ராமபக்தியில் சிறந்தவர் தியாகராஜர். பொருள் இல்லாமல் மிகவும் வறுமையில் வாடினார். அவருடைய கீர்த்தனைகளையும், இசை ஞானத்தையும் கேள்விப்பட்ட தஞ்சை மன்னர் சரபோஜி சன்மானம் அனுப்பிவைத்தார். தங்கத்தட்டு நிறைய பொற்காசுகளும், நவரத்தினங்களும் அவரின் வீடு தேடி வந்ததோடு அரண்மனைக்கு வரும்படி மன்னரின் சேவகர்கள் அழைத்தனர். ஆனால், பாம்பினைக் கண்டது போல தியாகராஜர் மனம் பதறினார். கல்யாணி ராகத்தில் அமைந்த நிதி சால சுகமா என்று தொடங்கும் கீர்த்தனையைப் பாடினார். ராமன் என்ற அழியாத சுகம் இருக்கும்போது, இந்த தங்க காசுகள் எனக்கு எதற்கு? என்னும் பொருளில் அப்பாடல் அமைந்தது. வீடு தேடி வந்த செல்வத்தை வேண்டாம் என்று சொல்லிய தியாகராஜர் மீது அவரது அண்ணன் ஜப்பேசன் கடும் கோபம் கொண்டார். அன்றிரவு, தியாகராஜர் வழிபட்டு வந்த ராம விக்ரஹத்தை திருவையாறில் ஓடும் காவிரிநதியில் எறிந்து விட்டார். சிலையைக் காணாமல் அழுது அரற்றினார் தியாகராஜர். கனவில் தோன்றிய ராமபிரான், காவிரியில் தான் மூழ்கிக்கிடப்பதை உணர்த்தினார். தியாகராஜர் ராமவிக்ரஹத்தை தேடி எடுத்து மகிழ்ந்தார். அப்போது கண்டேன் கண்டேன் ராமனை என்ற கீர்த்தனையைப் பாடி கட்டி அணைத்துக் கொண்டார்.