பதிவு செய்த நாள்
21
நவ
2014
12:11
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம் கோவில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்துவதற்கு தேர்வு செய்யப் பட்ட இடத்தை, அறநிலையத்துறை ஆணையர் தனபால் ஆய்வு செய்தார். கோவில்கள், மடங்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு, தமிழக அரசு சார்பில் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முதுமலை தெப்பக்காட் டில் நான்கு ஆண்டுகளும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இரண்டு ஆண்டுகளும் முகாம் நடந்தது. இந்தாண்டு முகாமுக்கான முன்னேற்பாடுகளை, அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் முகாம் நடைபெற உள்ள இடத்தை, அறநிலையத்துறை ஆணையர் தனபால் ஆய்வு செய்தார்.
நிருபர்களிடம் ஆணையர் கூறியதாவது: இந்த இடத்தில் முகாம் அமைத்தால், யானைகளை குளிக்க வைக்கவும், நடைபயிற்சி அளிக்கவும் வசதியாக இருக்கும். நீர் மின் திட்டத்துக்காக, பவானி ஆற்றில் தண்ணீர் தேக்கினாலும், முகாமுக்கு பாதிப்பு இருக்காது. இது மட்டுமின்றி, ரோட்டோரம் ஒன்றரை ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. அங்கு யானைகளை கட்டி வைக்க இடவசதி நிறைய உள்ளன. தமிழக அரசு உத்தரவு வந்ததும், முகாம் நடைபெறுவதற்கான பணிகள் துவக்கப்படும். கடந்தாண்டை போலவே, இந்தாண்டும் கோவில் யானைகளுக்கும், வனத்துறை யானைகளுக்கும் என தனித்தனியாக முகாம் நடைபெறும். இவ்வாறு கமிஷனர் தனபால் கூறினார்.