பதிவு செய்த நாள்
11
ஜூலை
2014
12:07
காரைக்கால்: காரைக்கால் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். இவரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனி கோவில் உள்ளது. காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இத்திருவிழா கடந்த 10ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, நேற்று மாலை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. மணமகன் பரமதத்தர் பட்டாடை, நவமணி மகுடம், ஆபரணங்கள் அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். புனிதவதியார் பட்டுபுடவை உடுத்தி மணமகள் கோலத்தில் எழுந்தருளினார். பாரம்பரியபடி திருமண மேடையில் மாப்பிள்ளை வீட்டாருக்கும், மணமகள் வீட்டார் கவுரவிக்கப்பட்டு தாம்பூலம் மாற்றிக் கொணடனர். பின், யாகம் வளர்க்கப்பட்டு திருமணவிழாவிற்கான சடங்குகள் நடந்தது.
காலை 10.15 மணிக்கு மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, வேதமந்திரங்கள் முழங்க புனிதவதியாருக்கு, பரமத்தர் திருமணம் நடந்தேறியது. ஆலய குருக்கள் புனிதவதியாருக்கு மாங்கல்யம் அணிவித்தார். பின், மகா தீபாராதணை நடந்தது. திருக்கல்யாண வைபவத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மாங்கல்யம், மஞ்சள், குங்குமம், மாங்கனியுடன் கூடிய தாம்பூல பை வழங்கப்பட்டது. திருகல்யாண வைபவத்தில் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், திருமுருகன்,வாரிய தலைவர்கள் உதயக்குமார், சுரேஷ், எஸ்.பி.,பழனிவேல்,கோவில் நிர்வாக அதிகாரி மாணிக்கவாசகம் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரினசம் செய்தனர்.
நாளை (12ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு பிக்ஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு பரமதத்தர் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்பும் நிகழ்ச்சியும், 8 மணிக்கு நான்கு திசையிலும் வேதபாராயணம் எதிரொளிக்க பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் மாலையுடன் பிச்சாண்டவர் கோலத்தில் புறப்பாடு நடக்கிறது. பக்தர்கள் சுவாமிக்கு மாங்கனி வைத்து தீபாரதனை செய்து, பின் வீட்டின் மாடிகளின் இருந்து மாங்கனி வீசும் வைபவம் நடக்கிறது.