Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கலித்தொகை (பகுதி-2) கலித்தொகை (பகுதி-3)
முதல் பக்கம் » கலித்தொகை
கலித்தொகை (பகுதி-4)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
04:03

கலித்தொகை - முல்லைக் கலி 111

தீம் பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய் தந்த
பூங் கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும்
முல்லையும் தாய பாட்டங்கால் தோழி! நம்
புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம் 5
ஒருங்கு விளையாட, அவ் வழி வந்த
குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன், மற்று என்னை,
முற்று இழை ஏஎர் மட நல்லாய்! நீ ஆடும்
சிற்றில் புனைகோ, சிறிது? என்றான்; எல்லா! நீ,
பெற்றேம் யாம் என்று, பிறர் செய்த இல் இருப்பாய்; 10
கற்றது இலை மன்ற காண் என்றேன். முற்றிழாய்!
தாது சூழ் கூந்தல் தகை பெறத் தைஇய
கோதை புனைகோ, நினக்கு? என்றான்; எல்லா! நீ
ஏதிலார் தந்த பூக் கொள்வாய்; நனி மிகப்
பேதையை மன்ற பெரிது என்றேன். மாதராய்! 15
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலைமேல்
தொய்யில் எழுதுகோ மற்று? என்றான்; யாம் பிறர்
செய் புறம் நோக்கி இருத்துமோ? நீ பெரிது
மையலைமாதோ; விடுக! என்றேன். தையலாய்!
சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்ப, 20
அல்லாந்தான் போலப் பெயர்ந்தான்; அவனை நீ
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும்
யாயும் அறிய உரைத்தீயின், யான் உற்ற
நோயும் களைகுவைமன்.

கலித்தொகை - முல்லைக் கலி 112

யார் இவன், என்னை விலக்குவான்? நீர் உளர்
பூந் தாமரைப் போது தந்த விரவுத் தார்க்
கல்லாப் பொதுவனை; நீ மாறு; நின்னொடு
சொல்லல் ஓம்பு என்றார், எமர்;
எல்லா! கடாஅய கண்ணால், கலைஇய நோய் செய்யும் 5
நடாஅக் கரும்பு அமன்ற தோளாரைக் காணின்,
விடாஅல்; ஓம்பு என்றார், எமர்;
கடாஅயார், நல்லாரைக் காணின், விலக்கி, நயந்து, அவர்
பல் இதழ் உண்கண்ணும் தோளும் புகழ் பாட,
நல்லது கற்பித்தார் மன்ற; நுமர் பெரிதும் 10
வல்லர், எமர்கண் செயல்
ஓஒ! வழங்காப் பொழுது, நீ கன்று மேய்ப்பாய் போல்,
வழங்கல் அறிவார் உரையாரேல், எம்மை
இகழ்ந்தாரே அன்றோ, எமர்;
ஒக்கும்; அறிவல் யான் எல்லா! விடு; 15
விடேன், யான்; என், நீ குறித்தது? இருங் கூந்தால்!
நின்னை, என் முன் நின்று,
சொல்லல் ஓம்பு என்றமை அன்றி, அவனை நீ
புல்லல் ஓம்பு என்றது உடையரோ? மெல்ல
முயங்கு; நின் முள் எயிறு உண்கும் எவன்கொலோ? 20
மாயப் பொதுவன் உரைத்த உரை எல்லாம்
வாய் ஆவதுஆயின், தலைப்பட்டாம்; பொய்ஆயின்,
சாயல் இன் மார்பில் கமழ்தார் குழைத்த நின்
ஆய் இதழ் உண்கண் பசப்ப, தட மென் தோள்
சாயினும், ஏஎர் உடைத்து. 25

கலித்தொகை - முல்லைக் கலி 113

நலம் மிக நந்திய நய வரு தட மென் தோள்,
அலமரல் அமர் உண்கண், அம் நல்லாய்! நீ உறீஇ,
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல்
பேர் ஏமுற்றார் போல, முன் நின்று, விலக்குவாய்
யார் எல்லா! நின்னை அறிந்ததூஉம் இல்வழி; 5
தளிரியால்! என் அறிதல் வேண்டின், பகை அஞ்சாப்
புல்லினத்து ஆயர் மகனேன், மற்று யான்
ஒக்கும்மன்;
புல்லினத்து ஆயனை நீ ஆயின், குடம் சுட்டு
நல் இனத்து ஆயர், எமர் 10
எல்லா!
நின்னொடு சொல்லின், ஏதமோ இல்லைமன்
ஏதம் அன்று; எல்லை வருவான் விடு
விடேன்,
உடம்பட்டு நீப்பார் கிளவி, மடம் பட்டு, 15
மெல்லிய ஆதல் அறியினும், மெல்லியால்!
நின் மொழி கொண்டு, யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு
என் நெஞ்சம் ஏவல் செயின்;
நெஞ்சு ஏவல் செய்யாது என நின்றாய்க்கு, எஞ்சிய
காதல் கொள் காமம் கலக்குற ஏதிலார் 20
பொய்ம் மொழி தேறுவது என்;
தெளிந்தேன், தெரியிழாய்! யான்;
பல்கால், யாம் கான்யாற்று அவிர் மணற் தண் பொழில்,
அல்கல் அகல் அறை, ஆயமொடு ஆடி,
முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து, எல்லை 25
இரவு உற்றது; இன்னும் கழிப்பி;
அரவு உற்று, உருமின் அதிரும் குரல் போல், பொரு முரண்
நல் ஏறு நாகுடன் நின்றன,
பல் ஆன் இன நிரை; நாம் உடன் செலற்கே.

கலித்தொகை - முல்லைக் கலி 114

வாரி, நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்த
ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ
புதுவ மலர் தைஇ, எமர் என் பெயரால்,
வதுவை அயர்வாரைக் கண்டும் மதி அறியா
ஏழையை என்று அகல நக்கு, வந்தீயாய், நீ 5
தோழி! அவனுழைச் சென்று;
சென்று யான் அறிவேன்; கூறுக, மற்று இனி;
சொல் அறியாப் பேதை மடவை! மற்று எல்லா!
நினக்கு ஒரூஉம்; மற்று என்று அகல் அகலும்; நீடு இன்று;
நினக்கு வருவதாக் காண்பாய் அனைத்தாகச் 10
சொல்லிய சொல்லும் வியம் கொளக் கூறு;
தரு மணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும்
பெரும் மணம் எல்லாம் தனித்தே ஒழிய
வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த 15
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணம் தான் அறியும்; ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்,
அரு நெறி ஆயர் மகளிர்க்கு 20
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே.

கலித்தொகை - முல்லைக் கலி 115

தோழி! நாம், காணாமை உண்ட கடுங் கள்ளை, மெய் கூர,
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு,
கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம்
புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்
முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்! 5
கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே,
அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண,
அன்னை முன் வீழ்ந்தன்று, அப் பூ;
அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யாள், 10
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு,
நீங்கிப் புறங்கடைப் போயினாள்; யானும், என்
சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த
பூங் கரை நீலம் தழீஇ, தளர்பு ஒல்கி,
பாங்கு அருங் கானத்து ஒளித்தேன். அதற்கு, எல்லா! 15
ஈங்கு எவன் அஞ்சுவது;
அஞ்சல், அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின், நமரும்
அவன்கண் அடைசூழ்ந்தார், நின்னை; அகன் கண்
வரைப்பின் மணல் தாழப் பெய்து, திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம், 20
அல்கலும் சூழ்ந்த வினை.

கலித்தொகை - முல்லைக் கலி 116

பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம்; எம்
தாம்பின் ஒரு தலை பற்றினை, ஈங்கு எம்மை
முன்னை நின்றாங்கே விலக்கிய எல்லா! நீ
என்னை ஏமுற்றாய் விடு;
விடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர் மண்டும் 5
கடு வய நாகு போல் நோக்கி, தொழுவாயில்
நீங்கி, சினவுவாய் மற்று;
நீ நீங்கு; கன்று சேர்ந்தார்கண் கத ஈற்றாச் சென்றாங்கு,
வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு;
யாய் வருக ஒன்றோ; பிறர் வருக; மற்று நின் 10
கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான்,
நீ அருளி நல்கப் பெறின்;
நின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇ
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து, எனையதூஉம்
மாறு எதிர் கூறி, மயக்குப்படுகுவாய்! 15
கலத்தொடு யாம் செல்வுழி நாடி, புலத்தும்
வருவையான் நாண்இலி! நீ

கலித்தொகை - முல்லைக் கலி 117

மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ,
பேணித் துடைத்தன்ன மேனியாய்! கோங்கின்
முதிரா இள முகை ஒப்ப, எதிரிய
தொய்யில் பொறித்த வன முலையாய்! மற்று, நின்
கையது எவன்? மற்று உரை; 5
கையதை சேரிக் கிழவன் மகளேன் யான்; மற்று இஃது ஓர்
மாதர்ப் புலைத்தி விலையாகச் செய்தது ஓர்
போழின் புனைந்த வரிப் புட்டில். புட்டிலுள் என் உள?
காண் தக்காய்! எற் காட்டிக் காண்;
காண், இனி: தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு 10
காட்டுச் சார்க் கொய்த சிறு முல்லை, மற்று இவை
முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய்!
எல்லிற்று, போழ்து ஆயின் ஈதோளிக் கண்டேனால்;
செல் என்று நின்னை விடுவேன், யான்; மற்று எனக்கு
மெல்லியது, ஓராது அறிவு. 15

நல்லந்துவனார் அருளிய நெய்தற் கலி

கலித்தொகை - நெய்தற் கலி 118

வெல் புகழ் மன்னவன், விளங்கிய ஒழுக்கத்தால்,
நல் ஆற்றின் உயிர் காத்து, நடுக்கு அற, தான் செய்த
தொல் வினைப் பயன் துய்ப்ப, துறக்கம் வேட்டு எழுந்தாற்போல்
பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர,
ஆனாது கலுழ் கொண்ட உலகத்து, மற்று அவன் 5
ஏனையான் அளிப்பான் போல், இகல் இருள் மதி சீப்ப,
குடை நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும்
இடை நின்ற காலம் போல், இறுத்தந்த மருள் மாலை!
மாலை நீ தூ அறத் துறந்தாரை நினைத்தலின், கயம் பூத்த
போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய்; 10
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப, சினைப் பூப் போல் தளை விட்ட
காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்;
மாலை நீ தையெனக் கோவலர் தனிக் குழல் இசை கேட்டு
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய்;
செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும், 15
பொய் தீர்ந்த புணர்ச்சியுள் புது நலம் கடிகல்லாய்;
மாலை நீ தகை மிக்க தாழ் சினைப் பதி சேர்ந்து புள் ஆர்ப்ப,
பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய்;
தகை மிக்க புணர்ச்சியார், தாழ் கொடி நறு முல்லை
முகை முகம் திறந்தன்ன, முறுவலும் கடிகல்லாய்; 20
என ஆங்கு
மாலையும் அலரும் நோனாது, எம்வயின்
நெஞ்சமும் எஞ்சும்மன் தில்ல எஞ்சி,
உள்ளாது அமைந்தோர், உள்ளும்,
உள் இல் உள்ளம், உள்உள் உவந்தே. 25

கலித்தொகை - நெய்தற் கலி 119

அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாயாகப்
பகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர,
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர,
நிலவுக் காண்பது போல அணி மதி ஏர்தர,
கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்ப, 5
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச,
முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த,
சிறு வெதிர்ங் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மென,
பறவை தம் பார்ப்பு உள்ள, கறவை தம் பதிவயின்
கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, 10
மா வதி சேர, மாலை வாள் கொள,
அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து
செந் தீச் செவ்அழல் தொடங்க வந்ததை
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார், 15
மாலை என்மனார், மயங்கியோரே.

கலித்தொகை - நெய்தற் கலி 120

அருள் தீர்ந்த காட்சியான், அறன் நோக்கான், நயம் செய்யான்,
வெருவுற உய்த்தவன் நெஞ்சம் போல், பைபய
இருள் தூர்பு, புலம்பு ஊர, கனை சுடர் கல் சேர
உரவுத் தகை மழுங்கித் தன் இடும்பையால் ஒருவனை
இரப்பவன் நெஞ்சம் போல், புல்லென்று, புறம் மாறிக் 5
கரப்பவன் நெஞ்சம் போல், மரம் எல்லாம், இலை கூம்ப
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறாக,
நால் திசையும் நடுக்குறூஉம் மடங்கல் காலை,
கூற்று நக்கது போலும், உட்குவரு கடு மாலை!
மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாராப் பொழுதின்கண், 10
வெள்ள மான் நிறம் நோக்கிக் கணை தொடுக்கும் கொடியான் போல்,
அல்லற்பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ;
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி,
போர் தொலைந்து இருந்தாரைப் பாடு எள்ளி நகுவார் போல்,
ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ; 15
மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாராப் பொழுதின்கண்,
வெந்தது ஓர் புண்ணின்கண் வேல் கொண்டு நுழைப்பான் போல்,
காய்ந்த நோய் உழப்பாரைக் கலக்கிய வந்தாயோ;
என ஆங்கு,
இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை, 20
துனி கொள் துயர் தீரக் காதலர் துனைதர
மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை
ஒல்லென நீக்கி, ஒருவாது காத்து ஆற்றும்
நல் இறை தோன்ற, கெட்டாங்கு
இல்லாகின்றால், இருளகத்து ஒளித்தே. 25

கலித்தொகை - நெய்தற் கலி 121

ஒண் சுடர் கல் சேர, உலகு ஊரும் தகையது,
தெண் கடல் அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம்,
தண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தர,
புள்ளினம் இரை மாந்திப் புகல் சேர, ஒலி ஆன்று,
வள் இதழ் கூம்பிய மணி மருள் இருங் கழி 5
பள்ளி புக்கது போலும் பரப்பு நீர்த் தண் சேர்ப்ப!
தாங்கருங் காமத்தைத் தணந்து நீ புறம் மாற,
தூங்கு நீர் இமிழ் திரை துணையாகி ஒலிக்குமே
உறையொடு வைகிய போது போல், ஒய்யென
நிறை ஆனாது இழிதரூஉம், நீர் நீந்து கண்ணாட்கு 10
வாராய் நீ புறம் மாற, வருந்திய மேனியாட்கு
ஆர் இருள் துணையாகி அசைவளி அலைக்குமே
கமழ் தண் தாது உதிர்ந்து உக, ஊழ் உற்ற கோடல் வீ
இதழ் சோரும் குலை போல, இறை நீவு வளையாட்கு;
இன் துணை நீ நீப்ப, இரவினுள் துணையாகி, 15
தன் துணைப் பிரிந்து அயாஅம் தனிக் குருகு உசாவுமே
ஒண் சுடர் ஞாயிற்று விளக்கத்தான், ஒளி சாம்பும்
நண்பகல் மதியம் போல், நலம் சாய்ந்த அணியாட்கு
என ஆங்கு,
எறி திரை தந்திட, இழிந்த மீன் இன் துறை 20
மறி திரை வருந்தாமல் கொண்டாங்கு, நெறி தாழ்ந்து,
சாயினள் வருந்தியாள் இடும்பை
பாய் பரிக் கடுந் திண் தேர் களையினோ இடனே.

கலித்தொகை - நெய்தற் கலி 122

கோதை ஆயமும் அன்னையும் அறிவுற,
போது எழில் உண்கண் புகழ் நலன் இழப்ப,
காதல் செய்து அருளாது துறந்தார்மாட்டு, ஏது இன்றி,
சிறிய துனித்தனை; துன்னா செய்து அமர்ந்தனை;
பலவும் நூறு அடுக்கினை; இனைபு ஏங்கி அழுதனை; 5
அலவலை உடையை என்றி தோழீ!
கேள், இனி:
மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து, அவன்
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும்,
பேணி அவன் சிறிது அளித்தக்கால், என் 10
நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல்;
இருள் உறழ் இருங் கூந்தல் மகளிரோடு அமைந்து, அவன்
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும்,
அருளி அவன் சிறிது அளித்தக்கால், என்
மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல்; 15
ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து, அவன்
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும்,
புல்லி அவன் சிறிது அளித்தக்கால், என்
அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல்;
அதனால், 20
யாம நடு நாள் துயில் கொண்டு ஒளித்த
காம நோயின் கழீஇய நெஞ்சம்
தான் அவர்பால் பட்டதாயின்,
நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே.

கலித்தொகை - நெய்தற் கலி 123

கருங் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசைதொறும்
சுரும்பு ஆர்க்கும் குரலினோடு, இருந் தும்பி இயைபு ஊத,
ஒருங்குடன் இம்மென இமிர்தலின், பாடலோடு
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளாக் கிடந்தான் போல்,
பெருங் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறுங் கானல்; 5
காணாமை இருள் பரப்பி, கையற்ற கங்குலான்,
மாணா நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ
காணவும் பெற்றாயோ? காணாயோ? மட நெஞ்சே!
கொல் ஏற்றுச் சுறவினம் கடி கொண்ட மருள் மாலை,
அல்லல் நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ 10
புல்லவும் பெற்றாயோ? புல்லாயோ? மட நெஞ்சே!
வெறி கொண்ட புள்ளினம் வதி சேரும் பொழுதினான்,
செறி வளை நெகிழ்த்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ
அறியவும் பெற்றாயோ? அறியாயோ? மட நெஞ்சே!
என ஆங்கு 15
எல்லையும் இரவும் துயில் துறந்து, பல் ஊழ்
அரும் படர் அவல நோய் செய்தான்கண் பெறல் நசைஇ,
இருங் கழி ஓதம் போல் தடுமாறி,
வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே!

கலித்தொகை - நெய்தற் கலி 124

ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப்
பால் அன்ன மேனியான் அணி பெறத் தைஇய
நீல நீர் உடை போல, தகை பெற்ற வெண் திரை
வால் எக்கர்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப!
ஊர் அலர் எடுத்து அரற்ற, உள்ளாய், நீ துறத்தலின், 5
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன்
காரிகை பெற்ற தன் கவின் வாடக் கலுழ்பு, ஆங்கே,
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லாக்கால்;
இணைபு இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின்,
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன் 10
துணையாருள் தகை பெற்ற தொல் நலம் இழந்து, இனி,
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லாக்கால்;
இன்று இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின்,
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன்
வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து, இனி, 15
நின்று நீர் உகக் கலுழும் நெடும் பெருங் கண் அல்லாக்கால்;
அதனால்,
பிரிவு இல்லாய் போல, நீ தெய்வத்தின் தெளித்தக்கால்,
அரிது என்னாள், துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர,
புரி உளைக் கலிமான் தேர் கடவுபு 20
விரி தண் தார் வியல் மார்ப! விரைக நின் செலவே.

கலித்தொகை - நெய்தற் கலி 125

கண்டவர் இல் என, உலகத்துள் உணராதார்,
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்,
வண் பரி நவின்ற வய மான் செல்வ! 5
நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால்,
அன்பு இலை என வந்து கழறுவல்; ஐய! கேள்;
மகிழ் செய் தேமொழித் தொய்யில் சூழ் இள முலை
முகிழ் செய முள்கிய தொடர்பு, அவள் உண்கண்
அவிழ் பனி உறைப்பவும், நல்காது விடுவாய்! 10
இமிழ் திரைக் கொண்க! கொடியைகாண் நீ
இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ,
நலம் செல நல்கிய தொடர்பு, அவள் சாஅய்ப்
புலந்து அழ, புல்லாது விடுவாய்!
இலங்கு நீர்ச் சேர்ப்ப! கொடியைகாண் நீ; 15
இன் மணிச் சிலம்பின் சில் மொழி ஐம்பால்
பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல்
நுண் வரி வாட, வாராது விடுவாய்!
தண்ணந் துறைவ! தகாஅய்காண் நீ;
என ஆங்கு 20
அனையள் என்று, அளிமதி, பெரும! நின் இன்று
இறை வரை நில்லா வளையள் இவட்கு, இனிப்
பிறை ஏர் சுடர் நுதற் பசலை
மறையச் செல்லும், நீ மணந்தனை விடினே.

கலித்தொகை - நெய்தற் கலி 126

பொன் மலை சுடர் சேர, புலம்பிய இடன் நோக்கி,
தன் மலைந்து உலகு ஏத்த, தகை மதி ஏர்தர,
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி, இன நாரை
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல்,
எக்கர் மேல் இறைகொள்ளும், இலங்கு நீர்த் தண் சேர்ப்ப! 5
அணிச் சிறை இனக் குருகு ஒலிக்குங்கால், நின் திண் தேர்
மணிக் குரல் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே,
உள் ஆன்ற ஒலியவாய் இருப்பக் கண்டு, அவை கானற்
புள் என உணர்ந்து, பின் புலம்பு கொண்டு, இனையுமே
நீர் நீவிக் கஞன்ற பூக் கமழுங்கால், நின் மார்பில் 10
தார் நாற்றம் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே,
அலர் பதத்து அசைவளி வந்து ஒல்க, கழி பூத்த
மலர் என உணர்ந்து, பின் மம்மர் கொண்டு, இனையுமே;
நீள் நகர் நிறை ஆற்றாள், நினையுநள் வதிந்தக்கால்,
தோள் மேலாய் என நின்னை மதிக்குமன்; மதித்தாங்கே, 15
நனவு எனப் புல்லுங்கால், காணாளாய், கண்டது
கனவு என உணர்ந்து, பின் கையற்று, கலங்குமே;
என ஆங்கு,
பல நினைந்து, இனையும் பைதல் நெஞ்சின்,
அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி 20
மதி மருள் வாள் முகம் விளங்க,
புது நலம் ஏர்தர, பூண்க, நின் தேரே!

கலித்தொகை - நெய்தற் கலி 127

தெரி இணர் ஞாழலும், தேம் கமழ் புன்னையும்,
புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும்,
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப, இருந் தும்பி இயைபு ஊத
செரு மிகு நேமியான் தார் போல, பெருங் கடல்
வரி மணல்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப! 5
கொடுங் கழி வளைஇய குன்று போல், வால் எக்கர்,
நடுங்கு நோய் தீர, நின் குறி வாய்த்தாள் என்பதோ
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க,
இடும்பையோடு இனைபு ஏங்க, இவளை நீ துறந்ததை;
குறி இன்றிப் பல் நாள், நின் கடுந் திண் தேர் வரு பதம் கண்டு, 10
எறி திரை இமிழ் கானல், எதிர்கொண்டாள் என்பதோ
அறிவு அஞர் உழந்து ஏங்கி, ஆய் நலம் வறிதாக,
செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை;
காண் வர இயன்ற இக் கவின் பெறு பனித் துறை,
யாமத்து வந்து, நின் குறி வாய்த்தாள் என்பதோ 15
வேய் நலம் இழந்த தோள் விளங்குஇழை பொறை ஆற்றாள்,
வாள் நுதல் பசப்பு ஊர, இவளை நீ துறந்ததை;
அதனால்,
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர,
உரவுக் கதிர் தெறும் என ஓங்கு திரை விரைபு, தன் 20
கரை அமல் அடும்பு அளித்தாஅங்கு
உரவு நீர்ச் சேர்ப்ப! அருளினை அளியே.

கலித்தொகை - நெய்தற் கலி 128

தோள் துறந்து, அருளாதவர் போல் நின்று,
வாடை தூக்க, வணங்கிய தாழை
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை,
நளி இருங் கங்குல், நம் துயர் அறியாது,
அளி இன்று, பிணி இன்று, விளியாது, நரலும் 5
கானல் அம் சேர்ப்பனைக் கண்டாய் போல,
புதுவது கவினினை என்றியாயின்,
நனவின் வாரா நயனி லாளனைக்
கனவில் கண்டு, யான் செய்தது கேள், இனி:
அலந்தாங்கு அமையலென் என்றானைப் பற்றி, என் 10
நலம் தாராயோ? என, தொடுப்பேன் போலவும்,
கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி,
புலம்பல் ஓம்பு என, அளிப்பான் போலவும்;
முலையிடைத் துயிலும் மறந்தீத்தோய் என,
நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும், 15
வலை உறு மயிலின் வருந்தினை, பெரிது என,
தலையுற முன் அடிப் பணிவான் போலவும்;
கோதை கோலா, இறைஞ்சி நின்ற
ஊதைஅம் சேர்ப்பனை, அலைப்பேன் போலவும்,
யாது என் பிழைப்பு? என நடுங்கி, ஆங்கே, 20
பேதையைப் பெரிது எனத் தெளிப்பான் போலவும்;
ஆங்கு
கனவினால் கண்டேன் தோழி! காண் தகக்
கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன்
நனவின் வருதலும் உண்டு என 25
அனை வரை நின்றது, என் அரும் பெறல் உயிரே.

கலித்தொகை - நெய்தற் கலி 129

தொல் ஊழி தடுமாறி, தொகல் வேண்டும் பருவத்தால்,
பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல்,
எல் உறு தெறு கதிர் மடங்கி, தன் கதிர் மாய;
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின்,
அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா 5
மெல்லியான் பருவம் போல், மயங்கு இருள் தலை வர;
எல்லைக்கு வரம்பு ஆய, இடும்பை கூர், மருள் மாலை;
பாய் திரைப் பாடு ஓவாப் பரப்பு நீர்ப் பனிக் கடல்!
தூ அறத் துறந்தனன் துறைவன் என்று, அவன் திறம்
நோய் தெற உழப்பார்கண் இமிழ்தியோ? எம் போலக் 10
காதல் செய்து அகன்றாரை உடையையோ? நீ
மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்!
நன்று அறை கொன்றனர், அவர் எனக் கலங்கிய
என் துயர் அறிந்தனை நரறியோ? எம் போல
இன் துணைப் பிரிந்தாரை உடையையோ? நீ 15
பனி இருள் சூழ்தர பைதல் அம் சிறு குழல்!
இனி வரின், உயரும்மன் பழி எனக் கலங்கிய
தனியவர் இடும்பை கண்டு இனைதியோ? எம் போல
இனிய செய்து அகன்றாரை உடையையோ? நீ
என ஆங்கு, 20
அழிந்து, அயல் அறிந்த எவ்வம் மேற்பட,
பெரும் பேதுறுதல் களைமதி, பெரும!
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன்
மருந்து அறைகோடலின் கொடிதே, யாழ நின்
அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே. 25

கலித்தொகை - நெய்தற் கலி 130

நயனும், வாய்மையும், நன்னர் நடுவும்,
இவனின் தோன்றிய, இவை என இரங்க,
புரை தவ நாடி, பொய் தபுத்து, இனிது ஆண்ட
அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல்,
நிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செய, 5
கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல்,
புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை;
இம் மாலை,
ஐயர் அவிர் அழல் எடுப்ப, அரோ, என்
கையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும்! 10
இம் மாலை,
இருங் கழி மா மலர் கூம்ப, அரோ, என்
அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்!
இம் மாலை,
கோவலர் தீம் குழல் இனைய, அரோ, என் 15
பூ எழில் உண்கண் புலம்பு கொண்டு இனையும்!
என ஆங்கு,
படு சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை,
குடி புறங்காத்து ஓம்பும் செங்கோலான் வியன் தானை
விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர் 20
தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே;

கலித்தொகை - நெய்தற் கலி 131

பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்து, என்
திருந்திழை மென் தோள் மணந்தவன் செய்த
அருந் துயர் நீக்குவேன் போல்மன் பொருந்துபு
பூக் கவின் கொண்ட புகழ் சால் எழில் உண்கண்,
நோக்குங்கால் நோக்கின் அணங்கு ஆக்கும், சாயலாய்! தாக்கி 5
இன மீன் இகல் மாற வென்ற சின மீன்
எறி சுறா வான் மருப்புக் கோத்து, நெறி செய்த
நெய்தல் நெடு நார்ப் பிணித்து யாத்து, கை உளர்வின்
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப,
தாழாது உறைக்கும் தட மலர்த் தண் தாழை 10
வீழ் ஊசல் தூங்கப் பெறின்;
மாழை மட மான் பிணை இயல் வென்றாய்! நின் ஊசல்
கடைஇ யான் இகுப்ப, நீள் தூங்காய், தட மென் தோள்
நீத்தான் திறங்கள் பகர்ந்து
நாணினகொல், தோழி? நாணினகொல், தோழி? 15
இரவு எலாம் நல் தோழி நாணின என்பவை
வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல்,
ஆனாப் பரிய அலவன் அளைபுகூஉம்
கானல், கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப, தோழி! என்
மேனி சிதைத்தான் துறை; 20
மாரி வீழ் இருங் கூந்தல், மதைஇய நோக்கு எழில் உண்கண்,
தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய்!
தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும்
சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை;
பார்த்து உற்றன, தோழி! பார்த்து உற்றன, தோழி! 25
இரவு எலாம், நல் தோழி! பார்த்து உற்றன என்பவை
தன் துணை இல்லாள் வருந்தினாள்கொல்? என,
இன் துணை அன்றில் இரவின் அகவாவே
அன்று, தான் ஈர்த்த கரும்பு அணி வாட, என்
மென் தோள் ஞெகிழ்த்தான் துறை; 30
கரை கவர் கொடுங் கழி, கண் கவர் புள்ளினம்
திரை உறப் பொன்றிய புலவு மீன் அல்லதை,
இரை உயிர் செகுத்து உண்ணாத் துறைவனை யாம் பாடும்
அசை வரல் ஊசல் சீர் அழித்து, ஒன்று பாடித்தை;
அருளினகொல், தோழி? அருளினகொல், தோழி? 35
இரவு எலாம், தோழி! அருளின என்பவை
கணம் கொள் இடு மணல் காவி வருந்த,
பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும்
மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே
வணங்கி உணர்ப்பான் துறை; 40
என, நாம்
பாட, மறை நின்று கேட்டனன், நீடிய
வால் நீர்க் கிடக்கை வயங்கு நீர்ச் சேர்ப்பனை
யான் என உணர்ந்து, நீ நனி மருள,
தேன் இமிர் புன்னை பொருந்தி, 45
தான் ஊக்கினன், அவ் ஊசலை வந்தே.

கலித்தொகை - நெய்தற் கலி 132

உரவு நீர்த் திரை பொர ஓங்கிய எக்கர்மேல்,
விரவுப் பல் உருவின வீழ் பெடை துணையாக,
இரை தேர்ந்து உண்டு, அசாவிடூஉம் புள்ளினம் இறை கொள
முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப,
நிரை களிறு இடை பட, நெறி யாத்த இருக்கை போல் 5
சிதைவு இன்றிச் சென்றுழிச் சிறப்பு எய்தி, வினை வாய்த்து,
துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப!
புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்தக்கால்,
நன்னுதால்! அஞ்சல் ஓம்பு என்றதன் பயன் அன்றோ
பாயின பசலையால், பகல் கொண்ட சுடர் போன்றாள் 10
மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை;
பன் மலர் நறும் பொழில் பழி இன்றிப் புணர்ந்தக்கால்,
சின்மொழி! தெளி எனத் தேற்றிய சிறப்பு அன்றோ
வாடுபு வனப்பு ஓடி வயக்கு உறா மணி போன்றாள்
நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை; 15
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ. மணந்தக்கால்,
கொடுங் குழாய்! தெளி எனக் கொண்டதன் கொளை அன்றோ
பொறை ஆற்றா நுசுப்பினால், பூ வீந்த கொடி போன்றாள்
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை;
என ஆங்கு 20
வழிபட்ட தெய்வம்தான் வலி எனச் சார்ந்தார்கண்
கழியும் நோய் கைம்மிக அணங்குஆகியது போல,
பழி பரந்து அலர் தூற்ற, என் தோழி
அழி படர் அலைப்ப, அகறலோ கொடிதே.

கலித்தொகை - நெய்தற் கலி 133

மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
கானல் அணிந்த உயர் மணல் எக்கர்மேல்,
சீர் மிகு சிறப்பினோன் மரமுதல் கை சேர்த்த
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப்
பூ மலர்ந்தவை போல, புள் அல்கும் துறைவ! கேள்: 5
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை;
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;
அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை;
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்; 10
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை;
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை;
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்;
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்;
ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என் தோழி 15
நல் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க!
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்;
நின்தலை வருந்தியாள் துயரம்
சென்றனை களைமோ; பூண்க, நின் தேரே!

கலித்தொகை - நெய்தற் கலி 134

மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன்,
ஒல்லாதார் உடன்று ஓட, உருத்து, உடன் எறிதலின்,
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல்,
கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின்,
இருங் கடல் ஒலித்து ஆங்கே இரவுக் காண்பது போல, 5
பெருங் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர,
போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய்,
பாயல் கொள்பவை போல, கய மலர் வாய் கூம்ப,
ஒருநிலையே நடுக்குற்று, இவ் உலகெலாம் அச்சுற,
இரு நிலம் பெயர்ப்பு அன்ன, எவ்வம் கூர் மருண் மாலை; 10
தவல் இல் நோய் செய்தவர்க் காணாமை நினைத்தலின்,
இகல் இடும் பனி தின, எவ்வத்துள் ஆழ்ந்து, ஆங்கே,
கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர, கடல் நோக்கி,
அவலம் மெய்க் கொண்டது போலும் அஃது எவன்கொலோ?
நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின், 15
கடும் பனி கைம்மிக, கையாற்றுள் ஆழ்ந்து, ஆங்கே,
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய, மணல் நோக்கி,
இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்கொலோ?
வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின்,
கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து, ஆங்கே, 20
மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால், மரன் நோக்கி,
எவ்வத்தால் இயன்ற போல், இலை கூம்பல் எவன் கொலோ?
என ஆங்கு,
கரை காணாப் பௌவத்து, கலம் சிதைந்து ஆழ்பவன்
திரை தரப் புணை பெற்று, தீது இன்றி உய்ந்தாங்கு, 25
விரைவனர் காதலர் புகுதர,
நிரை தொடி துயரம் நீங்கின்றால், விரைந்தே.

கலித்தொகை - நெய்தற் கலி 135

துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி
இணை திரள் மருப்பாக, எறி வளி பாகனா
அயில் திணி நெடுங் கதவு அமைத்து, அடைத்து, அணி கொண்ட
எயில் இடு களிறே போல் இடு மணல் நெடுங் கோட்டைப்
பயில்திரை, நடு நன்னாள், பாய்ந்து உறூஉம் துறைவ! கேள்: 5
கடி மலர்ப் புன்னைக் கீழ்க் காரிகை தோற்றாளைத்
தொடி நெகிழ்ந்த தோளளாத் துறப்பாயால்; மற்று நின்
குடிமைக்கண் பெரியது ஓர் குற்றமாய்க் கிடவாதோ?
ஆய் மலர்ப் புன்னைக் கீழ் அணி நலம் தோற்றாளை
நோய் மலி நிலையளாத் துறப்பாயால்; மற்று நின் 10
வாய்மைக்கண் பெரியது ஓர் வஞ்சமாய்க் கிடவாதோ?
திகழ் மலர்ப் புன்னைக் கீழ்த் திரு நலம் தோற்றாளை
இகழ் மலர்க் கண்ணளாத் துறப்பாயால்; மற்று நின்
புகழ்மைக்கண் பெரியது ஓர் புகராகிக் கிடவாதோ?
என ஆங்கு, 15
சொல்லக் கேட்டனை ஆயின், வல்லே,
அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து,
மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர
உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு
இயங்கு ஒலி நெடுந் திண் தேர் கடவுமதி, விரைந்தே. 20

கலித்தொகை - நெய்தற் கலி 136

இவர், திமில், எறிதிரை ஈண்டி வந்து அலைத்தக்கால்,
உவறு நீர் உயர் எக்கர், அலவன் ஆடு அளை வரி,
தவல் இல் தண் கழகத்துத் தவிராது வட்டிப்ப,
கவறு உற்ற வடு ஏய்க்கும், காமரு பூங் கடற் சேர்ப்ப!
முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம் 5
பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள்
அத் திறத்து நீ நீங்க, அணி வாடி, அவ் ஆயம்
வித்தத்தால் தோற்றான் போல், வெய் துயர் உழப்பவோ?
முடத் தாழை முடுக்கருள் அளித்தக்கால், வித்தாயம்
இடைத் தங்கக் கண்டவன் மனம் போல, நந்தியாள் 10
கொடைத் தக்காய்! நீ ஆயின், நெறி அல்லாக் கதி ஓடி
உடைப் பொதி இழந்தான் போல், உறு துயர் உழப்பவோ?
நறு வீ தாழ் புன்னைக் கீழ் நயந்து நீ அளித்தக்கால்,
மறுவித்தம் இட்டவன் மனம் போல, நந்தியாள்
அறிவித்து நீ நீங்கக் கருதியாய்க்கு, அப் பொருள் 15
சிறுவித்தம் இட்டான் போல், செறிதுயர் உழப்பவோ?
ஆங்கு
கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய்,
தீண்டற்கு அருளி, திறன் அறிந்து, எழீஇப்
பாண்டியம் செய்வான் பொருளினும் 20
ஈண்டுக, இவள் நலம்! ஏறுக, தேரே!

கலித்தொகை - நெய்தற் கலி 137

அரிதே, தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்;
பெரிதே காமம்; என் உயிர் தவச் சிறிதே;
பலவே யாமம்; பையுளும் உடைய;
சிலவே, நம்மோடு உசாவும் அன்றில்;
அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப, உலமந்து, 5
எழில் எஞ்சு மயிலின் நடுங்கி, சேக்கையின்
அழல் ஆகின்று, அவர் நக்கதன் பயனே;
மெல்லிய நெஞ்சு பையுள் கூர, தம்
சொல்லினான் எய்தமை அல்லது, அவர் நம்மை
வல்லவன் தைஇய, வாக்கு அமை கடு விசை 10
வில்லினான் எய்தலோ இலர்மன்; ஆயிழை!
வில்லினும் கடிது, அவர் சொல்லினுள் பிறந்த நோய்,
நகை முதலாக, நட்பினுள் எழுந்த
தகைமையில் நலிதல் அல்லது, அவர் நம்மை
வகைமையின் எழுந்த தொல் முரண் முதலாக, 15
பகைமையின் நலிதலோ இலர்மன்; ஆயிழை!
பகைமையிற் கடிது, அவர் தகைமையின் நலியு நோய்,
நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்து, தம்
சாயலின் சுடுதல் அல்லது, அவர் நம்மைப்
பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடுஞ் சுடர்த் 20
தீயினால் சுடுதலோ இலர்மன்; ஆயிழை!
தீயினும் கடிது, அவர் சாயலின் கனலும் நோய்;
ஆங்கு
அன்னர் காதலராக, அவர் நமக்கு
இன் உயிர் பேர்த்தரும் மருத்துவர் ஆயின், 25
யாங்கு ஆவதுகொல்? தோழி! எனையதூஉம்
தாங்குதல் வலித்தன்று ஆயின்,
நீங்கரிது உற்ற அன்று, அவர் உறீஇய நோயே.

கலித்தொகை - நெய்தற் கலி 138

எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால்
தொழில் மாறித் தலை வைத்த தோட்டி கை நிமிர்ந்தாங்கு,
அறிவும், நம் அறிவு ஆய்ந்த அடக்கமும், நாணொடு,
வறிதாக பிறர் என்னை நகுபவும், நகுபு உடன்,
மின் அவிர் நுடக்கமும் கனவும் போல், மெய் காட்டி 5
என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவி,
தன் நலம் கரந்தாளைத் தலைப்படும் ஆறு எவன்கொலோ?
மணிப் பீலி சூட்டிய நூலொடு, மற்றை
அணிப் பூளை, ஆவிரை, எருக்கொடு, பிணித்து, யாத்து,
மல்லல் ஊர் மறுகின்கண் இவட் பாடும், இஃது ஒத்தன் 10
எல்லீரும் கேட்டீமின் என்று;
படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை,
நல்கியாள், நல்கியவை;
பொறை என் வரைத்து அன்றி, பூநுதல் ஈத்த
நிறை அழி காம நோய் நீந்தி, அறை உற்ற 15
உப்பு இயல் பாவை உறை உற்றது போல,
உக்குவிடும் என் உயிர்;
பூளை, பொல மலர் ஆவிரை வேய் வென்ற
தோளாள் எமக்கு ஈத்த பூ;
உரிது என் வரைத்து அன்றி, ஒள்ளிழை தந்த 20
பரிசு அழி பைதல் நோய் மூழ்கி, எரி பரந்த
நெய்யுள் மெழுகின் நிலையாது, பை பயத்
தேயும் அளித்து என் உயிர்;
இளையாரும், ஏதிலவரும் உளைய, யான்
உற்றது உசாவும் துணை; 25
என்று யான் பாடக் கேட்டு,
அன்புறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின்
துன்பத்தில் துணையாய மடல் இனி இவள் பெற
இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்புற்று,
அடங்கு அருந் தோற்றத்து அருந் தவம் முயன்றோர் தம் 30
உடம்பு ஒழித்து உயர் உலகு இனிது பெற்றாங்கே.

கலித்தொகை - நெய்தற் கலி 139

சான்றவிர், வாழியோ! சான்றவிர்! என்றும்
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி, அறன் அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால், இவ் இருந்த
சான்றீர்! உமக்கு ஒன்று அறிவுறுப்பேன்: மான்ற
துளி இடை மின்னுப் போல் தோன்றி, ஒருத்தி, 5
ஒளியோடு உரு என்னைக் காட்டி, அளியள், என்
நெஞ்சு ஆறு கொண்டாள்; அதற்கொண்டும் துஞ்சேன்,
அணி அலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின்
பிணையல் அம் கண்ணி மிலைந்து, மணி ஆர்ப்ப,
ஓங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து, என் எவ்வ நோய் 10
தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பாக
வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று, நீங்காது,
பாடுவேன், பாய் மா நிறுத்து;
யாமத்தும் எல்லையும் எவ்வத் திரை அலைப்ப,
மா மேலேன் என்று, மடல் புணையா நீந்துவேன் 15
தே மொழி மாதர் உறாஅது உறீஇய
காமக் கடல் அகப்பட்டு;
உய்யா அரு நோய்க்கு உயவாகும் மையல்
உறீஇயாள் ஈத்த இம் மா;
காணுநர் எள்ளக் கலங்கி, தலை வந்து, என் 20
ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும்
மாண் இழை மாதராள் ஏஎர் என, காமனது
ஆணையால் வந்த படை;
காமக் கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம்
எழிநுதல் ஈத்த இம் மா; 25
அகை எரி ஆனாது, என் ஆர் உயிர் எஞ்சும்
வகையினால், உள்ளம் சுடுதரும் மன்னோ
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர்
தகையால் தலைக்கொண்ட நெஞ்சு!
அழல் மன்ற, காம அரு நோய்; நிழல் மன்ற, 30
நேரிழை ஈத்த இம் மா;
ஆங்கு அதை,
அறிந்தனிர் ஆயின், சான்றவிர்! தான் தவம்
ஒரீஇ, துறக்கத்தின் வழீஇ, ஆன்றோர்
உள் இடப்பட்ட அரசனைப் பெயர்த்து, அவர் 35
உயர்நிலை உலகம் உறீஇயாங்கு, என்
துயர் நிலை தீர்த்தல் நும்தலைக் கடனே.

கலித்தொகை - நெய்தற் கலி 140

கண்டவிர் எல்லாம் கதுமென வந்து, ஆங்கே,
பண்டு அறியாதீர் போல நோக்குவீர்; கொண்டது
மா என்று உணர்மின்; மடல் அன்று; மற்று இவை
பூ அல்ல; பூளை, உழிஞையோடு, யாத்த
புன வரை இட்ட வயங்கு தார்ப் பீலி, 5
பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி,
அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங் கண்ணி:
நெடியோன் மகன் நயந்து தந்து, ஆங்கு அனைய
வடிய வடிந்த வனப்பின், என் நெஞ்சம்
இடிய இடைக் கொள்ளும் சாயல், ஒருத்திக்கு 10
அடியுறை காட்டிய செல்வேன்; மடியன்மின்;
அன்னேன் ஒருவனேன், யான்;
என்னானும், பாடு எனில், பாடவும் வல்லேன், சிறிது; ஆங்கே,
ஆடு எனில், ஆடலும் ஆற்றுகேன்; பாடுகோ
என் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக, 15
நன்னுதல் ஈத்த இம் மா?
திங்கள் அரவு உறின், தீர்க்கலார் ஆயினும்,
தம் காதல் காட்டுவர், சான்றவர் இன் சாயல்
ஒண்டொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய்
கண்டும், கண்ணோடாது, இவ் ஊர் 20
தாங்காச் சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும்
பாம்பும் அவைப் படில், உய்யுமாம் பூங் கண்
வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இக் காமம்
உணர்ந்தும், உணராது, இவ் ஊர்
வெஞ் சுழிப் பட்ட மகற்குக் கரை நின்றார் 25
அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டாம் அம் சீர்ச்
செறிந்த ஏர் முறுவலாள் செய்த இக் காமம்
அறிந்தும், அறியாது, இவ் ஊர்
ஆங்க,
என் கண் இடும்பை அறீஇயினென்; நும்கண் 30
தெருளுற நோக்கித் தெரியுங்கால், இன்ன
மருளுறு நோயொடு மம்மர் அகல,
இருளுறு கூந்தலாள் என்னை
அருளுறச் செயின், நுமக்கு அறனுமார் அதுவே.

கலித்தொகை - நெய்தற் கலி 141

அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம்
வேட்டவை செய்து, ஆங்கு, காட்டி மற்று ஆங்கே,
அறம் பொருள் இன்பம் என்று அம் மூன்றின் ஒன்றன்
திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று
அணி நிலைப் பெண்ணை மடல் ஊர்ந்து, ஒருத்தி 5
அணி நலம் பாடி வரற்கு;
ஓரொருகால் உள்வழியள் ஆகி, நிறை மதி
நீருள் நிழல் போல், கொளற்கு அரியள் போருள்
அடல் மாமேல் ஆற்றுவேன் என்னை மடல்மாமேல்
மன்றம் படர்வித்தவள் வாழி, சான்றீர்! 10
பொய் தீர் உலகம் எடுத்த கொடிமிசை,
மை அறு மண்டிலம் வேட்டனள் வையம்
புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும்
இன்னா இடும்பை செய்தாள்; அம்ம, சான்றீர்!
கரந்தாங்கே இன்னா நோய் செய்யும்; மற்று இஃதோ 15
பரந்த சுணங்கின் பணைத் தோளாள் பண்பு;
இடி உமிழ் வானத்து, இரவு இருள் போழும்
கொடி மின்னுக் கொள்வேன் என்றன்னள் வடி நாவின்
வல்லார் முன் சொல் வல்லேன் என்னைப் பிறர் முன்னர்க்
கல்லாமை காட்டியவள்; வாழி, சான்றீர்! 20
என்று, ஆங்கே,
வருந்த மா ஊர்ந்து, மறுகின்கண் பாட,
திருந்திழைக்கு ஒத்த கிளவி கேட்டு, ஆங்கே,
பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அருந் திறை
போல, கொடுத்தார், தமர். 25

கலித்தொகை - நெய்தற் கலி 142

புரிவுண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை,
அருகுவித்து ஒருவரை அகற்றலின், தெரிவார்கண்,
செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது,
நயம் நின்ற பொருள் கெடப் புரி அறு நரம்பினும்
பயன் இன்று மன்றம்ம, காமம் இவள் மன்னும் 5
ஒள் நுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும்,
உள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி, தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள்; பெண் இன்றி
யாவரும் தண் குரல் கேட்ப, நிரை வெண் பல்
மீ உயர் தோன்ற, நகாஅ, நக்காங்கே, 10
பூ உயிர்த்தன்ன புகழ் சால் எழில் உண்கண்
ஆய் இதழ் மல்க அழும்;
ஓஒ! அழிதகப் பாராதே, அல்லல் குறுகினம்;
காண்பாம் கனங்குழை பண்பு;
என்று, எல்லீரும் என் செய்தீர்? என்னை நகுதிரோ? 15
நல்ல நகாஅலிர் மற்கொலோ யான் உற்ற
அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு
புல்லிப் புணரப் பெறின்
எல்லா! நீ உற்றது எவனோ மற்று? என்றீரேல், எற் சிதை
செய்தான் இவன் என, உற்றது இது என, 20
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின்,
பைதல ஆகிப் பசக்குவமன்னோ என்
நெய்தல் மலர் அன்ன கண்;
கோடு வாய் கூடாப் பிறையை, பிறிது ஒன்று
நாடுவேன், கண்டனென்; சிற்றிலுள் கண்டு, ஆங்கே, 25
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன்; சூடிய,
காணான் திரிதரும்கொல்லோ மணி மிடற்று
மாண் மலர்க் கொன்றையவன்
தெள்ளியேம் என்று உரைத்து, தேராது, ஒரு நிலையே,
வள்ளியை ஆக! என நெஞ்சை வலியுறீஇ, 30
உள்ளி வருகுவர்கொல்லோ? வளைந்து யான்
எள்ளி இருக்குவேன் மற்கொலோ? நள்ளிருள்
மாந்தர் கடி கொண்ட கங்குல், கனவினால்,
தோன்றினனாக, தொடுத்தேன்மன், யான்; தன்னைப்
பையெனக் காண்கு விழிப்ப, யான் பற்றிய 35
கையுளே, மாய்ந்தான், கரந்து
கதிர் பகா ஞாயிறே! கல் சேர்திஆயின்,
அவரை நினைத்து, நிறுத்து என் கை நீட்டித்
தருகுவைஆயின், தவிரும் என் நெஞ்சத்து
உயிர் திரியா மாட்டிய தீ; 40
மை இல் சுடரே! மலை சேர்தி நீ ஆயின்,
பௌவ நீர்த் தோன்றிப் பகல் செய்யும் மாத்திரை,
கைவிளக்காகக் கதிர் சில தாராய்! என்
தொய்யில் சிதைத்தானைத் தேர்கு
சிதைத்தானைச் செய்வது எவன்கொலோ? எம்மை 45
நயந்து, நலம் சிதைத்தான்
மன்றப் பனைமேல் மலை மாந் தளிரே! நீ
தொன்று இவ் உலகத்துக் கேட்டும் அறிதியோ?
மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால், யான் காணேன்
நன்று தீது என்று பிற; 50
நோய் எரியாகச் சுடினும், சுழற்றி, என்
ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்தாங்கே
நோய் உறு வெந் நீர்: தெளிப்பின், தலைக் கொண்டு
வேவது, அளித்து இவ் உலகு;
மெலியப் பொறுத்தேன்; களைந்தீமின் சான்றீர்! 55
நலிதரும் காமமும் கௌவையும் என்று, இவ்
வலிதின் உயிர் காவாத் தூங்கி, ஆங்கு, என்னை
நலியும் விழுமம் இரண்டு;
எனப் பாடி,
இனைந்து நொந்து அழுதனள்; நினைந்து நீடு உயிர்த்தனள்; 60
எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி, எல்லிரா
நல்கிய கேள்வன் இவன் மன்ற, மெல்ல
மணியுள் பரந்த நீர் போலத் துணிவாம்
கலம் சிதை இல்லத்துக் காழ் கொண்டு தேற்றக்
கலங்கிய நீர்போல் தெளிந்து, நலம் பெற்றாள், 65
நல் எழில் மார்பனைச் சார்ந்து.

கலித்தொகை - நெய்தற் கலி 143

அகல் ஆங்கண், இருள் நீங்கி, அணி நிலாத் திகழ்ந்த பின்,
பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல், நகல் இன்று
நல் நுதல் நீத்த திலகத்தள், மின்னி
மணி பொரு பசும் பொன்கொல்? மா ஈன்ற தளிரின்மேல்
கணிகாரம் கொட்கும்கொல்? என்றாங்கு அணி செல 5
மேனி மறைத்த பசலையள், ஆனாது
நெஞ்சம் வெறியா நினையா, நிலன் நோக்கா,
அஞ்சா, அழாஅ, அரற்றா, இஃது ஒத்தி
என் செய்தாள்கொல்? என்பீர்! கேட்டீமின் பொன் செய்தேன்
மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது, 10
அறை கொன்று, மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச,
பறை அறைந்தாங்கு, ஒருவன் நீத்தான் அவனை
அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின், யானும்
நிறை உடையேன் ஆகுவேன்மன்ற மறையின் என்
மென் தோள் நெகிழ்த்தானை மேஎய், அவன் ஆங்கண் 15
சென்று, சேட்பட்டது, என் நெஞ்சு;
ஒன்றி முயங்கும் என்று, என் பின் வருதிர்; மற்று ஆங்கே,
உயங்கினாள் என்று, ஆங்கு உசாதிர்; மற்று அந்தோ
மயங்கினாள்! என்று மருடிர்; கலங்கன்மின்
இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை 20
என் உயிர் காட்டாதோ மற்று;
பழி தபு ஞாயிறே! பாடு அறியாதார்கண்
கழியக் கதழ்வை எனக் கேட்டு, நின்னை
வழிபட்டு இரக்குவேன் வந்தேன் என் நெஞ்சம்
அழியத் துறந்தானைச் சீறுங்கால், என்னை 25
ஒழிய விடாதீமோ என்று;
அழிதக மாஅந் தளிர் கொண்ட போழ்தினான், இவ் ஊரார்
தாஅம் தளிர் சூடித் தம் நலம் பாடுப;
வாஅம் தளிர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின்,
யாஅம் தளிர்க்குவேம்மன்; 30
நெய்தல் நெறிக்கவும் வல்லன்; நெடு மென் தோள்
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன்; இள முலைமேல்
தொய்யில் எழுதவும் வல்லன்; தன் கையில்
சிலை வல்லான் போலும் செறிவினான்; நல்ல
பல வல்லன் தோள் ஆள்பவன்; 35
நினையும் என் உள்ளம்போல், நெடுங் கழி மலர் கூம்ப;
இனையும் என் நெஞ்சம்போல், இனம் காப்பார் குழல் தோன்ற;
சாய என் கிளவிபோல், செவ்வழி யாழ் இசை நிற்ப;
போய என் ஒளியேபோல், ஒரு நிலையே பகல் மாய;
காலன்போல் வந்த கலக்கத்தோடு என்தலை 40
மாலையும் வந்தன்று, இனி;
இருளொடு யான் ஈங்கு உழப்ப, என் இன்றிப் பட்டாய்;
அருள் இலை; வாழி! சுடர்!
ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல்லாயின்,
மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து 45
வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் வாயெனின்,
யாண்டும், உடையேன் இசை,
ஊர் அலர் தூற்றும்; இவ் உய்யா விழுமத்துப்
பீர் அலர் போலப் பெரிய பசந்தன
நீர் அலர் நீலம் என, அவர்க்கு, அஞ்ஞான்று, 50
பேர் அஞர் செய்த என் கண்
தன் உயிர் போலத் தழீஇ, உலகத்து
மன் உயிர் காக்கும் இம் மன்னனும் என் கொலோ
இன் உயிர் அன்னானைக் காட்டி, எனைத்து ஒன்றும்
என் உயிர் காவாதது; 55
என ஆங்கு,
மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள்
பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேர,
தென்னவன் தெளித்த தேஎம் போல,
இன் நகை எய்தினள், இழந்த தன் நலனே. 60

கலித்தொகை - நெய்தற் கலி 144

நன்னுதாஅல்! காண்டை: நினையா, நெடிது உயிரா,
என் உற்றாள்கொல்லோ? இஃது ஒத்தி பல் மாண்
நகுதரும் தன் நாணுக் கைவிட்டு, இகுதரும்
கண்ணீர் துடையா, கவிழ்ந்து, நிலன் நோக்கி,
அன்ன இடும்பை பல செய்து, தன்னை 5
வினவுவார்க்கு ஏதில சொல்லி, கனவுபோல்
தெருளும் மருளும் மயங்கி வருபவள்
கூறுப கேளாமோ, சென்று;
எல்லா! நீ என் அணங்கு உற்றனை? யார் நின் இது செய்தார்?
நின் உற்ற அல்லல் உரை என, என்னை 10
வினவுவீர்! தெற்றெனக் கேண்மின்: ஒருவன்,
குரற்கூந்தால்! என் உற்ற எவ்வம் நினக்கு யான்
உரைப்பனைத் தங்கிற்று, என் இன் உயிர் என்று,
மருவு ஊட்டி, மாறியதற்கொண்டு, எனக்கு
மருவு உழிப் பட்டது, என் நெஞ்சு; 15
எங்கும் தெரிந்து, அது கொள்வேன், அவன் உள்வழி
பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை
திங்களுள் தோன்றி இருந்த குறு முயால்!
எம் கேள் இதன் அகத்து உள்வழிக் காட்டீமோ?
காட்டீயாய்ஆயின், கத நாய் கொளுவுவேன்; 20
வேட்டுவர் உள்வழிச் செப்புவேன்; ஆட்டி
மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த
என் அல்லல் தீராய்எனின்;
என்று, ஆங்கே, உள் நின்ற எவ்வம் உரைப்ப, மதியொடு
வெண் மழை ஓடிப் புகுதி; சிறிது என்னைக் 25
கண்ணோடினாய் போறி, நீ;
நீடு இலைத் தாழைத் துவர் மணற் கானலுள்
ஓடுவேன்; ஓடி ஒளிப்பேன்; பொழில்தொறும்
நாடுவேன்; கள்வன் கரந்திருக்கற்பாலன்கொல்?
ஆய் பூ அடும்பின் அலர்கொண்டு, உதுக் காண், எம் 30
கோதை புனைந்த வழி;
உதுக் காண், சாஅய் மலர் காட்டி, சால்பிலான், யாம் ஆடும்
பாவை கொண்டு ஓடியுழி;
உதுக் காண் தொய்யில் பொறித்த வழி
உதுக் காண் தையால்! தேறு எனத் தேற்றி, அறனில்லான் 35
பைய முயங்கியுழி;
அளிய என் உள்ளத்து, உயவுத் தேர் ஊர்ந்து,
விளியா நோய் செய்து, இறந்த அன்பிலவனைத்
தெளிய விசும்பினும் ஞாலத்தகத்தும்
வளியே! எதிர்போம் பல கதிர் ஞாயிற்று 40
ஒளி உள்வழி எல்லாம் சென்று; முனிபு எம்மை
உண்மை நலன் உண்டு ஒளித்தானைக் காட்டீமோ;
காட்டாயேல், மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன், என்
கண்ணீர் அழலால் தெளித்து;
பேணான் துறந்தானை நாடும் இடம் விடாயாயின் 45
பிறங்கு இரு முந்நீர்! வெறு மணலாகப்
புறங்காலின் போக இறைப்பேன்; முயலின்,
அறம் புணையாகலும் உண்டு;
துறந்தானை நாடித் தருகிற்பாய்ஆயின், நினக்கு ஒன்று
பாடுவேன், என் நோய் உரைத்து; 50
புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன்
எல்லி ஆக, எல்லை என்று, ஆங்கே, பகல் முனிவன்;
எல்லிய காலை இரா, முனிவன்; யான் உற்ற
அல்லல் களைவார் இலேன்;
ஓஒ! கடலே! தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமை எடுத்து, 55
பற்றுவேன் என்று, யான் விழிக்குங்கால், மற்றும் என்
நெஞ்சத்துள் ஓடி ஒளித்து, ஆங்கே, துஞ்சா நோய்
செய்யும், அறனில்லவன்;
ஓஒ! கடலே! ஊர் தலைக்கொண்டு கனலும் கடுந் தீயுள்
நீர் பெய்தக்காலே சினம் தணியும்; மற்று இஃதோ 60
ஈரம் இல் கேள்வன் உறீஇய காமத் தீ
நீருள் புகினும், சுடும்
ஓஒ! கடலே! எற்றமிலாட்டி என் ஏமுற்றாள்? என்று, இந் நோய்
உற்று அறியாதாரோ நகுக! நயந்தாங்கே
இற்றா அறியின், முயங்கலேன், மற்று என்னை 65
அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு;
ஆங்கு,
கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர,
கெடல் அருங் காதலர் துனைதர, பிணி நீங்கி,
அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனைத் 70
திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம்
நல் அவையுள் படக் கெட்டாங்கு,
இல்லாகின்று, அவள் ஆய் நுதல் பசப்பே.

கலித்தொகை - நெய்தற் கலி 145

துனையுநர் விழை தக்க சிறப்புப்போல், கண்டார்க்கு
நனவினுள் உதவாது நள்ளிருள் வேறாகும்
கனவின் நிலையின்றால், காமம்; ஒருத்தி
உயிர்க்கும்; உசாஅம்; உலம்வரும்; ஓவாள்,
கயல் புரை உண்கண் அரிப்ப அரி வார, 5
பெயல் சேர் மதி போல, வாள் முகம் தோன்ற,
பல ஒலி கூந்தலாள், பண்பு எல்லாம் துய்த்துத்
துறந்தானை உள்ளி, அழூஉம்; அவனை
மறந்தாள்போல் ஆலி நகூஉம்; மருளும்;
சிறந்த தன் நாணும் நலனும் நினையாது, 10
காமம் முனைஇயாள், அலந்தாள் என்று, எனைக் காண,
நகான்மின்; கூறுவேன், மாக்காள்! மிகாஅது,
மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும்,
நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும்,
ஊழ் செய்து, இரவும் பகலும்போல், வேறாகி, 15
வீழ்வார்கண் தோன்றும்; தடுமாற்றம் ஞாலத்துள்
வாழ்வார்கட்கு எல்லாம் வரும்;
தாழ்பு, துறந்து, தொடி நெகிழ்த்தான் போகிய கானம்
இறந்து எரி நையாமல், பாஅய் முழங்கி
வறந்து என்னை செய்தியோ,வானம்? சிறந்த என் 20
கண்ணீர்க் கடலால், கனை துளி வீசாயோ,
கொண்மூக் குழீஇ முகந்து;
நுமக்கு எவன் போலுமோ? ஊரீர்! எமக்கும் எம்
கண்பாயல் கொண்டு, உள்ளாக் காதலவன் செய்த
பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது 25
கொள்வது போலும், கடும் பகல்? ஞாயிறே!
எல்லாக் கதிரும் பரப்பி, பகலொடு
செல்லாது நின்றீயல் வேண்டுவல்; நீ செல்லின்,
புல்லென் மருள் மாலைப் போழ்து இன்று வந்து என்னைக்
கொல்லாது போதல் அரிதால்; அதனொடு யான் 30
செல்லாது நிற்றல் இலேன்;
ஒல்லை எம் காதலர்க் கொண்டு, கடல் ஊர்ந்து, காலைநாள்,
போதரின் காண்குவேன்மன்னோ பனியொடு
மாலைப் பகை தாங்கி, யான்;
இனியன் என்று ஓம்படுப்பல், ஞாயிறு! இனி 35
ஒள் வளை ஓடத் துறந்து, துயர் செய்த
கள்வன்பால் பட்டன்று, ஒளித்து என்னை, உள்ளி
பெருங் கடல் புல்லென, கானல் புலம்ப,
இருங் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற,
விரிந்து இலங்கு வெண் நிலா வீசும் பொழுதினான், 40
யான் வேண்டு ஒருவன், என் அல்லல் உறீஇயான்;
தான் வேண்டுபவரோடு துஞ்சும்கொல், துஞ்சாது?
வானும், நிலனும், திசையும், துழாவும் என்
ஆனாப் படர் மிக்க நெஞ்சு
ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி, என் 45
ஆர் உயிர் எஞ்சும்மன்; அங்கு நீ சென்றீ
நிலவு உமிழ் வான் திங்காள்! ஆய் தொடி கொட்ப,
அளி புறம் மாறி, அருளான் துறந்த அக்
காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார்
எல்லாரும் தேற்றர், மருந்து; 50
வினைக் கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர்!
எனைத்தானும் எள்ளினும், எள்ளலன், கேள்வன்;
நினைப்பினும், கண்ணுள்ளே தோன்றும்; அனைத்தற்கே
ஏமராது, ஏமரா ஆறு;
கனை இருள் வானம்! கடல் முகந்து, என்மேல் 55
உறையொடு நின்றீயல் வேண்டும், ஒருங்கே
நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால்
இறை இறை பொத்திற்றுத் தீ;
எனப் பாடி,
நோயுடை நெஞ்சத்து எறியா, இனைபு ஏங்கி, 60
யாவிரும் எம் கேள்வற் காணீரோ? என்பவட்கு,
ஆர்வுற்ற பூசற்கு அறம்போல, ஏய்தந்தார்;
பாயல் கொண்டு உள்ளாதவரை வரக் கண்டு,
மாயவன் மார்பில் திருப்போல் அவள் சேர,
ஞாயிற்று முன்னர் இருள்போல மாய்ந்தது என் 65
ஆயிழை உற்ற துயர்

கலித்தொகை - நெய்தற் கலி 146

உரை செல உயர்ந்து ஓங்கி, சேர்ந்தாரை ஒரு நிலையே
வரை நில்லா விழுமம் உறீஇ, நடுக்கு உரைத்து, தெறல் மாலை
அரைசினும் அன்பு இன்றாம், காமம்; புரை தீர,
அன்ன மென் சேக்கையுள் ஆராது, அளித்தவன்
துன்னி அகல, துறந்த அணியளாய், 5
நாணும் நிறையும் உணர்கல்லாள், தோள் ஞெகிழ்பு,
பேர் அமர் உண்கண் நிறை மல்க, அந் நீர் தன்,
கூர் எயிறு ஆடி, குவிமுலைமேல் வார்தர,
தேர் வழி நின்று தெருமரும்; ஆயிழை
கூறுப கேளாமோ, சென்று; 10
எல்லிழாய்! எற்றி வரைந்தானை, நாணும் மறந்தாள் என்று,
உற்றனிர் போல, வினவுதிர்! மற்று இது
கேட்டீமின், எல்லீரும் வந்து;
வறம் தெற மாற்றிய வானமும் போலும்;
நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் 15
சிறந்தவன் தூ அற நீப்ப, பிறங்கி வந்து,
என்மேல் நிலைஇய நோய்;
நக்கு நலனும் இழந்தாள், இவள் என்னும்
தக்கவிர் போலும்! இழந்திலேன்மன்னோ
மிக்க என் நாணும், நலனும், என் உள்ளமும், 20
அக் கால் அவனுழை ஆங்கே ஒழிந்தன!
உக் காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்றாக,
செக்கர் அம் புள்ளித் திகிரி அலவனொடு, யான்
நக்கது, பல் மாண் நினைந்து
கரை காணா நோயுள் அழுந்தாதவனைப் 25
புரை தவக் கூறி, கொடுமை நுவல்வீர்!
வரைபவன் என்னின் அகலான் அவனை,
திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம்,
நிரை கதிர் ஞாயிற்றை, நாடு என்றேன்; யானும்
உரை கேட்புழி எல்லாம் செல்வேன்; புரை தீர்ந்தான் 30
யாண்டு ஒளிப்பான்கொல்லோ மற்று;
மருள் கூர் பிணை போல் மயங்க, வெந் நோய் செய்யும்
மாலையும் வந்து, மயங்கி, எரி நுதி
யாமம் தலை வந்தன்றுஆயின், அதற்கு என் நோய்
பாடுவேன், பல்லாருள் சென்று; 35
யான் உற்ற எவ்வம் உரைப்பின், பலர்த் துயிற்றும்
யாமம்! நீ துஞ்சலைமன்;
எதிர்கொள்ளும் ஞாலம், துயில் ஆராது ஆங்கண்
முதிர்பு என்மேல் முற்றிய வெந் நோய் உரைப்பின்,
கதிர்கண் மழுங்கி, மதியும் அதிர்வது போல் 40
ஓடிச் சுழல்வதுமன்;
பேர் ஊர் மறுகில் பெருந் துயிற் சான்றீரே!
நீரைச் செறுத்து, நிறைவுற ஓம்புமின்
கார் தலைக்கொண்டு பொழியினும், தீர்வது
போலாது, என் மெய்க் கனலும் நோய்; 45
இருப்பினும் நெஞ்சம் கனலும்; செலினே,
வருத்துறும் யாக்கை; வருந்துதல் ஆற்றேன்;
அருப்பம் உடைத்து, என்னுள் எவ்வம் பொருத்தி,
பொறி செய் புனை பாவை போல, வறிது உயங்கிச்
செல்வேன், விழுமம் உழந்து; 50
என ஆங்குப் பாட, அருள் உற்று;
வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும்
புள்ளிற்கு அது பொழிந்தாஅங்கு, மற்றுத் தன்
நல் எழில் மார்பன் முயங்கலின்,
அல்லல் தீர்ந்தன்று, ஆயிழை பண்பே. 55

கலித்தொகை - நெய்தற் கலி 147

ஆறு அல்ல மொழி தோற்றி, அற வினை கலக்கிய,
தேறுகண் நறவு உண்டார் மயக்கம்போல், காமம்
வேறு ஒரு பாற்று ஆனதுகொல்லோ? சீறடிச்
சிலம்பு ஆர்ப்ப, இயலியாள் இவள் மன்னோ, இனி மன்னும்
புலம்பு ஊரப் புல்லென்ற வனப்பினாள் விலங்கு ஆக, 5
வேல் நுதி உற நோக்கி, வெயில் உற, உருகும் தன்
தோள் நலம் உண்டானைக் கெடுத்தாள் போல், தெருவில் பட்டு,
ஊண் யாதும் இலள் ஆகி, உயிரினும் சிறந்த தன்
நாண் யாதும் இலள் ஆகி, நகுதலும் நகூஉம்; ஆங்கே
பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம்: தோழி! ஓர் 10
ஒண்ணுதல் உற்றது உழைச் சென்று கேளாமோ?
இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ? ஓஒ!
அமையும் தவறிலீர் மற்கொலோ நகையின்
மிக்கதன் காமமும் ஒன்று என்ப; அம்மா
புது நலம் பூ வாடியற்று, தாம் வீழ்வார் 15
மதி மருள நீத்தக்கடை;
என்னையே மூசி, கதுமென நோக்கன்மின் வந்து
கலைஇய கண், புருவம், தோள், நுசுப்பு, ஏஎர்
சில மழைபோல் தாழ்ந்து இருண்ட கூந்தல், அவற்றை
விலை வளம் மாற அறியாது, ஒருவன் 20
வலை அகப்பட்டது என் நெஞ்சு
வாழிய, கேளிர்!
பலவும் சூள் தேற்றித் தெளித்தவன் என்னை
முலையிடை வாங்கி முயங்கினன், நீத்த
கொலைவனைக் காணேன்கொல், யான்; 25
காணினும், என்னை அறிதிர்; கதிர் பற்றி,
ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே! எம் கேள்வன்
யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ? காட்டாயேல்,
வானத்து எவன் செய்தி, நீ?
ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல, 30
நீருள்ளும் தோன்றுதி, ஞாயிறே! அவ் வழித்
தேரை தினப்படல் ஓம்பு
நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை,
பல் கதிர் சாம்பிப் பகல் ஒழிய, பட்டீமோ
செல் கதிர் ஞாயிறே! நீ; 35
அறாஅல் இன்று அரி முன்கைக் கொட்கும்
பறாஅப் பருந்தின்கண் பற்றிப் புணர்ந்தான்
கறாஅ எருமைய காடு இறந்தான்கொல்லோ?
உறாஅத் தகை செய்து, இவ் ஊர் உள்ளான்கொல்லோ?
செறாஅது உளனாயின், கொள்வேன்; அவனைப் 40
பெறாஅது யான் நோவேன்; அவனை எற் காட்டிச்
சுறாஅக் கொடியான் கொடுமையை, நீயும்,
உறாஅ அரைச! நின் ஓலைக்கண் கொண்டீ,
மறாஅ அரைச! நின் மாலையும் வந்தன்று;
அறாஅ தணிக, இந் நோய்; 45
தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல், யாவர்க்கும்
அன்னவோ காம! நின் அம்பு;
கையாறு செய்தானைக் காணின், கலுழ் கண்ணால்
பையென நோக்குவேன்; தாழ் தானை பற்றுவேன்;
ஐயம் கொண்டு, என்னை அறியான் விடுவானேல் 50
ஒய்யெனப் பூசல் இடுவேன்மன், யான் அவனை
மெய்யாகக் கள்வனோ என்று;
வினவன்மின் ஊரவிர்! என்னை, எஞ்ஞான்றும்
அடாஅ நறவு உண்டார் போல, மருள
விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண் 55
படாஅமை செய்தான் தொடர்பு
கனவினான் காணிய, கண் படாஆயின்,
நனவினான், ஞாயிறே! காட்டாய் நீஆயின்,
பனை ஈன்ற மா ஊர்ந்து, அவன் வர, காமன்
கணை இரப்பேன், கால் புல்லிக்கொண்டு 60
என ஆங்கு,
கண் இனைபு, கலுழ்பு ஏங்கினள்;
தோள் ஞெகிழ்பு, வளை நெகிழ்ந்தனள்;
அன்னையோ! எல்லீரும் காண்மின்; மடவரல்
மெல் நடைப் பேடை துனைதர, தற் சேர்ந்த 65
அன்ன வான் சேவல் புணர்ச்சிபோல், ஒண்ணுதல்
காதலன் மன்ற அவனை வரக் கண்டு, ஆங்கு
ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள், பேதை
நகை ஒழிந்து, நாணு மெய் நிற்ப, இறைஞ்சி,
தகை ஆகத் தையலாள் சேர்ந்தாள் நகை ஆக, 70
நல் எழில் மார்பன் அகத்து.

கலித்தொகை - நெய்தற் கலி 148

தொல் இயல் ஞாலத்துத் தொழில் ஆற்றி, ஞாயிறு,
வல்லவன் கூறிய வினை தலை வைத்தான்போல்,
கல் அடைபு, கதிர் ஊன்றி, கண் பயம் கெடப் பெயர;
அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல,
மல்லல் நீர்த் திரை ஊர்பு, மால் இருள் மதி சீப்ப; 5
இல்லவர் ஒழுக்கம் போல், இருங் கழி மலர் கூம்ப;
செல்லும் என் உயிர்ப் புறத்து இறுத்தந்த மருள் மாலை!
மாலை நீ,
இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்மன்;
அன்புற்றார் அழ, நீத்த அல்லலுள், கலங்கிய 10
துன்புற்றார்த் துயர் செய்தல் தக்கதோ, நினக்கு?
மாலை நீ,
கலந்தவர் காமத்தைக் கனற்றலோ செய்தாய்மன்;
நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின்கண்
அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ, நினக்கு? 15
மாலை நீ,
எம் கேள்வற் தருதலும் தருகல்லாய்; துணை அல்லை;
பிரிந்தவர்க்கு நோய் ஆகி, புணர்ந்தவர்க்குப் புணை ஆகி,
திருந்தாத செயின் அல்லால் இல்லையோ, நினக்கு?
என ஆங்கு 20
ஆய் இழை மடவரல் அவலம் அகல,
பாய் இருட் பரப்பினைப் பகல் களைந்தது போல,
போய் அவர் மண் வௌவி வந்தனர்
சேய் உறை காதலர் செய் வினை முடித்தே.

கலித்தொகை - நெய்தற் கலி 149

நிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக,
கரை சேர் புள்ளினத்து அம் சிறை படையாக,
அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப! கேள்:
கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான், விச்சைக்கண்
தப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால், 5
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்
எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்;
கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல், தமியவே தேயுமால்,
சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின்; மற்று அவன் 10
வாள் வாய் நன்று ஆயினும், அஃது எறியாது விடாதே காண்;
ஆங்கு
அனைத்து, இனி பெரும! அதன் நிலை; நினைத்துக் காண்:
சினைஇய வேந்தன் எயிற்புறத்து இறுத்த
வினை வரு பருவரல் போல, 15
துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே.

கலித்தொகை - நெய்தற் கலி 150

அயம் திகழ் நறுங் கொன்றை அலங்கல் அம் தெரியலான்
இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல, எவ்வாயும்,
கனை கதிர் தெறுதலின், கடுத்து எழுந்த காம்புத் தீ
மலை பரந்து தலைக் கொண்டு முழங்கிய முழங்கு அழல்
மயங்கு அதர் மறுகலின், மலை தலைக் கொண்டென, 5
விசும்பு உற நிவந்து அழலும், விலங்கு அரு, வெஞ் சுரம்;
இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால்,
அறம் துறந்து ஆயிழாய்! ஆக்கத்தில் பிரிந்தவர்
பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம்
பசந்து, நீ இனையையாய், நீத்தலும் நீப்பவோ? 10
கரி காய்ந்த கவலைத்தாய், கல் காய்ந்த காட்டகம்,
வெரு வந்த ஆறு என்னார், விழுப் பொருட்கு அகன்றவர்,
உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின்
உரு இழந்து இனையையாய், உள்ளலும் உள்ளுபவோ?
கொதித்து உராய்க் குன்று இவர்ந்து, கொடிக் கொண்ட கோடையால், 15
ஒதுக்கு அரிய நெறி என்னார், ஒண் பொருட்கு அகன்றவர்,
புதுத் திங்கட் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன, நின்
கதுப்பு உலறும் கவினையாய், காண்டலும் காண்பவோ?
ஆங்கு
அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த 20
பெருந் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர்
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்
மை ஈர் ஓதி மட மொழியோயே!

 
மேலும் கலித்தொகை »
temple news
150 கலிப்பாக்களை கொண்டது.ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒரு புலவராக ஐந்து புலவர்களால் பாடப்பட்டது. ... மேலும்
 
கலித்தொகை - 1. கடவுள்வாழ்த்து ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் ... மேலும்
 
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 51 சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்மணற் சிற்றில் காலின் சிதையா, ... மேலும்
 
கலித்தொகை - மருதக் கலி 91 அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம்,புரி நெகிழ் முல்லை, நறவோடு, அமைந்ததெரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar