Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவஞானபோதம் பகுதி-2
முதல் பக்கம் » சிவஞானபோதம்
சிவஞானபோதம் பகுதி-1
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 நவ
2013
02:11

நூல்முகம்: இவ்வுலகம், முதலில் சில பக்கங்களும் முடிவில் சில பக்கங்களும் இல்லாத நிலையில் கிடைத்த ஒரு சுவையான புதினம் போன்றது.

இடைப்பகுதியில் உள்ள கதைப் போக்கினை வைத்தே அதன் தொடக்கம் இன்னதாக இருக்கலாம் என்றும் இப்படித்தான் இக்கதை முடியும் என்றும் உணர்ந்து சொல்லலாம் அல்லவா? அதுபோல, நமக்குக் கிடைத்துள்ள இவ்வுலகின் அமைப்பையும் இதன் தன்மையையும் கொண்டே, இவ்வுலகின் முதலும் முடிவும் இவ்வாறாம் எனவும், இது வந்த நோக்கம் இன்னது எனவும், இதனை ஆக்கியோன் இயல்பு இது எனவும், இதனால் பயன்கொள்ளும் நமது இயல்பு இது எனவும், இதனால் அடையத் தக்க முடிந்த பயன் இது எனவும் ஆராய்ந்து சொல்லுதல் கூடும்.

அவ்வாறு ஆய்ந்து உணர்ந்து சொல்லும் நூல்களே தத்துவ நூல்களாகும்.

சிவஞானபோத நூலின் சிறப்பு

இந்நாட்டில் தோன்றி வழங்கி வரும் தத்துவத்துறை நூல்களுள் தலைசிறந்த அறிவுநூலாக விளங்குவது சிவஞான போதம் ஆகும். இந்நூல் அளவிற் சிறியது; சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடையது; அளக்கலாகா மலையையே தன்னுள் அடக்கிக் காட்டும் ஆடி போல அறிவு நூல்களின் பொருளனைத்தையும் தன்னுள்ளே அடங்கக் கொண்டு நிற்பது; சித்தாந்த சைவத்தின் முப்பொருள் உண்மைகளை எடுத்து முறைப்படுத்தி வழங்குவது.

சிவஞான போத நூலுக்கு முன்னரே ஞானாமிர்தம் போன்ற சிறந்த சித்தாந்த நூல்கள் தோன்றியிருந்தனவாயினும், அவையெல்லாம் சித்தாந்தப் பொருளை முழுமையாக எடுத்துக் கொண்டு தத்துவ நூலுக்குரிய ஆய்வு முறையில் மேற்கோள் ஏதுக்களுடன் நூற்பா வடிவில் அமைத்துத் திட்ப நுட்பமுற விளக்கிச் செல்லும் போக்கினை உடையன அல்ல. அதனால் அம்முறையில் அமைந்த சிவஞான போதம் சித்தாந்த முதல் நூல் எனப் போற்றப் பெறுகின்றது. இந்நூலை முறையாக உணர்ந்தவர் சித்தாந்தத்தை முழுமையாக உணர்ந்தவராவார்.

நூல் ஆசிரியர்


இந்நூலை அருளிச் செய்த ஆசிரியர் மெய்கண்டார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் திருவெண்ணெய்நல்லூரில் அருளாசானாய் விளங்கியவர்.

மெய்கண்டார் என்பது அவருக்கு வழங்கும் சிறப்புப் பெயராகும். பொய்யைப் பொய் என்று கண்டு நீக்கி மெய்யைக் கண்ட காரணத்தால் அச்சிறப்புப் பெயரைப் பெற்றார். அவரது இயற் பெயர் சுவேதனப் பெருமாள் என்பது.

அவருக்கு மாணவராகத் திகழ்ந்து நூல் இயற்றியவர் இருவர். ஒருவர் துறையூர் அருள்நந்தி சிவனார். அவர் தம் ஆசிரியர் செய்தருளிய முதல் நூலுக்கு வழிநூலாகச் சிவஞான சித்தியார் என்னும் பெருநூலையும், இருபா இருபஃது என்னும் சிறுநூலையும் செய்தனர். மற்றவர் திருவதிகை மனவாசகம் கடந்தார் என்பவர். அவர் உண்மை விளக்கம் என்னும் நூலைச் செய்தார்.

இவ்விரு பெருமக்களும் தம் ஆசிரியரின் சிறப்பினைத் தம் நூலுள் இனிது விளங்க எடுத்துக் காட்டியுள்ளனர். மானிட உருவில் வந்த சிவம் என்றும், சிவஞானக் கதிரோன் என்றும், மெய் காட்டும் வித்தகர் என்றும் வியந்து போற்றியுள்ளனர்.

நூலின் பெயர்: ஆசிரியர் மெய்கண்டார் இந்நூலின் பெயர் இது என்று எங்கும் சுட்டவில்லை. அவரது மாணவராகிய அருள்நந்தி சிவம் தம் ஆசிரியப்பிரானாகிய மெய்கண்டாரையும் அவரது நூலையும் தம் நூலிற் குறிப்பிடுகிறார்; ஆயின் நூற்பெயரைக் கிளந்து கூறாமல் மெய்கண்டான் நூல் என்றே கூறிச் செல்கிறார்.

அருள் நந்தி சிவனாரின் மாணவருக்கு மாணவராய் வந்த உமாபதி சிவனார் சிவப்பிரகாசம் என்னும் சார்பு நூலைச் செய்தார். அவரே அந்நூலின் பாயிரத்தில் தெரித்த குரு முதல்வர் உயர் சிவஞானபோதம் செப்பினர் என இந்நூற் பெயரை எடுத்தோதினார். சிவஞான போதம் என்பது காரணப் பெயர். அப்பெயரில் சிவம், ஞானம், போதம் என்னும் மூன்று சொற்கள் உள்ளன. ஞானம் என்பது அறிவு. அறிவு மூன்று வகையாய் நிகழும். அவை ஐயம், திரிபு, உண்மை என்பன. ஒரு பொருளை இதுவோ அதுவோ என இரட்டுற அறிதல் ஐயமாய் அறிதலாகும். ஒன்றை மற்றொன்றாக மாறி அறிதல் திரிபாய் அறிதலாகும். இவ்விரு குற்றமும் இன்றி ஒரு பொருளை உள்ளவாறு அறிதலே உண்மையாய் அறிதலாகும். உண்மையறிவே ஞானம் எனப்படும்.

உலகிற்கு முதலாகிய கடவுளை முதற்பொருள் என்றும் மெய்ப்பொருள் என்றும் கூறுதல் பொதுப்படக் கூறும் வழக்கமாகும். சிவம் என்னும் தனிப்பெயரால் கூறுதலே சிறப்பு வழக்கமாகும். சிவமாகிய அம்முதற் பொருளை உள்ளவாறு உணரும் அறிவு சிவஞானம் எனப்படும். சிவத்தை உணரும் ஞானம் எனச் சுருங்கச் சொல்லலாம். போதம் என்பது போதித்தல். போதித்தலாவது, ஐயம் திரிபுகளை நீக்கி மாணவர்க்குத் தெளிவுண்டாகுமாறு உணர்த்துதல். எனவே சிவத்தை உணரும் ஞானத்தைப் பக்குவமுடைய மாணவர்க்கு ஐயந்திரிபின்றி உணர்த்துதலைக் கருதி எழுந்தது இந்நூல் என்பது இனிது விளங்கும்.

நூல் அமைந்துள்ள முறை

இந்நூல் பன்னிரண்டு நூற்பாக்களால் ஆனது. நூற்பாக்கள் மூன்றடி அல்லது நான்கடி உடையன. நூற்பாக்களில் உள்ள மொத்த அடிகள் நாற்பது.

நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் செய்த பாயிரம் உள்ளது. அதில் கடவுள் வாழ்த்துச்  செய்யுள் ஒன்றும், அவையடக்கச் செய்யுள் ஒன்றுமாக இரண்டு செய்யுட்கள் உள்ளன.

நூற்பாக்களின் பொருள் பின் வருவோர்க்கு ஐயம், திரிபுகளுக்கு இடமின்றி விளங்குதற்பொருட்டு ஆசிரியரே ஒவ்வொரு நூற்பாவுக்கும் கருத்துரையும், சுருக்கமான பொழிப்புரையும் செய்துள்ளார். அப்பொழிப்புரை வார்த்திகம் எனப்படும். வார்த்திகப் பொழிப்புரை பின்வருமாறு அமைந்துள்ளது.

ஒவ்வொரு நூற்பாவையும் ஆசிரியர் அதன் பொருள் நிலையை வைத்துப் பல கூறுகளாக வகுத்துக் கொள்கிறார். அவ்வாறு வகுத்துக் கொள்ளும் கூறு அல்லது பகுதி, அதிகரணம் எனப்படும்.

ஒவ்வொரு கூறிலும் மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு என்னும் மூன்று உறுப்புகள் இடம்பெறும்.

மேற்கோள் என்பது நூற்பாவிலிருந்து பெறப்படும் கருத்தமைவு. ஏது என்பது அம்மேற்கோளை நிறுவுவதற்கு ஆசிரியர் உரைப்பது. எடுத்துக்காட்டு என்பது அவ்வேதுவை வலியுறுத்துதற்கு வருவது. இம்மூன்றனுள் மேற்கோளும் ஏதுவும் உரைநடையாய் அமைந்தவை. எடுத்துக்காட்டு செய்யுளாய் அமைந்தது

சைவ சித்தாந்தப் பொருள் நிலை

சைவ சமயத்தின் தத்துவக் கொள்கை, சைவ சித்தாந்தம் என வழங்கும். சித்தாந்தம் என்பதற்கு முடிந்த முடிபு என்பது பொருள். எனவே சைவ சமயம் இறை பற்றியும், உயிர் பற்றியும், உயிரைப் பிணித்துள்ள தளை பற்றியும் கண்டறிந்த, முற்ற முடிந்த மெய்ம்மைகளே சைவ சித்தாந்தம் ஆகும். இந்நூலைக் கற்கப் புகுமுன், சைவ சித்தாந்த அடிப்படையைத் தெரிந்து கொள்ளுதல் நல்லது. அவ்வடிப்படைப் பொருள் நிலையைப் பின்வருமாறு கூறலாம்.

உயிர்கள்: அறியும் தன்மை உடையது உயிர். உயிர்கள் எண்ணிறந்தனவாய் உள்ளன. அவை ஒரு காலத்தில் தோன்றியன அல்ல; இறைவனால் படைக்கப்பட்டனவும் அல்ல; இறைவன் என்று உண்டோ அன்றே அவையும் உள்ளன. தோற்றம் இல்லையாதலால் அவற்றிற்கு அழிவும் இல்லை. எனவே உயிர்கள் என்றும் உள்ளவையாகும்.

ஆணவம்:

அத்தகைய உயிர்களிடம் அவற்றை மறைத்து நிற்பதாகிய ஓர் அழுக்கு இயற்கையாகவே உள்ளது. அரிசியை உமி மூடி மறைத்திருப்பதைப் போன்றது இது. அரிசி உள்ள அன்றே உமியாகிய குற்றமும் அதனுடன் பொருந்தியிருப்பதைப் போல உயிர்கள் உள்ள அன்றே அவ்வழுக்கும் உடனாய் உள்ளது. அதனை ஆணவ மலம் என்ற பெயரால் குறிப்பர். மலம்- அழுக்கு.

உயிர்கள் முதற்கண் ஆணவ மலத்தோடு கூடியே இருந்தன. அது கேவல நிலை எனப்படும். அந்நிலையில் உயிர்கள் அறிவும் செயலும் இன்றித் தாயின் கருப்பையில் கிடக்கும் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப் போல முழு அறியாமையில் மூழ்கிக் கிடந்தன.

மாயை:


இவ்வாறு ஆணவ மலத்தால் மறைப்புண்டு அதனால் அறியாமை எய்தித் துன்புறும் உயிர்களின் நிலை கண்டு இரங்கிய இறைவன் அம்மலத்தை நீக்குவதற்குத் திருவுளம் கொள்கிறான். அதன் பொருட்டு அவ்வுயிர்களை உலக வாழ்விற் செலுத்துகிறான்; அவை தங்குவதற்கு உடம்பையும், அறிவதற்கு ஐம்பொறி முதலிய கருவிகளையும், இயங்குவதற்கு உலகத்தையும், நுகர்வதற்கு உலகப் பொருள்களையும் படைத்துக் கொடுக்கிறான்.

குடமாகிய காரியத்தைக் குயவன் களிமண்ணிலிருந்து செய்வதுபோல, உடம்பு முதலிய இக்காரியங்களை இறைவன் மாயை என்னும் மூலப்பொருளிலிருந்து உண்டாக்குகிறான். அம்மாயை என்னும் பொருளும் என்றும் உள்ளதேயாம்.

ஆணவ மலத்தோடு கூடியிருந்த உயிர்கள் இப்பொழுது மாயையோடும் கூடி நிற்கின்றன. இதுதான் பிறப்புநிலை, சகல நிலை என்று கூறப்படும்.

இந்நிலையில் உயிர்கள் உடம்பாலும், உடம்பில் அமைந்த கருவிகளாலும், வாழ்க்கைச் சூழலாலும் ஓரளவு அறியாமை நீங்கி அறிவு விளக்கம் பெற்று வருவதைக் காணலாம். எனவே இவ்வுலகம் அறிவை வளர்க்கும் பள்ளிக்கூடம் போல்வது எனலாம்.

கன்மம்: அறிவும் செயலும் இன்றிக் கிடந்த கேவல நிலையினின்றும் இறையருளால் சகல நிலைக்கு வந்த உயிர்கள் சிற்றறிவும் சிறு தொழிலும் உடையனவாய், தம் மனம் மொழி மெய்களினால் நல்லனவும் தீயனவும் ஆகிய செயல்களைச் செய்கின்றன. அவையே கன்மம் எனப் பெயர் பெறுகின்றன.

இறைவன் அவ்வவ்வுயிர்கள் செய்த கன்மத்திற்கு ஏற்ப அவற்றிற்குப் பிறப்புக்களையும் இன்ப துன்பங்களையும் அளிக்கின்றான்.

உயிர்கள் தாம் பெற்ற மாயையின் காரியமாகிய கருவிகளால் மாயையின் காரியங்களாகிய உலகப்பொருள்களை அறிந்தும் நுகர்ந்தும் அவற்றை மேலும் மேலும் பெற வேண்டும் என முயன்றும் வினைகளைச் செய்து உலக வாழ்வில் கட்டுண்டு நிற்கின்றன.

உயிர்களை உலகத்தோடு பிணித்து நிற்பவை மாயையும் கன்மமும், அவை வருவதற்கு மூலமாகிய ஆணவமும் ஆகும் அது பற்றியே அம்மூன்றும் கட்டு, தளை, பாசம் என்னும் சொற்களால் குறிக்கப்படுகின்றன. இச் சொற்கள் யாவும் ஒரு பொருள் உடையன.

ஒரு கட்டினை நீக்க இரு கட்டுகளை இடுதல்: முதற்கண் உயிர்கள் ஆணவம் என்னும் ஒரு கட்டுடன் இருந்தன. அக்கட்டிகனை நீக்குவதற்காக மாயை, கன்மம் என்னும் இரு கட்டுகளைச் சேர்க்கின்றான் இறைவன்.

அவிழ்த்தற்கு அரிய ஒரு கட்டினை அவிழ்ப்பதற்கு நடைமுறையில் நாம் கையாளும் வழி, அதனைக் காட்டிலும் இறுக்கமாக மற்றொரு கட்டினைப் போடுவது தான். அதனால் முதற்கட்டுத் தானே நெகிழ்ந்துவிடும் அல்லவா? அதுபோல இறைவன் ஆணவக் கட்டினை நெகிழ்விப்பதற்காகவே மாயை, கன்மங்களாகிய இரு கட்டுகளை இடுகின்றான் என அறியலாம்.

அழுக்கை அழுக்கால் நீக்குதல்:

ஆணவம் அழுக்கு ஆதலின் அதனை நீக்குவதற்கு மாயை கன்மங்களாகிய இரண்டு அழுக்குகளைச் சேர்க்கின்றான் என்றும் கூறலாம். ஆடையிலுள்ள அழுக்கைப் போக்குவதற்குச் சோப்புக்கட்டியை வைத்துத் தேய்க்கிறோம். அதுவும் அழுக்குத்தானே. அவ்வழுக்கு ஆடையிலுள்ள அழுக்கை நீக்க உதவுகிறது. அதுபோல, ஆணவமாகிய அழுக்கை நீக்குவதற்கு மாயை, கன்மங்களாகிய அழுக்குகள் உதவுகின்றன என அறியலாம். இவை மூன்றும் அழுக்காதல் பற்றி மும்மலங்கள் என வழங்கப்படுகின்றன.

பாசம், பசு, பதி:

ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றும் பாசம் (கட்டு) எனப் பார்த்தோம். இப் பாசத்திற் கட்டுண்டு நிற்கும் உயிர்கள் பசுக்கள் எனப்படும். பசு என்ற சொல்லுக்குக் கட்டப்பட்டது என்பது பொருள்; இவ்வாறு கட்டுண்ட உயிர்களைக் காக்கும் தலைவன் ஆதலின் இறைவன் பதி எனப்படுவான். பதி என்பதற்குக் காப்பவன் என்பது பொருள். பதி, பசு, பாசம் என்னும் இவையே சைவ சித்தாந்தம் கூறும் முப்பொருள்களாகும். அவை என்றும் உள்ளன என்பதனை,

பதி பசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி

என வரும் திருமந்திரப் பகுதி உணர்த்தும்.

ஞானசம்பந்தர்

விளையாததொர் பரிசில்வரு பசு, பாசவேதனை ஒண்
தளையாயின தவிரவ்வரு தலைவன்

எனப் பசு, தலைவன் பற்றிக் குறித்தருளினார்.

பாசம்- ஆணவம்; வேதனை - கன்மம்; ஒண்தளை- மாயை; மாயை விளக்கொளி போல நின்று ஆணவமல இருளைச் சிறிது நீக்கி உயிருக்கு விளக்கம் தருதலின் ஒண்தளை என்றார். ஒண்மை- ஒளியுடைமை. உயிர்கள் தோற்றுவிக்கப்படாமல் என்றும் நிலவி வருதல் பற்றி விளையாததொர் பரிசில் வரு பசு என அடைமொழி கொடுத்துக் கூறினார். அனைத்துயிர்களும் பாசத்தைத் தவிரும் படியாக அருள்புரியும் சிவபெருமானே பதியாகிய தலைவன் என உணர்த்தியருளினார்.

மேற்கூறியவற்றால் முப்பொருள்களின் இயல்பு ஓரளவு விளங்கும்.

நன்றி: சிவத்தமிழ்ச் செல்வர் - ஆ. ஆனந்தராசன்.

 
மேலும் சிவஞானபோதம் »
இருவகை இயல்புகள்சைவ சித்தாந்தத்தில் பொருளுக்கு இரு வகையான இயல்புகள் சொல்லப்பெறும். அவை உண்மையியல்பு, ... மேலும்
 
முதல் நூற்பாமுதற் கடவுள் ஒருவர் உண்டு என்பதை நிறுவுவது முதல் நூற்பாவின் குறிக்கோள். காணப்பட்ட உலகைக் ... மேலும்
 
அம் முதல்வன் அழித்தற்  கடவுளே:இனி அம் முதல்வன் யாவன்? என்ற வினா இயல்பாக எழுகிறது. அதற்கு ... மேலும்
 
இரண்டாம் நூற்பாமுதல் நூற்பாவோடு இந்நூற்பா தொடர்புற்று நிற்கிறது. எவ்வாறெனில், முதல் நூற்பாவில் உலகம் ... மேலும்
 
எடுத்துக்காட்டு -2வெண்பா7. ஒன்று என்றது ஒன்றேகாண்; ஒன்றே பதி; பசுவாம்ஒன்று என்ற நீ பாசத்தோடு உளைகாண்;- ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar