பாண்டியர் காலத்து சிவன் கோயிலில் 500 ஆண்டுக்கு முந்தைய சிவலிங்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2015 11:07
கீழக்கரை: உத்திரகோசமங்கை அருகே உள்ள பாண்டியர் காலத்து சிவன் கோயிலில், 500 ஆண்டுகளுக்கு முந்தைய சிவலிங்கம் உள்ளது. உத்திரகோசமங்கை அருகே உள்ள வித்தானூர் என்ற கிராமத்தில் பாண்டியர் காலத்து சிவன் கோயில் உள்ளது. கருவறை இல்லாத இக்கோயிலில் 4 அடி உயரத்தில் பீடம் உள்ளது. அதன் மீது 3 அடி உயரம், 5 அடி அகலத்தில் சிவலிங்கம் பெரிய அளவில் உள்ளது. இக்கோயிலின் முகப்பில் உள்ள ஓட்டு கட்டடத்தில் சிறிய அளவிலான நந்தி உள்ளது. அந்தஊரைச் சேர்ந்த வீரபாண்டி கூறுகையில்,""500 ஆண்டுகளுக்கு முந்தைய இக்கோயிலின் மேற்பகுதியில் கோபுரம் அமைக்கும் பணி நடந்தபோது அடிக்கடி தடங்கல் ஏற்பட்டதால், கருவறை இன்றி கோயில் திறந்த வெளியில் அமைந்துள்ளது. இது வித்வான்கள் வாழ்ந்த ஊர் என்பதால் வித்தானூர் என்று பெயர் மருவியுள்ளது.
முற்காலத்தில் ராமேஸ்வரம் வரும் யாத்திரீகர்கள், உத்திரகோசமங்கைக்கு செல்லும்போது வழியில் உள்ள வித்தானூரில் தங்கி சிவனை வழிபட்டு சென்றுள்ளனர். இக்கோயிலின் அருகில் 3 அடி அகலத்தில் உள்ள கல்வெட்டை ஆராய்ந்தால் இன்னும் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது, என்றார். கோயில் பூசாரி சுப்பிரமணியன் கூறுகையில், "" கடந்த 10 தலைமுறைகளாக இக்கோயிலை பராமரித்து வருகிறோம். சிவராத்திரி, பிரதோச காலங்களில் ராமநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகளை செய்து வருகிறோம். இங்குள்ள சிவலிங்கம் பூமிக்கடியில் சுயம்புவாக வந்திருக்கலாம் என்ற கருத்தும் இப்பகுதியில் நிலவுகிறது. திருமணத்தடைகளை போக்கும் வல்லமை கொண்டு சுவாமியாக சிவன் இங்கு விளங்குகிறார். கடந்த 2005 ல் முதன்முதலாக கிராமமக்களால் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது, என்றார்.