காட்டுப்பரூர் கோவில் புதிய தேர்: வரும் 1ம் தேதி வெள்ளோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2015 11:04
மங்கலம்பேட்டை: காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 30 லட்சம் ரூபாயில் புதிதாக அமைக்கப்பட்ட திருத்தேர், வரும் மே 1ம் தேதி வெள்ளோட்டம் விடப்படுகிறது. மங்கலம்பேட்டை அடுத்த காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி உற்சவத்தில், தேர்த் திருவிழா நடப்பது வழக்கம். தேர் பழுதடைந்ததால் இரண்டு ஆண்டுகளாக தேர் திருவிழா நடக்கவில்லை. அதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 லட்சமும், பொது மக்கள் சார்பில் 20 லட்ச ரூபாயும் நிதி திரட்டப்பட்டு 30 லட்சம் ரூபாய் மதிப்பில் திருத்தேர் செய்யும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. தற்போது தேர் திருப்பணி முடிவடைந்துள்ள நிலையில், வரும் மே 1ம் தேதி புதிய தேருக்கு குடமுழுக்கு செய்து, வெள்ளோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4:30 மணிக்கு கும்ப ஸ்தாபனம், புண்யாகவாசனம், காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், 5:30 மணிக்கு நவக்கிரக ஹோமம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:30 மணிக்கு தேருக்கு குடமுழுக்கு நடக்கிறது. தொடர்ந்து காலை 10:00 மணிக்கு வெள்ளோட்டம் நடக்கிறது.