இன்று.. வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கும் சங்கடஹர சதுர்த்தி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2014 12:04
நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். வளர்பிறை சதுர்த்தி விநாயகரின் பிறந்த நாள். அன்று, சுபவிஷயங்களுக்காக விநாயகரிடம் வழிபாடு செய்து கொள்ளலாம். தேய்பிறை சதுர்த்தி அன்று நமது வாழ்வில் குறுக்கிடும் தடைகள், இடையூறுகள் அகல வேண்டிக் கொள்ளலாம். அதனால் தான், இதற்கு சங்கடஹர சதுர்த்தி என்று பெயர். சங்கட என்றால் துன்பம். ஹர என்றால் போக்குவது என்பது பொருள். இன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல், அன்னதானம் செய்தல் சிறப்பைத்தரும்.
சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருந்து, இரவில் விநாயகரை வழிபட்டால் எல்லா செயல்பாடுகளிலும் தடைகள் நீங்கி வெற்றி பெறலாம்.
சதுர்த்தியின் மகிமை: சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான் என குறிப்பிடுகின்றனர்.