ஆற்றுகால் பகவதி பொங்கல் விழா: லட்சக்கணக்கில் பெண்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2015 10:03
நாகர்கோவில்:ஆற்றுகால் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இதனால் திருவனந்தபுரம் நகரம் புகை மண்டலத்தில் சிக்கியது.கேரள மாநிலம் திருவனந்த புரம் அருகே கிள்ளியாற்றின்கரையில் அமைந்து உள்ளது ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில்.
இந்த கோயில் கேரளாவில் இருந்தாலும், தமிழக வரலாற்றுடன் தொடர்புடையது. மதுரையை எரித்த கண்ணகி கொடுங்கல்லுார் செல்லும் வழியில் கிள்ளியாற்றின் கரையில் தங்கியதாகவும், அங்கு முதியவர் கனவில் வந்து தனக்கு இங்கு கோயில் கட்டும்படி கூறியதாகவும், அதன் படி இங்கு கோயில் கட்டி ஆற்றுகால் பகவதி அம்மன் என பெயர் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. இங்கு மாசி மாதம் மகம் நட்சத்திர நாளில் நடைபெறும் பொங்கல் விழா சிறப்பு வாய்ந்தது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் பெண்கள் பொங்கலிடும் இந்த நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கியது. ஒன்பதாம் நாள் விழாவான நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. கோயிலை சுற்றி ஆறு கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டனர். காலை 10.15 மணிக்கு கோயில் முன்புறம் உள்ள முக்கிய அடுப்பில் மேல்சாந்தி கண்ணன் போற்றி தீ எரிய வைத்ததும், கோயிலில் செண்டைமேளம் முழங்கியது. இதை தொடர்ந்து எல்லா அடுப்புகளிலும் தீ எரியதொடங்கியது. இதனால் திருவனந்தபுரம் நகரமே புகை மூட்டமாக காணப்பட்டது.
வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், மஞ்சள் பொங்கல் என விதம் விதமாக பெண்கள் பொங்கலிட்டனர்.பகல் இரண்டு மணிக்கு பின்னர் நுாற்றுக்கணக்கான பூஜாரிகள் எல்லா பகுதிகளுக்கும் பிரிந்து சென்று பொங்கலில் புனிதநீர் தெளித்து அம்மனுக்கு நைவேத்யம் செய்தனர். அம்மனுக்கு பொங்கல் இட்டு வழிபடுவதால் குடும்பத்தில் ஐஸ்வரியம் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இந்த விழாவையொட்டி கேரளாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள்,ரயில்கள் இயக்கப்பட்டது.