பதிவு செய்த நாள்
21
மார்
2013
10:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் நேற்றுமுன்தினம் இரவு, சின்னகாஞ்சிபுரத்திற்கு எழுந்தருளியபோது, அவரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இன்று இரவு பிரபல உற்சவமான, ஸ்ரீகைலாச பீட ராவண வாகன உற்சவம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழா, கடந்த 17ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் இரவு, வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
பக்தர்கள் திரண்டனர்: தினமும் சுவாமி நான்கு ராஜவீதிகளை வலம் வருவார். நேற்று முன்தினம் இரவு சுவாமி, அம்பிகை, சண்டிகேஸ்வரர், ஆகியோர் பவழக்கால் சப்பரங்களிலும், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணியர் தங்க மயில் வாகனத்திலும், சின்னகாஞ்சிபுரத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. உற்சவத்தையொட்டி, சின்னகாஞ்சிபுரம் வரும் ஏகாம்பரநாதரை தரிசக்க, பொதுமக்கள் திரண்டனர். இரவு 9:00 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, பக்தர்கள் புடைசூழ, அனைத்து சுவாமிகளும் காந்தி சாலையில், விநாயகர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் சுவாமிகளை வழிபட்டனர். இரவு 10:00 மணிக்கு சுவாமி அங்கிருந்து புறப்பட்டு, சின்னகாஞ்சிபுரம் சென்றார். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று வழிபட்டனர்.
பிரபல உற்சவம்: நேற்று காலை நாக வாகனம் உற்சவம், இரவு பிரபல உற்சவமான வெள்ளி இடப வாகனம் உற்சவம் நடந்தது. இன்று காலை வெள்ளி அதிகார நந்தி சேவை, இரவு பிரபல உற்சவமான ஸ்ரீகைலாசபீட ராவண வாகன உற்சவம் நடைபெற உள்ளது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட, ஸ்ரீகைலாசபீட ராவண வாகனத்தில் ஏகாம்பரநாதரும், காமதேனு வாகனத்தில் அம்பிகையும் வீதியுலா வருவர். கச்சபேஸ்வரர் கோவில் அருகே சுவாமி வரும்போது, வாண வேடிக்கை நடைபெறும்.