பதிவு செய்த நாள்
29
ஆக
2015
11:08
உத்திரமேரூர்: புல்லம்பாக்கத்தில், பராமரிப்பின்றி சீரழிந்து வரும், ருத்திரவாலீஸ்வரர் கோவிலை சீரமைக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, புல்லம்பாக்கம் கிராமத்தில், இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான, ருத்திரவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால், கோவில் கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகளில், சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து காணப்படுகிறது. இதனால், மழைக் காலங்களில் கட்டடம் பலவீனமடைந்து, இடிந்து விழும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கோவில் வளாகத்திற்குள் பூஜை உள்ளிட்ட பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட கிணற்று பகுதியும் பராமரிப்பில்லாமல் துார்ந்து காணப்படுகிறது. எனவே, இந்து அறநிலைய துறை அதிகாரிகள், பராமரிப்பு பணி மேற்கொண்டு, இக்கோவிலை பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப் பகுதிவாசிகள் மற்றும் பக்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.