பரமக்குடி ஊரணிக்கரையில் உலோக பூஜை பொருட்களின் புதையல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2015 10:07
பரமக்குடி: பரமக்குடி அருகே நெல்மடூர் கிராம ஊரணி கரையில் உலோகத்தால் ஆன பூஜை பொருட்கள் புதையலாக கண்டெடுக்கப்பட்டன.பரமக்குடியை அடுத்த பார்த்திபனூர் அருகே உள்ள நெல்மடூர் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. அங்குள்ள சிவன் கோயில் அருகில் இருக்கும் பெரிய ஊரணி கரையில் மண் அரிப்பு ஏற்பட்டது. அந்த வழியாக நடந்து சென்றவர்களின் கால்களில் சில பொருட்கள் இடறின. அவர்கள் அந்த இடத்தை தோண்டியபோது அங்கு 3 அடி ஆழத்திற்குள் பல ஆண்டுக்கு முன்பு கோயில்களில் பயன்படுத்தப்பட்ட சுட்ட மண் மற்றும் உலோகத்தால் ஆன பழங்கால ஒற்றை கண் குத்துவிளக்குகள், செம்பு, தாழி, அம்மிக்கல் புதைந்து இருந்தன.இதை அறிந்த கிராம மக்கள் அங்கு குவிந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் புதையல் பொருட்களை கைப்பற்றி பார்த்திபனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். புதையல் கிடைத்த இடத்தை நேற்று தாசில்தார் காளிமுத்தன் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: நெல்மடூர் கிராம ஊரணி கரையில் பூஜை பொருட்கள் சிதிலமடைந்த நிலையில் கிடைத்துள்ளது. அவை சுட்ட மண், உலோகத்தால் செய்யப்பட்டவை. ஊரணி கரையிலும், அருகில் உள்ள பாழடைந்த சிவன் கோயிலிலும் மேலும் புதையல் இருக்கிறதா என ஆய்வு செய்ய உள்ளோம். கிடைத்துள்ள பொருட்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைக்கப்படும், என்றார்.கிராம மக்கள் கூறுகையில்,"இங்குள்ள சிவன் கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இக்கோயில் முற்றிலும் புதைந்து வருகிறது. சுவாமி சிலைகள் ஆங்காங்கே புதைந்துள்ளது. ஊரணி கரையில் கண்டெடுக்கப்பட்ட பூஜை பொருட்கள் இக்கோயிலில் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம். மேலும் புதையல் பொருட்கள் இருக்க வாய்ப்புஉள்ளது,” என்றனர்.