள்
21
பிப்
2013
11:02
லட்சிவாக்கம்: லட்சிவாக்கம், ஸ்ரீ ஆனந்தவள்ளி, ஆயிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசித்தனர்.ஊத்துக்கோட்டை அடுத்த லட்சிவாக்கம் கிராமத்தில், ஸ்ரீஆனந்த வள்ளி சமேத ஆயிஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபி÷ ஷகம் முன்னிட்டு, கடந்த, 18ம் தேதி, காலை, 7:00 மணிக்கு புதிய பிம்பம், கரிக்கோள் விழா நடந்தது. தொடர்ந்து, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை, புதிய பிம்பங்களுக்கு, கண் திறக்கும் நிகழ்ச்சி மற்றும் முதல்கால யாகபூஜை நடந்தது. நேற்று முன்தினம், காலை, இரண்டாம் கால பூஜை, தீபாராதனை, மாலை, மூன்றாம் காலபூஜை, பூர்ணாஹூதி நடந்தது. நேற்று, அதிகாலை, நான்காவது யாகசாலை பூஜையும், கலச ஊர்வலமும் புறப்பட்டது. பின்னர், புதிதாக அமைக்கப்பட்ட விமானத்திற்கு கலச நீர்ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, 7:00 மணிக்கு ஸ்ரீஆனந்த வள்ளி ஆயிஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பொதட்டூர்பேட்டை பொதட்டூர்பேட்டை, சுந்தர விநாயகர், ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக விழா கடந்த, 18ம் தேதி காலை, கணபதி பூஜை, தனபூஜை, கோபூஜை, நவகிரக பூஜையுடன் துவங்கியது. மாலை, முதல்கால யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம், இரண்டாவது கால யாகசாலை பூஜை, மாலை, 3வது கால யாக சாலை பூஜை, நாடிசந்தானம் தத்வார்ச்சனையும் நடந்தது. நேற்று காலை, 7:30 மணிக்கு, நான்காவது கால யாகசாலை பூஜை, ஹோமம் மற்றும் கலச ஊர்வலம் நடந்தது. காலை, 11:10 மணிக்கு, கோபுரத்தின் மீது, புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 11:30 மணிக்கு, மூலவர் சன்னதிகளில் நன்னீராட்டு மற்றும் தீபாராதனையும், பிற்பகல், 12:00 மணிக்கு அன்னம் பாலிப்பு, மாலை, 6:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு, 7:30 மணிக்கு ஸ்ரீ வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.