பதிவு செய்த நாள்
29
ஜூலை
2014
12:07
மேட்டூர்: கோனூர் சென்றாய பெருமாள் கோவில் நிர்வாக பொறுப்பை நேற்று அறநிலையத்துறை தன்வசம் எடுத்து கொண்ட நிலையில், கோவில் பூசாரியை, சஸ்பெண்ட் செய்யாவிடில் போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் அறிவித்துள்ளனர். மேட்டூர் தாலுகா, கோனூரில் சென்றாய பெருமாள் கோவிலில், சுற்றுப்பகுதியை சேர்ந்த, 27 கிராம மக்கள் வழிபாடு செய்கின்றனர். கோவிலில் பல ஆண்டுகளாக பூசாரியாக இருந்த வேங்கடம் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டிய பொதுமக்கள், அவரை நீக்கி விட்டு, அதேபகுதியை சேர்ந்த சம்பத் என்பவரை பூசாரியாக நியமித்தனர். நீக்கப்பட்ட வேங்கடம், நான் தான் பரம்பரை அறக்காவலர் மற்றும் பூசாரி எனகூறி கோவிலில் பூஜை செய்ய நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கினார். அதை தொடர்ந்து கடந்த, 2012ம் ஆண்டு முதல் சென்றாய பெருமாள் கோவில் பூசாரி மற்றும் நடைமுறை நிர்வாகியாக வேங்கடம் நீடிக்கிறார்.இந்நிலையில், கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்ற தன்னிடம் வேங்கடம் ஆபாசமாக பேசியதாக, மோட்டூரை சேர்ந்த ராஜி மனைவி கிருஷ்ணவேணியும், தாழ்த்தப்பட்ட சமூதாயத்தை சேர்ந்ததால், தான் கோவிலுக்கு நுழைந்தபோது, தகராறு செய்ததாக, சந்தைதானம்பட்டி காலனியை சேர்ந்த சின்னதம்பி மனைவி கோவிந்தம்மாள் இருவரும், கடந்த, 25ம் தேதி கருமலைக்கூடல் போலீஸில் புகார் செய்தனர்.
கிருஷ்ணவேணி புகார், கோவிந்தம்மாள் புகார் தொடர்பாகவும், வேங்கடம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இரு வழக்குகளை கருமலைக்கூடல் போலீஸார் பதிவு செய்தனர். புகார் எதிரொலியாக நேற்று உதவி ஆணையர் ராமு தலைமையில், அறநிலையத்துறையினர் சென்றாய பெருமாள் கோவில் நிர்வாகத்தை, தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர். இதற்காக, நேற்று அறநிலைய துறையினர் கோவிலின் இரு ஐம்பொன்சிலை, நகை, விளக்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டபோதிலும், பொறுப்பை ஒப்படைக்க, பூசாரி வேங்கடம் மறுத்தார். இதனால், வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில், அறநிலையத்துறையினர் கோவில் நிர்வாகத்தை தங்கள் வசம் எடுத்து கொண்டனர்.மேட்டூர், எம்.எல்.ஏ., பார்த்திபன் கூறுகையில், ""இரு வழக்குகளில் சம்பந்தபட்ட பூசாரி வேங்கடத்தை நான்கு நாளில் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இல்லையேல் ஆக.,1ம் தேதி, 27 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுவேன். என்றார். இதனால், கோனூர் பகுதியில் பதட்டம் நீடிப்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.