சபரிமலை: சபரிமலை 18 படிகளின் ஐம்பொன் தகடுகளை புதுப்பிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது. சபரிமலையில் 18 மலை தேவதைகளை நினைவு கூறும் வகையில் இப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இருமுடிக் கட்டு இருந்தால் மட்டுமே இப்படி வழி ஏறிச் சென்று ஐயப்பனை தரிசிக்க முடியும்; இருமுடி இல்லாதவர்கள் வடக்கு வாசல் வழி அனுமதிக்கப்படுவர். முன்பு இந்த கற்படிகளில் தான் பக்தர்கள் தேங்காய் உடைத்தனர். படிகள் சேதம் அடைந்ததால் ’தேவபிரசன்னம்’ நடத்தப்பட்டது. இதில் கூறியபடி 30 ஆண்டுகளுக்கு முன் படிகளில் ஐம்பொன் தகடுகள் பொருத்தப்பட்டன; படியில் தேங்காய் உடைப்பது நிறுத்தப்பட்டது. தற்போது ஐம்பொன் தகடுகளில் விரிசல் விட்டு பக்தர்களின் காலில் காயம் ஏற்படுகிறது. பக்தர்களுக்கு ரத்தம் சிந்தியது தெரியவந்தால், படி ஏறுவது நிறுத்தப்பட்டு ’பஞ்ச புண்ணியாகம்’ நடத்தப்படும். இதுபோன்ற சூழ்நிலையை தவிர்ப்பதற்காக படிகளில் ஐம்பொன் தகடுகளை புதுப்பிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதற்கான மதிப்பீடு தயாரிக்க திருவாபரண ஆணையரிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ”இதற்கான செலவை தேவசம்போர்டு ஏற்றுக்கொள்ளும். நன்கொடையாளர்கள் முன்வந்தால் பரிசீலிக்கப்படும். ஒவ்வொரு மாதப்பிறப்புக்கும் நடைதிறக்கும் இடைவெளியில் பணிகளை தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கூறினார்.