பதிவு செய்த நாள்
24
ஏப்
2015
05:04
யாரும் எதையும் பேசிவிட்டு போகட்டும். உன் மனதுக்கு நல்லதென்று படுவதை தொடர்ந்து செய். தன்னை வென்றவனே தனக்கு நண்பனாக முடியும். உடம்பு ஒரு கோயில். அதில் குடியிருக்கும் கடவுள் நாம் தான். உடம்பை மாதிரியாகக் கொண்டே கோயில் அமைக்கப்பட்டது. நமக்குள் நல்லவர், தீயவர் என்னும் இரு மனிதர்கள் இருக்கின்றனர். இருவரும் அவரவர் வழியில் நம்மை இழுக்கின்றனர். நீயே உனக்கு நண்பனாகவும் பகைவனாகவும் இருக்கிறாய் என பகவத்கீதை கூறுகிறது. மனதின் தீமையான பகுதியை துõய்மைப்படுத்தி, நல்லதோடு இணைக்கவே ஆன்மிகப் பாதை நமக்கு வழிகாட்டுகிறது. கடவுளையே சிந்தித்திருப்பவன் மனம், உடம்பு இரண்டாலும் தெய்வீக நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்கிறான். உலகின் அங்கமாக நாம் இருக்கிறோம். அனுபவிக்கும் எல்லாப் பொருளும் இயற்கையிடம் இருந்தே நமக்கு கிடைக்கிறது. இயற்கையிடம் பெற்ற நன்மையை அதனிடமே திருப்பிச் செலுத்தும் கடமையும் நமக்கு இருக்கிறது. கடவுள், முன்னோர் வழிபாடு, மற்றவர்களுக்கு உதவுதல், உயிர்களை நேசித்தல் போன்றவை மூலம் பெற்ற நன்மையை இயற்கையிடம் திருப்பி அளிக்கிறோம்.
மனத்துõய்மை போலவே உடல்துõய்மையும் அவசியமானது. ஏனோதானோ என்று இல்லாமல் அக்கறையுடன் தினமும் நீராட வேண்டும். அமைதி தவழும் அதிகாலையில் தியானம், யோகாசனத்தில் ஈடுபடுவதால் மனம், உடல், உயிர் மூன்றும் ஒன்றுபடுகின்றன. ஆரோக்கியத்தின் முதல்படி உணவுக் கட்டுப்பாடு. உணவே மருந்து என தைத்திரீய உபநிடதம்கூறுகிறது. கட்டுப்பாடு இல்லாமல் பெருந்தீனி உண்பதால் பலரும் நோய்க்கு ஆளாகிறார்கள். அளவறிந்து உண்பவனே ஆரோக்கியமாக வாழ முடியும். உண்ணும் போது பரபரப்பு, அக்கறையின்மை, பதட்டம், அதிகபேச்சு ஆகியவற்றைத் தவிர்ப்பது அவசியம். உணவு புனிதமானது என்பதாலேயே கடவுளின் பிரசாதமாகச் சாப்பிடும் வழக்கத்தை முன்னோர்கள் உருவாக்கி வைத்தனர். ஆரோக்கிய விஷயத்தில் உணவிற்கு அடுத்ததாக உறக்கம் இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தால் உடலோடு உள்ளமும் அமைதி பெறுகிறது. ஆறு மணி நேர உறக்கம் மனிதனுக்கு போதுமானது. இருந்தாலும், குழந்தை, நோயுற்றவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. உறங்கும் முன் சிறிது நேரம் தியானம் செய்தல், பாடல் கேட்டல், நல்ல நூல்களைப் படித்தல் போன்றவற்றில் ஈடுபடுவது நல்ல பழக்கம். இவை ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவிபுரியும். சாதிக்க விரும்புவோர் வாழ்வில் பிரச்னை, தடைகளைச் சந்தித்தே ஆக வேண்டும். முயற்சியும், உழைப்பும் இருந்தால் அவற்றை எளிதில் முறியடித்து முன்னேறலாம். உடம்பு கோயில் என்றால், அதன் உள்ளிருக்கும் உயிரே இறைவன். தெய்வத்தையும், தெய்வீகத்தையும் தொடர்ந்து நினைப்பதன் மூலம் உடலும், மனமும் புனிதமடைகிறது. நம் உடம்பை நோயின்றி ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டியது நம் கடமை. உடலை போலவே மன நலனிலும் அக்கறை கொள்ளுங்கள். (மகான் பஜனானந்தர்)