பதிவு செய்த நாள்
23
ஆக
2014
12:08
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட, தமிழகத்தில் உள்ள நான்கு முக்கிய கோவில்கள் சார்பில், குங்குமம் தயாரித்து விற்பனை செய்ய, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள, முக்கிய கோவில்கள் சார்பில், நியாய விலை அர்ச்சனை பொருட்கள் விற்பனை, சமீபத்தில் துவக்கப்பட்டது.
நியாய விலை : இதற்கு, பக்தர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதையடுத்து, பெண் தெய்வங்கள் குடிகொண்டுள்ள கோவில்கள் சார்பில், மஞ்சள், குங்குமம் தயாரித்து, நியாய விலையில், பாக்கெட் வடிவில் விற்கவும், இலவசமாக குங்குமப் பிரசாதம் வழங்கவும், அரசு அனுமதி வழங்கிஉள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில்; ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில்; திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில்; திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் ஆகியவற்றில், மஞ்சள், குங்குமம் தயாரித்து விற்பனை செய்ய, ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இவை, தரமானதாக, சுண்ணாம்பு கலப்படம் இல்லாமல் இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். குங்குமம் தயாரிக்க, ஒவ்வொரு கோவிலுக்கும், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரம், வழங்கப்பட உள்ளது.
ஜவ்வாது விபூதி : தமிழகம் முழுவதும், மாதம், 25 லட்சம் ரூபாய் வருமானம் உள்ள சிவன் மற்றும் சைவ சமய வழிபாட்டு கோவில்களில், ஜவ்வாது வாசனையுடன், தரமான விபூதி தயாரிக்கவும், விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது. சில கோவில்களில், கழிவு சங்குகளை பவுடராக்கி, விபூதியாக வழங்கப்படுகிறது. இது, ஆகம விதிமுறைக்கு எதிரானது என, சிவனடியார்கள் கருதுகின்றனர். எனவே, கோவில்களின் பசுமடத்தின் எருவாட்டியை, மூலப்பொருளாக, ஜவ்வாது கலவையில் விபூதி தயாரிக்கப் பட உள்ளது.