பதிவு செய்த நாள்
10
மே
2013
10:05
தேனி: வீரபாண்டிய மன்னன் மதுரையில் ஆட்சி புரிந்த போது, ஊழ்வினையால் தன் இரண்டு கண்களையும் இழந்தான். உடனே தன் பாவங்களை மன்னித்து அருளும்படி இறைவனை வேண்டினான். இறைவனும் அவனது கனவில் தோன்றி இன்று வீரபாண்டி தலம் இருக்கும் இடத்தை சுற்றிக்காட்டி, ""நீ வைகை கரை ஓரமாக சென்று நிம்பா ஆரணியத்தில் உமாதேவி அம்சம் பெற்ற ஸ்ரீ கவுமாரி தவமிருக்கிறார். அங்கு சென்று அவளை வணங்கு. உன் கண்கள் ஒளிபெறும் எனக்கூறி அருளினார். வீரபாண்டிய மன்னன் அதனை ஏற்று வீரபாண்டி கவுமாரியம்மனை வணங்கி ஒரு கண்ணும், கண்ணீஸ்வரமுடையாரை வணங்கி மற்றொரு கண்ணும் பெற்றான். இதனால் இத்தெய்வங்களுக்கு திருக்கோயில் கட்டி வழிபாடு நடத்தினான். ராசசிங்கன் என்ற பாண்டிய மன்னன், வைகை ஆற்றின் வழியாக வந்து கொண்டிருக்கும் போது, வீரபாண்டி கோயிலை கண்டான். இத்திருக்கோயில்களை அவனது ஆறாவது பாட்டனாரான வீரபாண்டிய மன்னன் கட்டிய விவரம் அறிந்தான். அவனும் கவுமாரியம்மனையும், கண்ணீஸ்வரமுடையாரையும் வணங்கி நற்பலன்கள் பெற்றான். கோயில்களை அவனும் புதுப்பித்தான். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடக்கிறது. தேனி மாவட்டத்தின் பெரிய திருவிழாவான இந்த விழா நடப்பு ஆண்டு, மே 14ம் தேதி வரை நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக 140 சிறப்பு பஸ்கள் மாவட்டம் முழுவதும் இருந்து இயக்கப்படுகின்றன. 1500 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பறவைக்காவடி, மயில் காவடி பால்குடம் நேர்த்திக்கடன்: தேனி:வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழாவிற்கு நேற்று வீரபாண்டியை சுற்றி உள்ள சிவலிங்கநாயக்கன்பட்டி, பள்ளபட்டி, அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி, அய்யம்பட்டி பக்தர்கள் ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து, காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை 6 மணிக்கு ஊரில் இருந்து புறப்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் குறவன் குறத்தி ஆட்டம், மானாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டத்துடன் ஊர்வலம் வந்தனர். ஆற்றில் நீராடிய பின்னர், கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி, ஆயிரங்கண்பானை, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கிடா வெட்டுபவர்களை கண்டறிந்து கிடா வெட்டி உரித்து கொடுக்க கட்டண சலுகையாக 100 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதற்கென 100க்கும் மேற்பட்டவர்கள் வீரபாண்டியில் முகாமிட்டுள்ளனர். கிடா வெட்டும் பக்தர்களிடம் கிடா வெட்டி உரித்து வெட்டி கொடுக்க இவர்கள் 100 ரூபாய் கட்டணமும், கிடா தோல் (மதிப்பு ரூ.200 முதல் ரூ.300 வரை) பெற்றுக்கொள்கின்றனர். நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக கோயிலுக்கு வந்தனர். கோயிலில் விழா தொடங்கியது முதல் தினமும் சாரல் பெய்து வருவதால் வெயில் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசுகிறது. இந்த சூழ்நிலை பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீரபாண்டியில் இன்று தேரோட்டம்: தேனி:வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவிற்காக, ஏப்., 16ம் தேதி தொடங்கியது.அப்போது முதல் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழா முக்கிய நிகழ்ச்சிகள் மே 7ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அன்றே கோயில் வீட்டில் இருந்து கோயிலுக்கு திருவாபரணப்பெட்டி கொண்டு வரப்பட்டது. மறுநாள் அதிகாலை 3 மணிக்கு, அம்மன் மின்அலங்கார தேரில் ஊருக்குள் இருந்து கோயிலுக்கு வந்தார். மாலையில் அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பட்டு மண்டகப்படி வந்தார். நேற்று வியாழக்கிழமை அம்மன் புஷ்ப பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று தேருக்கு சக்தி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருள்கிறார். மாலை 5 மணிக்கு தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று மாவட்டம் முழுவதும் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.