பதிவு செய்த நாள்
07
அக்
2015
11:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ரூ.65 கோடி மதிப்பில் கிரிவலப்பாதை அகலப்படுத்துவதற்கான ஆய்வு பணி துவங்கியது. முதல்வர் ஜெயலலிதா கடந்த, 25ம் தேதி, சட்டசபையில் விதி, 110ன் கீழ் திருவண்ணாமலை நகரில் கோவிலை சுற்றி அமைந்துள்ள கிரிவலப்பாதையில் பக்தர்கள் வசதிக்காக முதல் கட்டமாக, 7 மீட்டர் முதல், 10 மீட்டர் வரை அகலமுள்ள நடைபாதை மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும் என்றும், மேலும் ஓய்வு அறை வசதி செய்து தரப்படும் என்றும், இப்பணி ரூ.65 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார். இதன் அடிப்படையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், 14 கி.மீ தூரமுள்ள கிரிவலப்பாதையினை நெடுஞ்சாலைத்துறை மூலம் அகலப்படுத்தும் பணியின் முதல் கட்டமாக நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஜெயசேகர் தலைமையில் எல்லை நிர்ணயம் செய்வதற்கு அளவீடு செய்யப்பட்டது. இதில், கிரிவலப்பாதையில் உள்ள திருவண்ணாமலை நகராட்சி, அத்தியந்தல், அடி அண்ணாமலை, ஆடையூர், வேங்கிக்கால் ஊராட்சியின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் எல்லை நிர்ணய ஆய்வுப்பணியை மேற்கொண்டனர்.