பதிவு செய்த நாள்
20
நவ
2014
12:11
பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காலியாக உள்ள 30 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பழநி கோயிலில் இணை ஆணையர் பதவி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. முதற்கட்டமாக 30 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமிக்க கோயில்நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பொறியாளர், எலக்ட்ரிக்கல் பிரிவில் 23 பணியிடங்களும், பழநியாண்டவர் மெட்ரிக் பள்ளியில் 8 ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
தகுதிகள்: வயது வரம்பு 18 முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும். அந்தந்த துறையில் டிகிரி, பட்டயப்படிப்பு முடித்திருப்பவர்கள் டிச.,16 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை இணை ஆணையர்/செயல் அலுவலர், தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும். நேரடியாகவும் வழங்கலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழநி கோயிலில் உதவிபொறியாளர்(சிவில்)-1, எலக்ட்ரீசியன்-3, நடத்துனர்-4 தொழிநுட்ப உதவியாளர்கள்(சிவில்)-8, வின்ச் பம்ப் ஆபரேட்டர்கள்-3, பிட்டர்-1, மற்றும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 8 உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்படும். தகுதியுள்ளவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் யாரிடமும் சிபாரிசு, பணம் கொடுத்து ஏமாற வேண்டாம், என்றார்.