பதிவு செய்த நாள்
02
ஏப்
2015
11:04
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில், அஸ்வ பூஜை நேற்று நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள், கடந்த 30ம் தேதி துவங்கியது. நேற்று காலை 7.00 மணிக்கு, அஸ்வ பூஜை, இரண்டாம் காலபூஜை, மாலை 6.00 மணிக்கு, மூன்றாம்கால பூஜை நடந்தது. அஸ்வ பூஜைக்காக, இடையன் சாவடியில் உள்ள வேதபாடசாலையில் இருந்து மீனாராணி என்ற குதிரை வரவழைக்கப்பட்டு இருந்தது. குதிரைக்கு மாலை அணிவித்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின், கோவிலை சுற்றி குதிரை வலம் வந்தது. அஸ்வ பூஜையின் சிறப்பு: மனதை நிலைப்படுத்தவும், தர்ம சிந்தனைகள் வளரவும், அஸ்வ பூஜை மிகுந்த பலனை கொடுக்கும் என, சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர். அஸ்வம் என்றால் குதிரை. அஸ்வ பூஜை என்பது குதிரையை வைத்து நடத்தப்படும் பூஜையாகும். இந்த பூஜையின் முக்கியத்துவம் குறித்து சிவாச்சாரியார்கள் கூறும்போது, அஸ்வ பூஜை நடத்துவதன் மூலமாக, குதிரையின் முகத்தில் குடிகொண்டுள்ள மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்கும். குதிரை சீராக ஓடுவதற்கு முக்கிய தேவையான நாண்(கயிறு) போன்றது இந்த யாகம். இதை நடத்துவதால், அரசு நிர்வாகம் சச்சரவுகள் இன்றி செம்மையாக நடக்கும். நமது மனதை ஒரு நிலைபடுத்தி, நீதி மார்க்கம், தர்மவழி மார்க்கத்தில் மக்கள் செல்ல வழிவகுக்கும் என்றார்.