பதிவு செய்த நாள்
28
ஏப்
2015
11:04
ஆர்.கே.பேட்டை: ராஜாநகரம், செதுலுார் கிராமத்தில் உள்ள, விருப்பாட்சியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், இன்று காலை அம்மனுக்கு, சந்தன அபிஷேகம் நடைபெற உள்ளது. இரவு ராஜசூய யாகம் கூத்து நடைபெறுகிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த, ராஜாநகரம் செதுலுார் கிராமத்தில், ஏழு ஆண்டுகளாக தீமிதி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு திருவிழா, கடந்த வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் பாலாபிஷேகமும், நேற்று மஞ்சள் அபிஷேகமும் நடந்தது. இன்று காலை சந்தன அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து, மகாபாரத சொற்பொழிவு, இரவு தெருக்கூத்து உள்ளிட்டவை நடைபெறுகின்றன. வரும் 30ம் தேதி, காலை 7:30 மணிக்கு, அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. மே மாதம் 3ம் தேதி, காலை துரியோதனன் படுகளமும், அன்று மாலை 6:00 மணிக்கு, தீமிதி திருவிழாவும் நடக்கிறது. கிராமத்தை சேர்ந்த, ஆண்களும், பெண்களும், காப்புக்கட்டி, விரதம் மேற்கொண்டுள்ளனர். 4ம் தேதி இரவு அம்மன் வீதியுலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.