பதிவு செய்த நாள்
18
அக்
2014
10:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நேற்று நடந்தது.நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க, சுப்பிரமணிய சுவாமி தனது வேல்மூலம் மலை பாறையில் கீறி, கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கியதை நினைவுகூறும் வகையில் இவ்விழா நடந்தது.
நேற்று காலை மூலவர் கரத்திலுள்ள வேலுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் மலைமேல் கொண்டு செல்லப்பட்டு, சுப்பிரமணியர் கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.அங்கு பூஜைகள் முடிந்து, சுனை தீர்த்தத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. கிராமத்தினர் சார்பில் 150 படி அரிசியினாலான கதம்ப சாத பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் வேல் புறப்பாடாகி, மலை அடிவாரத்தில் இருக்கும் பழனியாண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டது. இரவு அபிஷேகம், தீபாராதனை முடிந்து பூப்பல்லக்கில் வீதி உலா முடிந்து மூலவர் கரத்தில் மீண்டும் வேல் சேர்ப்பிக்கப்பட்டது.