பதிவு செய்த நாள்
23
ஆக
2014
01:08
விநாயகர் சிலைகளை களி மண்ணால் செய்ய வேண்டும், ரசாயன வர்ணங்களை பூசக்கூடாது என, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும், விநாயகர் சதுர்த்தி விழா நிறைவடைந்தவுடன், ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள், கடலில் கரைக்கப்படுவது வழக்கம். மேலும், நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வைத்து பூஜிக்கப்படும் பிரமாண்டமான விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கடலில் சங்கமம் செய்யப்பட்டு வருகிறது. ’பிளாஸ்டர் ஆப் பாரீஸ்’ என அழைக்கப்படும் வெள்ளை சிமென்ட் கலவையால் விநாயகர் சிலைகளை செய்வது, ரசாயண பெயின்ட் பயன்படுத்துவது போன்ற காரணங்களால், கடல் நீர் மாசு அடைகிறது. குறிப்பாக, ரசாயன பெயின்ட் பயன்படுத்தப்படும் குரோமியம், துத்தநாயகம், ஈயம் போன்ற ரசாயனங்கள், மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ரசாயனங்களை உட்கொண்ட சிறிய மீன்களை, பெரிய மீன்கள் சாப்பிடும்போது, ’பயோ அக்குமுலேஷன்’ என்ற அடிப்படையில், ரசாயனத்தின் பாதிப்பு ௧௦ மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மீன்களை மனிதர்கள் சாப்பிடும்போது, நரம்பு பாதிப்பு உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும், பிளாஸ்டர் ஆப் பாரீஸ் கலவையால் செய்யப்படும் சிலைகள் எளிதில் கரைவதில்லை. கடந்தாண்டு, சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன், புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள், கடல் நீரின் மாதிரியை எடுத்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில், கடல் நீரில் மாசு கலந்திருப்பது தெரியவந்தது. அதையொட்டி, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் நிலையில், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்வதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். களி மண்ணை மட்டுமே பயன்படுத்தி விநாயகர் சிலைகளை செய்ய வேண்டும், ரசாயன பெயின்ட்களுக்கு பதிலாக, எளிதில் கரையக்கூடிய, ரசாயனங்கள் இல்லாத, தண்ணீர் அடிப்படையிலான பெயின்டை பயன்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தி வருகின்றனர்.