பதிவு செய்த நாள்
13
நவ
2013
02:11
அம் முதல்வன் அழித்தற் கடவுளே:
இனி அம் முதல்வன் யாவன்? என்ற வினா இயல்பாக எழுகிறது. அதற்கு விடையிறுப்பாராய், அம் முதல்வன் சங்கார காரணனே என உணர்த்துகிறார் ஆசிரியர். ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தியில்லை என்ற மேற்கோளில் இவ்விடை அமைந்துள்ளது.
இம் மேற்கோளில், சங்காரம் என்ற சொல் சங்காரத்தைச் செய்பவனைக் குறித்து நின்றது.
ஒடுங்கின சங்காரம் என்பது ஒடுங்குதற்கு இடமாய் நின்ற சங்காரக் கடவுள் எனப் பொருள் தந்தது.
பிறத்தற்கு இடமாய் நின்ற வீட்டினைப் பிறந்த வீடு என்றும் புகுதற்கு இடமாய் நின்ற வீட்டினைப் புகுந்த வீடு என்றும் சொல்லுகிற வழக்குப் போல, உலகமானது ஒடுங்குதற்கு இடமாய் நின்ற கடவுளை ஒடுங்கின சங்காரம் எனக் குறித்தார் ஆசிரியர்.
ஒடுக்கியவனே மீளத் தோற்றுவிப்பான்:
எது எங்கு ஒடுங்குகிறதோ அது அங்கிருந்தே தோன்றும் என்பதே முறைமை. மண்ணில் சென்று ஒடுங்கிய குடம் மீள மண்ணிலிருந்தே தோன்றும். பிற பிற பொருள்களும் தாம் தாம் ஒடுங்கிய அவ்வவ்விடங்களிலிருந்தே தோன்றும். அம்முறைக்கேற்ப உலகம் சங்கார காரணனிடத்தே ஒடுங்குதலால் அவனிடத்தினின்றே தோன்றும் என்பதாயிற்று.
இங்கே ஓர் வினா எழும். உலகம் சங்கார காரணனிடத்தில் ஒடுங்கும் என்று ஏன் கொள்ள வேண்டும். படைத்தலைச் செய்பவனாகிய சிருட்டி காரணனிடத்தில் அல்லது, காத்தலைச் செய்பவனாகிய திதி காரணனிடத்தில் ஒடுங்கும் என்று கொண்டால் என்னை என வினவலாம். அவ்வாறு கொள்ளுதல் பொருந்தாது. ஏன் பொருந்தாது என்பதைப் பார்ப்போம்.
படைத்தற் கடவுளும் காத்தற் கடவுளும் அத்தொழிலுக்கு மட்டும் உரிமையுடையவர். ஆனால் அழித்தற் கடவுளோ எல்லாத் தொழில்களையும் செய்ய வல்ல முதன்மையுடையவன். எங்ஙனம் எனில், அழித்தற் கடவுள் முற்றழிப்பைச் செய்கின்ற காலத்தில் எல்லா வுலகங்களோடும் கூட அவ்விருவரையும் அழிப்பான் என்றே கொள்ளுதல் வேண்டும். அவ்வாறின்றி அவரை அழியாது நிறுத்தி வைப்பான் எனில் அதனை முற்றழிப்பு என்று எங்ஙனம் சொல்ல முடியும்?
ஆதலால் எல்லாம் ஒடுங்கி நிற்கும் அந்நிலையில் அவன் ஒருவனே ஒடுங்காது நிற்பவன் ஆகிறான். ஒடுங்கிய உலகத்தை மீளத் தோற்றுவிக்க வேண்டிய காலத்தில், அழித்தற் கடவுளையன்றி வேறொருவர் இல்லாமையால் அவனே தோற்றுவிப்பான் என்பது சொல்லாமலே விளங்கும். இதனையே ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தியில்லை என உணர்த்தினார் ஆசிரியர்.
இதுகாறும் கூறியவற்றால், படைத்தற் கடவுள், காத்தற் கடவுள் என்போரும் முற்றழிப்புக் காலத்தில் உலகத்தோடு ஒப்ப ஒடுங்குபவரே என்பதும், அவர்களிடத்தில் உலகம் ஒடுங்கும் என்றல் பொருந்தாது என்பதும், எல்லாவற்றையும் தன்பால் ஒடுக்கியும் மீளத் தோற்றுவித்தும் நடத்துகின்ற முதல்வன் அழித்தற் கடவுளே என்பதும் நன்கு விளங்கும்.
இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்த எடுத்துக்காட்டுச் செய்யுளைக் காண்போம்.
எடுத்துக்காட்டு - 1
வெண்பா
2. இலயித்த தன்னில் இலயித்தது ஆம் மலத்தால்;
இலயித்த வாறுஉளதா வேண்டும்;- இலயித்தது
அத்திதியில் என்னின் அழியாது; அவை அழிவது
அத்திதியும் ஆதியும் ஆம் அங்கு
முற்பகுதியின் பொருள்:
ஒடுங்கிய உலகம் தான் ஒடுங்குதற்கு இடமாய் நின்ற சங்கார காரணனிடமிருந்தே மீளத் தோன்றுவதாம்.
ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றுதல் எதற்கு எனில், உயிர்களைப் பற்றியுள்ள ஆணவ மலம் நீங்கும் நிலையை அடைதற் பொருட்டேயாகும்.
அவ்வாறு தோன்றுங்கால் வேறு புதிய வுலகம் தோன்றும் என்னாமல் ஒடுங்கிய வுலகமே மீளத் தோன்றும் என்பது ஏன் எனில் எது எத்தன்மையுடையதாக நின்று ஒடுங்கிற்றோ அது அத்தன்மையுடையதாக மீளவும் தோன்றுதலையே யாவரும் எதிர்பார்க்கின்றனர். அஃதாவது, நெல்லவிதைப்போர் நெல் விளையும் என்பதை நோக்கியே அதனை விதைக்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்தபடி நெல் விளைகிறதேயன்றி, முறை பிறழ்ந்து நெல் கமுகாய் நீள்வதில்லை.
ஒடுங்கியதே மீளத்தோன்றும் என்னும் நியதி இல்லையென்றால் நெல் விதைக்க வேறொன்று விளைய வேண்டும். அங்ஙனம் ஒரு போதும் நிகழ்வதில்லை, ஆதலால் ஒடுங்கிய உலகமே மீளத் தோன்றுமன்றி வேறு உலகம் தோன்றாது என அறிதல் வேண்டும்.
பிற்பகுதியின் பொருள்:
இதுவரை கூறியபொருள் வெண்பாவின் முதற்பகுதியில் உள்ளது. பிற்பகுதி மறுப்புரையாக- மாறுபட்ட கருத்துக்கு மறுமொழியாக உள்ளது.
உலகம் சங்கார காரணனிடத்தே ஒடுங்கும் என்பதை உடன்படாமல், திதிகாரணன் ஆகிய மாயோனிடத்தில் ஒடுங்கி அவனிடத்திலிருந்தே தோன்றும் என்பார் கூறும் வழக்குரையை ஆசிரியர் இங்கு மறுக்கின்றார்.
உலகம் ஒடுங்கியது திதி காரணனிடத்தில் என்று கூறினால் அவன் சங்கார காரணன் என்றல்லவா ஆகிறான்? அவனைத் திதி காரணன் என்றால் மாறுகோள் உரையாம். திதியாகிய காத்தல் தொழிலுக்கு மட்டும் உரியவனாதல் பற்றி யன்றோ அவன் திதி காரணன் எனப்படுகின்றான்? ஆதலால் அவனிடத்தில் உலகம் ஒடுங்காது.
அந்தத் திதிக்கடவுளும் மற்றும் படைப்புக்கடவுளும் தோன்றும் இடமாகிய அச் சங்கார காரணனிடத்திலேயே அவ்விருவரோடும் கூட அனைத்து உலகமும் ஒடுங்குவதாகும்.
பதவுரை:
இலயித்தது - முன்பு ஒடுங்கியதாகிய உலகம்
இலயித்த தன்னில் - தான் ஒடுங்கி நின்ற அவ்விடத்திலிருந்தே
ஆம் - மீளத் தோன்றுவதாகும். (ஒடுங்கிய உலகமே மீளத் தோன்றும் என்று கூறுவது ஏன்? வேறு புதிய உலகம் தோன்றும் என்று கொண்டால் என்ன? என்று கேட்கலாம். இதற்கான விடை வருமாறு:)
இலயித்தவாறு உளதா வேண்டும் - முன்பு எவ்வாறு நின்று ஒடுங்கிற்றோ அவ்வாறு மீண்டும் உண்டாதலையே யாவரும் விரும்புவர்.
(நெல் விதைத்தால் நெல் விளையும் என்று எதிர் நோக்கியே அதை விதைக்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்தபடி, ஒடுங்கிய நெல்லே முளைத்துத் தழைத்து விளைகிறது. வேறொன்று விளையவில்லை. அதுபோல, ஒடுங்கிய உலகமே மீளத்தோன்றும் அன்றி வேறு புதிய உலகம் தோன்றாது என அறியலாம்.
இனி, ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றுவது எதற்காக? என வினவலாம். இதற்கான விடை வருமாறு:)
மலத்தால் - உயிர்களைப் பற்றியுள்ள ஆணவ மலம் நீங்கும் நிலையை அடைதல் பொருட்டு உலகம் மீளத் தோன்ற வேண்டியுள்ளது.
(உலகம் தான் ஒடுங்கிய இடத்தினின்று மீளத் தோன்றும் என முதலடியில் கூறப்பட்டது. அஃது ஒடுங்கிய இடம் எது? சிவபெருமான் அழித்தற் கடவுள் என்பது யாவரும் அறிந்தது. அவனே அனைத்தையும் அழிப்பவன். முற்றழிப்பைச் செய்து இறுதியில் அவன் ஒருவனே எஞ்சி நிற்பவன். அவனிடத்திலேயே எல்லாம் ஒடுங்கி நிற்கும். ஆகவே சங்காரக் கடவுளாகிய அவனே உலகம் ஒடுங்குதற்கு இடமாவான் என்பதும், அவனிடத்திருந்தே உலகம் மீளத் தோன்றும் என்பதும் பெறப்படும்.
எது எங்கே ஒடுங்கிற்று அது அங்கு நின்றே தோன்றும் என்பது நியதி. குடம் மண்ணில் சூக்குமமாய் ஒடுங்கியுள்ளது. அது தான் ஒடுங்கிய இடமாகிய மண்ணிலிருந்தே தோன்றும். அதுபோல, உலகம் தான் ஒடுங்கிய இடமாகிய சங்காரக் கடவுளிடமிருந்தே தோன்றும். என்பதே முறை. ஆனால் மால்நெறியினர் இதனை உடன்படாமல், உலகம் மாயோனிடத்தில் ஒடுங்கும் என்றும் அவனிடத்திலிருந்தே தோன்றும் என்றும் வழக்கிடுவர். அதனை மறுத்தற்கு இனி வரும் பகுதியைச் கூறுகிறார் ஆசிரியர்.)
இலயித்தது அத்திதியில் என்னின் - உலகம் ஒடுங்கியது காத்தற் கடவுளாகிய அவனிடத்தில் என்று கூறினால்
அழியாது - அவன் காத்தல் தொழிலுக்கு மட்டும் உரியவனாதல் பற்றி அல்லவா அவனைக் காத்தற் கடவுள் என்று குறிப்பிடுகின்றர். ஆகவே அழித்தல் தொழிலுக்கு உரியவனாகாத அவனிடத்தில் உலகம் ஒடுங்காது.
அவை அழிவது அத்திதியும் ஆதியும் ஆம் அங்கு - உலகத் தொகுதி முழுவதும் ஒடுங்குவது, மேற்கூறிய காத்தற் கடவுளும் மற்றும் படைப்புக் கடவுளும் தோன்றும் இடமாகிய அச்சங்காரக் கடவுளிடத்தேயாகும். மேலும் அவை தோன்றுவதும் அவனிடத்திலிருந்தே யாகும்.
விளக்கம்
மும்மூர்த்திகளுள் இருவரை மட்டுமே இங்குக் குறிப்பிட்டாலும் மூன்றாமவனாகிய உருத்திரனையும் கொள்ள வேண்டும், ஒரு பகுதியை மட்டும் அழித்தலைச் செய்யும் ஏகதேச சங்கார காரணனாகிய அவ்வுருத்திரனும் இங்குக் கூறப்பட்ட படைப்புக் கடவுளாகிய பிரமனும் காத்தற் கடவுளாகிய மாயோனும் போலவே மகாசங்கார காரணனிடத்தில் ஒடுங்கி நிற்பான் என்பதாம்.
செய்யுளின் பிற்பகுதியில் உள்ள திதி, ஆதி என்ற சொற்கள் திதியை (காத்தலைச்) செய்யும் கடவுளையும், ஆதியை (படைத்தலைச்) செய்யும் கடவுளையும் குறித்தன.
மகாசங்கார காரணனாகிய முதல்வன், பிறர் எல்லாம் ஒடுங்கவும், தான் ஒருவனேயாய்த் தனித்து நிலைபெற்று நிற்பான் என்பதை
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்:
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே:
ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர்:
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.
என வரும் தேவாரத்தால் அறியலாம்.
மூன்று காரணங்கள்:
காரியப் பொருளுக்கு மூன்று காரணங்கள் இன்றியமையாதன. அவை முதற் காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் என்பன. குடம் என்னும் காரியத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு மண் முதற் காரணம்: சக்கரம், கழி முதலிய கருவிகள் துணைக்காரணம்; வனைவோன் நிமித்த காரணம்.
காரியப் பொருள்கள் ஒடுங்கும் காலத்தில் தத்தம் முதற் காரணத்தில் ஒடுங்குமேயன்றிப் பிறகாரணங்களில் ஒடுங்குதல் இல்லை. குடம் தன் முதற்காரணமாகிய மண்ணில் ஒடுங்குமன்றிப் பிறவற்றில் ஒடுங்காது. பிற காரியங்களும் அவ்வாறே யாம்.
உலகமாகிய செயப்படு பொருளுக்கு முதற்காரணம் மாயை என்பது, துணைக்காரணம் இறைவனது சத்தியும், உயிர்களது வினையும். நிமித்த காரணம் இறைவன்.
உலகம் ஒடுங்கும் இடம்:
உலகம் ஒடுங்குங் காலத்தில் தன் முதற் காரணமாகிய மாயையில் ஒடுங்குமன்றிப் பிறவற்றில் ஒடுங்காது.
அங்ஙனமாகவும், உலகம் நிமித்த காரணமாகிய சங்காரக் கடவுளிடத்தே ஒடுங்கும் என்று சொல்வது எவ்வாறு பொருந்தும் என்னும் ஐயம் நிகழ்தல் இயல்வே இவ்விடத்தில் ஒன்றை அறிந்து கொண்டால் அவ்வையம் தீர்ந்து விடும்.
கிழங்கிலிருந்து தோன்றிய தாமரையை, அக் கிழங்கிற்கு ஆதாரமாய் உள்ள சேற்றினின்றும் தோன்றியதாகச் சொல்லுகிறோம். சேற்றில் முளைத்த செந்தாமரை என்னும் வழக்கு இதனைக் காட்டும்.
நிலத்திற் கிடந்த வித்து விளைந்தபொழுது அவ்வித்திற்கு ஆதாரமாய் உள்ள நிலம் விளைந்தது எனக் கூறுகிறோம்.
அம்முறையிலேயே உலகம் சங்கார காரணனிடத்தில் ஒடுங்கும் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் உலகம் ஒடுங்குவது தனது முதற் காரணமாகிய மாயையிலேதான். அது மீளத்தோன்றுவதும் மாயையிலிருந்தே என்பதை அறிதல் வேண்டும். ஆயினும் மாயையிலே தோன்றி, மீண்டும் மாயையிலே ஒடுங்குவதாகிய உலகத்தை அம்மாயைக்கு ஆதாரமாய் உள்ள சங்கார காரணனிடத்தே தோன்றி மீண்டும் அவனிடத்தே ஒடுங்குவதாகக் கூறுவதும் முறைமையேயாம்.
எடுத்துக்காட்டு - 2
வெண்பா
3. வித்துஉண்டா மூலம் முளைத்தவா, தாரகமாம்
அத்தன் தாள் நிற்றல் அவர் வினையால்- வித்தகமாம்;
வேட்டுவனாம் அப் புழுப்போல் வேண்டுருவைத் தான்கொடுத்துக்
கூட்டானே மண்போல் குளிர்ந்து.
முன் இரண்டடிகளின் பொருள்:
விதையானது நிலத்தினுட் பொருந்திக் கிடப்பது போல முதற் காரணமாகிய மாயை தனக்கு நிலைக்களமான சிவனது சத்திக்குள் பொருந்தி நிற்கிறது. நிலம் குளிர்ந்தபொழுது அவ்விதையினின்றும் முளை தோன்றுவது போல, அச் சிவசத்தி விரும்பிய பொழுது அம் மாயையினின்றும் உலகம் தோன்றும்.
மாயை, இறைவனது சத்தியை நிலைக்களமாகக் கொண்டு நிற்பதால், அம்மாயை இறைவன் விரும்பிய வழியே உலகத்தைத் தோற்றுவிக்குமேயன்றித் தானே உலகத்தைத் தோற்றுவிக்காது என்பதை உணர்தல் வேண்டும்.
உவமையைப் பொருளோடு பின்வருமாறு பொருத்திக் கொள்ள வேண்டும்
உவமை - பொருள்
வித்து - மாயை
முளை - உலகம்
நிலம் - இறைவனது சத்தி
இறைவனது சத்தியை அவனது திருவடியாகச் சொல்லுதல் மரபு ஆதலின் அத்தன்தாள் என்றார்.
இறைவன் உலகத்தைப் படைக்குங்கால் முழுவதும் நல்லனவே அமையும் படியாகப் படைக்காமல், நல்லனவும் தீயனவும் கலந்து விளங்கும்படி படைக்கக் காரணம் என்ன? என்பதற்கு விடையாக அவர் வினையால் என்றார். உயிர்கள் செய்கிற வினைகள் நல்லனவேயாக அமையாமல் நல்வினையும் தீவினையுமாக விரவி அமைவதால், அவற்றிற்கு ஏற்றவாறு நன்மை தீமைகளாகிய பயன்களை அவ்வுயிர்கள் பெறுதற்பொருட்டு இவ்வுலகு நல்லனவும் தீயனவும் கலந்து அமையும் படியாகப் படைக்கப்பட்டது என்பது கருத்து.
பின் இரண்டடிகளின் பொருள்:
குளவியாக வேண்டும் என விரும்புகின்ற மகவாகிய புழுவிற்கு அதன் தாயாகிய குளவி வேண்டுவனவற்றைச் செய்து அதற்கு அவ்வுருவத்தைக் கொடுத்தல் போல, இறைவனும் உயிர்கள் தம்தம் வினைக்கு ஏற்றபடி அடைய விரும்பும் பிறப்பைக் கொடுத்து, அப் பிறப்பில் அவை அடையத் தக்க பயன்களையும் கூட்டுவிப்பான்.
வேட்டுவன்- குளவி; வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் என்னும் திருமுறைத் தொடருக்கு விளக்கமாக இப்பகுதி அமைகின்றது.
பதவுரை:
3. வித்து - விதை
உண்டா - தனக்கு இடமாகிய நிலத்தினுள் பொருந்தி யிருக்க,
மூலம் - முளை
முளைத்தவா - அதிலிருந்து தோன்றிய பான்மை போல
தராகம் ஆம் - (உலகிற்கு முதற்காரணமாகிய மாயை) தனக்கு நிலைக்களமான
அத்தன் தாள் - இறைவனது சத்தியினுள்
நிற்றல் - பொருந்தி நிற்றலால்
மண் போல் - (மேற்கூறிய விதை முளைக்கும்படியாக) நிலம் குளிர்ந்தாற் போல
குளிர்ந்து - (அச்சத்தி, தன்னிடமுள்ள மாயையினின்றும் உலகம் தோன்றும்படியாக) விரும்புதலைச் செய்த பொழுது
அவன் வினையால் - அவ்வவ் வுயிர்களின் வினை காரணமாக
வித்தகம் ஆம் - பல்வேறு வடிவினதாய் உள்ள, மயக்கினைத் தருவதாய் உள்ள இவ்வியத்தகு உலகம் அம்மாøயியினின்றும் விரிந்து தோன்றும்.
வேட்டுவன் ஆம் - (குளவி பிறக்கும் பொழுது புழுவாகப் பிறக்கும். அது பின் வளர்ந்து குளவியாகும். அவ்வாறு) குளவியாக வேண்டும் என விரும்புகின்ற
அப் புழுப் போல் - மகவாகிய அப்புழுவுக்குத் தாயாகிய குளவி அஃது அங்ஙனம் ஆதற்கு வேண்டுவனவற்றைச் செய்து கொடுத்தல் போல
வேண்டு உருவை - உயிர்கள் தம் வினை காரணமாக வேண்டுகின்றவற்றை
தான் கொடுத்துக் கூட்டானே - (இறைவன்) அவை வேண்டியவாறே படைத்துக் கொடுக்க மாட்டானோ?
இவ்வாறு உயிர்களுக்காக உலகைப் படைத்து, அவை விரும்பும் பிறப்பைக் கொடுத்து, அப் பிறப்பில் நுகரத் தக்க பயன்களையும்கூட்டு விக்கின்ற அக்கடவுள் அத் தொழில்களால் இளைப்பும், சலிப்பும், மகிழ்ச்சியும், வருத்தமும் போன்ற விகாரங்களை (நிலை வேறுபாடுகளை) அடைவானோ என்னும் ஐயத்தை அடுத்து வரும் எடுத்துக் காட்டுச் செய்யுளால் போக்குகிறார்.
எடுத்துக்காட்டு -3
வெண்பா
4. நோக்காது நோக்கி நொடித்து அன்றே காலத்தின்
தாக்காது நின்று உளத்தின் கண்டு இறைவன்- ஆக்காதே
கண்ட நனவுணர்வில் கண்ட கனவு உணரக்
கண்டவனின் இற்று; இன்றாம் கட்டு.
இதன் பொருள்:
காலத்தை இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்றெல்லாம் வேறுபடுத்தி வழங்கினாலும் உண்மையில் கால தத்துவம் சிறிதும் வேறுபாடின்றியே நிற்பதாகும்; அவ்வாறு நின்று பொருள்களை ஆக்குதல், அழித்தல் முதலியவற்றைச் செய்யும். அக்கால தத்துவம் போல இறைவனும் தன்னியல்பில் சிறிதும் வேறுபடாமலே நின்று படைத்தல் முதலிய தொழில்களைச் செய்வான்.
அவன் உலகத்தைப் படையாமல் படைப்பான்; காவாமல் காப்பான்; அழிக்காமல் அழிப்பான். இத்தொழில்களால் அவன் கட்டுறுதல் இல்லை; திரிபு எய்தலும் இல்லை. இஃது எது போன்றது எனில், கற்ற நூலின் பொருளும் சொல்லும் நினைவில் தோன்றி ஒடுங்கினாலும் அதனால் தன் தன்மை திரியாத உயிரறிவின் இயல்பு போன்றது எனலாம்.
மற்றும், விழிப்பு நிலையில் முன்பு தான் கண்ட கனவை உணர்ந்தபோது அக்கனவினால் எவ்வித மாற்றமும் அடையாதவனது தன்மை போன்றது என்றும் கூறலாம்.
பதவுரை:
காலத்தின் - (காலதத்துவம் இறந்த காலம் என்றும், நிகழ்காலம் என்றும், எதிர்காலம் என்றும் இன்னும் பல பிரிவாகவும் வேறுபட்டாலும் உண்மையில் வேறுபடாது ஒன்றாயே நிற்கும்) அக்காலத்தும் போல,
இறைவன் - முதல்வன்
தாக்காது நின்று - தன் நிலையில் சிறிதும் வேறுபடாது நின்று
ஆக்காதே கண்டு - படையாமல் படைத்து
நோக்காது நோக்கி - காவாமல் காத்து
(நொடியாது) நொடித்து -அழிக்காமல் அழித்து நிற்றலால் (அத்தொழில்களைச் செய்தும்)
கட்டு இன்றாம் - அவன் கட்டு இல்லாதவன் ஆவான்.
(முதல்வன் என்றும் விகாரம் எய்துதல் இன்றி நிருவிகாரியாகவே நிற்பான் என்பது கூறப்பட்டது.
இறைவனது இத்தன்மைக்கு மேலும் இரண்டு உவமைகள் கூறுகின்றார் ஆசிரியர்.
அவனது தன்மை எது போலும் எனின்,)
உளத்தின் - ஒருவன் கற்ற நூலினது பொருளும் சொல்லும் அவனது நினைவிற்கு வரும் பொழுது அதனால் தன் தன்மை திரியாத உயிரறிவின் தன்மை போல்வதும்
கண்ட நனவுணர்வில் கண்ட கனவு உணரக் கண்டவனின் - விழிப்புணர்வில் முன்பு தான் கண்ட கனவை உணர்ந்தபோது அக்கனவினால் மாற்றம் எய்தாத அவனது தன்மை போல்வதும் ஆகிய
இற்று - இத்தன்மைத்து.
விளக்கம்
இச் செய்யுளில் மூன்று உவமைகள் வந்துள்ளன. முதல் உவமை காலத்தின் என்பது. இரண்டாவது உவமை உளத்தின் என்பது மூன்றாவது உவமை நனவுணர்வில் கண்ட கனவுணரக் கண்டவனின் என்பது.
நோக்குதல் - காத்தல்; நொடித்தல் - அழித்தல். ஆக்காதே கண்டு, நோக்காது நோக்கி, நொடியது நொடித்து என அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
நினைப்பு அளவில் செய்தல்:
இறைவன் படையாமல் படைத்து, காவாமல் காத்து, அழிக்காமல் அழித்து நிற்பான் என்பதன் பொருள், அத்தொழில்களையெல்லாம் அவன் கருவிகளைக் கொண்டு வருந்திச் செய்யாது, இவ்வாறு ஆகுக என எண்ணுகிற தன் நினைப்பு மாத்திரத்தாலே செய்வான் என்பதாம்.
கருவிகளைக் கொண்டு செய்வோரே அக் கருவிகள் வாய்க்காத போதும், வாய்த்த இடத்தும் அக் கருவிகள் நன்கு செயற்படாத போதும், அவற்றால் பல முட்டுப்பாடுகளை எய்தி, வருத்தம், சோர்வு முதலிய மாற்றங்களுக்கு உட்படுவர். இறைவன் அவரைப்போலக் கருவியாற் செய்யாது, சங்கற்பமாகிய நினைப்பு மாத்திரத்தால் செய்வான் ஆதலின் அவன் எவ்விதமாற்றமும் எய்தான் என்பதை அறிதல் வேண்டும்.
மூன்றாம் கூறு
அந்தம் ஆதி என்ற மூன்றாம் அடியின் விளக்கமாக இம்மூன்றாம் கூறு அமைகிறது.
பொழிப்புரை:
அத் தொடரின் கருத்தை உணர்த்தும் வகையில் ஆசிரியர் செய்த பொழிப்புரை வருமாறு:
இனி சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் சுட்டுணர்வின்றி நின்ற சங்காரத்தின் வழியில்லது சுதந்திரம் இன்றி நிற்றலான் சங்காரமே முதல்- என்றது.
இதன்கண் சங்காரமே முதல் என்பது மேற்கோளும், முன்னே உள்ளது அதனை நிறுவுவதற்குக் கூறப்படும் ஏதுவுமாக அமைதல் காணலாம்.
மேற்கோள் விளக்கம்:
முதல்வர் பலர் என்பதை மறுத்தல்:
புராணங்களின் அடிப்படையில் சிலர் பின்வருமாறு கூறுவர். : நூல்களில் மும் மூர்த்திகள் முதலிய கடவுளர் பலர் பேசப் பெறுகிறார்கள். வெவ்வேறு தேவர்களது பெயர்களும், அவர்களுக்கு ஏற்ற வழிபாட்டு முறைகளும் சொல்லப் பெறுகின்றன. ஆகவே உலகிற்கு முதல்வர் பலர் உளர் எனக் கொள்ளுதலே பொருத்தமாகும். மேலும் தேர் செய்தல் முதலிய தொழில்களை ஒருவன் மட்டுமே செய்வதில்லை. பலர் கூடியே செய்கின்றனர். அப்படியிருக்க, அத்தேரினும் மிகப் பெரிய தாய், மிகப் பலவகையாய் அமைந்த இவ்வுலகைப் படைத்தல் முதலிய தொழில்களை ஒருவனே செய்வான் எனல் பொருந்தாது. பலர் கூடியே செய்வர்.
இக் கூற்றை மறுத்து சங்கார காரணன் ஒருவனே முதல்வன்; ஏனையோர் முதல்வர் அல்லர் என்பாராய்,
சங்காரமே முதல்
என மேற்கோளை அமைக்கின்றார் ஆசிரியர்.
சங்காரம் என்பது சங்கார காரணனைக் குறித்தது. சங்காரமே என்பதில் உள்ள ஏகாரம் முதல்வனாம் தன்மையை ஏனையோரினின்றும் பிரித்தது. இதனால் அவர்கள் முதல்வர் அல்லர் என்பது பெறப்பட்டது.
ஏது - விளக்கம்
இனி, சங்கார காரணன் ஒருவனே முதல் என்பதனை நிறுவுதற்குக் கூறும் ஏதுவை நோக்குவோம்.
பிற கடவுளர் முதல்வன் வழியில் நிற்றற்கு உரியர்
ஏதுவில் சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் என்றது உயிர்த் தொகுதியைக் குறிக்கும். உயிர்கள் சுட்டுணர்வு உடையன. சுட்டுணர்வாவது, பொருள்களை அறியுங்காலத்தில் ஒரு சேர அறிய மாட்டாது, ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே அளவிட்டு அறிதல் ஆகும். இது பற்றியே உயிரறிவு சிற்றறிவு எனப்படுகிறது.
இதற்கு மாறாக, இறைவனது அறிவோ எல்லாவற்றையும் ஒரு கணத்தில் ஒருங்கே அறிந்து நிற்கும் பேரறிவாகும்; அவ்வறிவு வியாபக அறிவு என்றும், முற்றறிவு என்றும் சொல்லப்படும். அத்தகைய அறிவு அவன் ஒருவனுக்கே உண்டு.
சிற்றறிவுடைய உயிர்கள் தனித்து நிற்கும் சுதந்திரம் உடையன அல்ல; பிற கடவுளர் எல்லாம் இந்த உயிர் இனத்தவரே. ஆதலால் முற்றறிவுடைய முதல்வன் வழிப்பட்டே நிற்றற்கு உரியவர்.
தேர் முதலியவற்றைச் செய்யும்போது அவரவரும் தம்தம் போக்கில் சுதந்திரமாகச் செய்வாரல்லர்; ஒருவனைத் தலைவனாகக் கொண்டு அவன் ஏவியவாறே செய்வர். அவ்வாறே பிற கடவுளரும், சங்கார காரணன் ஒருவனே தலைவனாக, அவது ஆணை வழி நின்றே தத்தம் தொழில்களைச் செய்வர் என்பது புலனாகும்.
இவ்வேதுவினால் சங்கார காரணன் ஒருவனே முதல் என்ற கருத்து நிலைநாட்டப் பெற்றமை காணலாம்.
இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் ஆசிரியர் எடுத்துக்காட்டுக் கூறுகின்றார்.
எடுத்துக்காட்டு
வெண்பா
5. ஒன்றலா ஒன்றால் உளதாகி நின்றவாறு
ஒன்றலா ஒன்றில் அவை ஈறாதல்- ஒன்றலா
ஈறே முதல்; அதனின் ஈறலா ஒன்றுபல
வாறே தொழும்பு ஆகும் அங்கு.
இதன் பொருள்:
உயிர்த்தொகுதி யாவும் ஒப்பற்ற ஒரு முதல்வனால் உடம்போடு கூடித் தோற்றம் எய்தி, நிலைபெற்றுப் பின் அவ்வொருவனால் இறுதியை எய்தும். இறுதியைச் செய்யும் ஒருவனாகிய அந்தச் சங்கார காரணனே முதல் ஆவதன்றிப் பிறர் முதல் ஆகார் என்பது மூன்றாம் அடியில் ஈறேமுதல் என்பது வரை உள்ள பகுதிக்குப் பொருளாகும்.
இவ்விடத்தில் ஓர் ஐயப்பாடு நிகழலாம். அஃதாவது உயிர்கள் சுட்டுணர்வு உடையனவாய், சுதந்திரமின்றி நிற்றலால் அவை முதற் கடவுள் ஆகமாட்டா என்றது பொருந்தும். ஆயின் கட்டுநிலை நீங்கி முத்தி பெற்ற போது அவை சுட்டுணர்வு நீங்கி இறைவனைப் போல வியாபகவுணர்வைப் பெற்று நிற்கும். அந்நிலையில் அவை இறைவனோடு ஒப்ப முதல்வராய் நின்று, இறைவன் செய்யும் தொழிலையெல்லாம் செய்யும். ஆகவே உலகிற்குப் பல முதல்வர் உள்ளனர் எனக் கொண்டால் என்ன? என்பதே அவ் ஐயம். அதற்கான விடை பிற்பகுதியில் கூறப்படுகிறது.
அவ்வொரு தனி முதல்வனைப் போல அழிவில்லாததாகிய உயிர் முத்தி பெற்ற அவ்விடத்தும் அம்முதல்வனுக்கு அடிமையேயாய் நிற்கும் என்பதாம்.
பதவுரை:
அவை - உயிர்த் தொகுதியாவும்
ஒன்றலாஒன்றல் - அத்தொகுதியுள் ஒன்று எனப்படாத, ஒப்பற்ற தனிப்பொருளாகிய கடவுளால்
உளதாகி - உடம்போடு கூடித் தோற்றத்தை எய்தி
நின்றவாறு - நிலை பெற்றவாறே
ஒன்றலாஒன்றில் - அக்கடவுளிடத்தில்
ஈறாதல் - ஒடுக்கத்தை அடைதலால்
ஒன்றலா ஈறே - மேற்கூறியவாறு உயிர்த்தொகுதியுள் ஒன்றாகாது அவ் உயிர்களைத் தோற்றுவித்து நிறுத்திப் பின் அவற்றிற்கு இறுதியை உண்டாக்குகிற சங்கார காரணனாய் உள்ள ஒருவனே
முதல் - உலகிற்கு முதற் கடவுள். (இதுவரையில் உலகை நடத்துதற்கு முதற் கடவுளர் பலர் உள்ளனர் என்பார் கூற்றை மறுத்து, அவர்களெல்லாம் உயிர்களே என்றும், அவர்களைத் தோற்றுவித்து நிறுத்திப் பின் இறுதியை எய்துவிப்பவனாகிய சங்காரக் கடவுள் ஒருவனே முதற்கடவுள் ஆவான் என்றும் கூறப்பட்டது).
(இனி, பாசத்தின் நீங்கி முத்தி பெற்ற உயிர்கள் முதற் கடவுளோடு ஒப்ப நின்று அவன் செய்யும் தொழிலையெல்லாம் செய்யும் என்பார் கூற்று மறுக்கப்படுகிறது)
அதனின் ஈறு அலாஒன்று - அம் முதற்கடவுள் போல அழிவின்றி நிற்பதாகிய உயிர்
(அழிவின்மை என்ற அளவில் முதல்வனோடு ஒப்பதாயினும்)
அங்கு - முத்தி பெற்ற அவ்விடத்தும்
பலவாறே தொழும்பு ஆகும் - பல வகையானும் அம் முதற் கடவுளுக்கு அடிமையாய் நிற்குமேயன்றிச் சுதந்திரம் உடையதாகாது.
விளக்கம்
ஒன்றலா ஒன்று என்பது உயிர் வகைகளுள் ஒன்றாகாத ஒப்பில்லா முதல்வன் எனப் பொருள்படும்.
இறைவனோடு ஒப்பார் ஒருவரும் இல்லாமை பற்றியே அவனை ஒருவன் என்று நூல்கள் குறிப்பிடும். ஒருவன் என்னும் ஒருவன் காண்க என்பது திருவாசகம்.
சங்காரமே முதல் என்று மேற்கோளில் கூறியது போலவே இங்கும் ஈறே முதல் என்றார்.
உயிர் இறைவனுக்கு அடிமையாய் நிற்றல்:
உயிர்கள் ஒரு காலத்தில் தோன்றியன அல்ல; இறைவனால் படைக்கப்பட்டனவும் அல்ல. இறைவன் என்று உண்டோ அன்றே உயிர்களும் உள்ளன; இறைவனைப் போலவே அழிவின்றி உள்ளன. உயிர் உடம்போடு கூடுதலே பிறத்தல் என்றும், உடம்பை விட்டு நீங்குதலே இறத்தல் என்றும் கூறப்படும். ஆகவே அழிவு என்பது உடம்பிற்கேயன்றி உயிருக்கு இல்லை.
அழிவு இன்மை என்ற தன்மையில் உயிர் இறைவனோடு ஒப்பதாயினும் பிற தன்மைகளில் எல்லாம் அஃது இறைவனுக்கு அடிமையேயாக நிற்கும். எவ்வாறு என்பதை நோக்குவோம்.
உயிர் இறைவனைப் போல அறிவுப் பொருளாயினும் அது தானாக அறியும் திறனுடையது அன்று; இறைவன் அறிவிக்கவே எதையும் அறியும்; அவ்வாறே இறைவன் செலுத்தவே அது செயற்படும். எனவே உயிரினது அறிவும் செயலும் இறைவனைச் சார்ந்தே விளங்குவனவாகும்.
இருளில் உள்ள கண் அவ்விருளை நீக்கிக் கொள்வதற்குச் சூரியவொளி வேண்டும்; பின் பொருளைக் காண்பதற்கும் சூரியவொளியின் உதவி வேண்டும். அதுபோல, உயிர் தன்னைப் பிணித்துள்ள அறியாமையாகிய இருளை நீக்கிக் கெள்வதற்கு மட்டுமின்றி, இறைவனைக் கண்டு அனுபவிப்பதற்கும் இறைவனது உதவி இன்றியமையாததாகும். இவ்வாறு பல வகையிலும் உயிர் இறைவனுக்கு அடிமையாயே நிற்கும் என்பதை உணர்த்துதற்கு அதனின் ஈறலா ஒன்று பலவாறே தொழும்பாகும் என்றார்.
அங்கு என்பது முத்தி நிலையைக் குறித்தது. முத்தி நிலையில் பேரின்பத்தை அனுபவித்தலாகிய அச்செயலுக்கு மட்டும் உரியதாய் நிற்குமன்றி, இறைவனைப் போலப் படைத்தல் முதலிய தொழில்களைச் செய்வதற்கு அதற்கு உரிமையில்லை என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.
முதற் நூற்பா முடிந்தது