பதிவு செய்த நாள்
15
ஏப்
2013
10:04
மேட்டூர்: மேட்டூர் அணை வறண்டதால், நீருக்குள் மூழ்கியிருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம், 10 ஆண்டுக்கு பின் வெளியில் தெரிகிறது. கோபுரத்துக்குள் வைத்துள்ள சிலையில், நேற்று சூரிய ஒளி விழுந்த அற்புத காட்சி, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. மேட்டூர் அணை, 152 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியை கொண்டது. அணைக்குள் ஏராளமான கிராமங்கள் இருந்தன. அணை கட்டுமான பணியின் போது, கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர். நீர்மட்டம், 70 அடிக்கு மேல் உயரும் போது, கிராமங்களில் உள்ள சர்ச், ஜலகண்டேஸ்வரர் கோவில் நீருக்குள் மூழ்கி விடும். கடந்த, 2003ல் அணை நீர்மட்டம், 25 அடிக்கும் கீழே சரிந்த போது, ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம் முழுமையாக வெளியில் தெரிந்தது. அதன் பின், நீர்மட்டம், 50 அடிக்கு மேல் நீடித்ததால் கடந்த, 10 ஆண்டாக கோபுரம் வெளியில் தெரியவில்லை.
நடப்பாண்டு ஏற்பட்ட வறட்சியால், மேட்டூர் அணை நீரில் மூழ்கியிருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம் முழுமையாக வெளியில் தெரிகிறது. அணை கரையோர கிராம மக்கள் ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரத்தை வழிபட்டு செல்கின்றனர். தற்போது, கோபுரத்தின் உள்பகுதியில் லிங்கேஸ்வரர் சிலை வைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. நேற்று காலை கோபுரத்தின் உச்சியில் உள்ள துளை வழியாக, சூரிய ஒளிக்கதிர் உட்பகுதி லிங்கேஸ்வரர் மீது விழுந்தது. இந்த அற்புத காட்சி, சுற்றுலா பயணிகள், பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.மேட்டூர் அணைக்குள், நாயம்பாடி கிராமத்தில் இருந்த சர்ச் இரட்டை கோபுரம் தற்போது, முழுமையாக வெளியில் தெரிகிறது. 10 ஆண்டுக்கு பின், நேற்று மாலை, 4:00 மணிக்கு கொளத்தூர் அடுத்த சவோரியார் பாளையம், பூமனூர் பகுதி கிறிஸ்தவ மக்கள், பங்குதந்தை ஜெய்பெர்னாட் ஜோசப் தலைமையில், இரட்டை கோபுரத்துக்கு சென்று மழை வேண்டி திருப்பலி மற்றும் ஜெப வழிபாடு நடத்தினர்.