பதிவு செய்த நாள்
07
ஜூலை
2015
10:07
திருப்பூர்: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, திருப்பூரில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு யாக பூஜைகள் நடந்தன.குரு பகவான் நேற்று முன்தினம் இரவு, கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசித்தார். இதையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், நல்லூர் விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கு, நேற்று காலை, 6:15 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருப்பூர் எஸ்.வி., காலனி, மகா கணபதி யோகேஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 7:00 மணிக்கு, குரு தட்சிணாமூர்த்திக்கு, சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. 9:30 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள சபா மண்டபத்தில், விக்னேஷ்வர பூஜை, சிறப்பு ஹோமம், குரு பகவானுக்கு மகாபிஷேகம், சிம்ம ராசி பிரவேசம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. அதன்பின், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பிரகார உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ரிஷபம், சிம்மம், மிதுனம், கன்னி, விருட்சிகம், மகரம், மீனம் ராசிக்காரர்கள், பரிகாரம் செய்து, சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இதில், அவிநாசி வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.