இமயமலையிலுள்ள கயிலாயம் அருகிலுள்ளது மானசரோவர் ஏரி. ‘மானசரோவர்’ என்றால் ‘மனதில் இருந்து தோன்றிய தடாகம்’ என பொருள். சுத்தமான நீர் கொண்ட இந்த ஏரி, பார்வதியின் அம்சமாகும். வசிஷ்டர், மரீசி உள்ளிட்ட முனிவர்கள் பிரம்மாவிடம், சிவவழிபாட்டுக்காக நீர்நிலை ஒன்றை அருளும் படி வேண்டினர். பிரம்மாவும் தன் மனதில் இருந்து இந்த தெய்வீக ஏரியை உருவாக்கினார். ஏரியின் நடுவில் சுவர்ணலிங்கமாக (தங்கலிங்கம்) சிவன், முனிவர்களுக்கு காட்சியளித்தார். இந்த குளத்து நீரே, பூமிக்கடியில் சென்று, கங்கையாக உற்பத்தியாவதாக கருதுகின்றனர். புனித நதிகளின் தாயாக போற்றப்படும் மானசரோவரை திபெத்தியர்கள் ‘மகாசரோவர்’ என்கின்றனர். 412 ச.கி.மீ., பரப்பும், 300 அடி ஆழமும் கொண்ட இந்த ஏரி கடல்போல காட்சியளிக்கிறது.