திருவள்ளூர் : லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா மூன்றாம் நாளான நேற்று, காலை கருட சேவை கோலாகலமாக நடந்தது. திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ளது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில். இக்கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா, 24ம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று காலை 6 மணிக்கு, கருடசேவை நிகழ்ச்சியும், கோபுர தரிசனமும் நடந்தது. சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏழாம் நாளான வரும் 30ம் தேதி காலை 7.30 மணிக்கு தேர்த் திருவிழாவும், 9ம் நாள் பல்லக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி சேவா சபா டிரஸ்ட் தலைமையில் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.