வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2015 10:10
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம்பிடித்து இழுத்தனர்.
வத்திராயிருப்பும் அதை சுற்றிய கிராமங்கள் செழிப்புடன் இருக்க காரணம் மழைக்கு அதிபதியான முத்தாலம்மன்தான் என்பது இப்பகுதியினர் நம்பிக்கை. அதன் காரணமாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஒருவாரம் விழா எடுத்து வழிபடுவார்கள். விழாவின் இறுதிநாளில் தேரோட்டம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா செப்.30 ல் கலைவிழாவுடன் துவங்கியது. மண் சிலை காணிக்கை: இயல், இசை, நாடகம் என முப்பெரும் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தன. இறுதி நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை 1 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருள ஊஞ்சல் வாகனத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க துவங்கினர். பல்வேறு வீதிகள் வழியாக சுற்றிவந்த தேர் மதியம் 1.45 மணிக்கு நிலைக்கு வந்தது. கோயிலில் எழுந்தருளிய அம்மனுக்கு பெண்கள் மஞ்சள்நீர் ஊற்றி, மண் சிலை காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.
பிரியாவிடை: தொடர்ந்து ஆண்களின் மஞ்சள் நீராட்டு விழா, பறையர்குல மாவிளக்கு வழிபாடு, அம்மன் அருள்வாக்கு வழங்குதல் நடந்தது. அம்மன் முதல்நாள் இரவு தோன்றி மறுநாள் இரவு மறைந்து விடுவார். கோயிலில் இந்த ஒருநாள் மட்டுமே உருவமாய் இருப்பார். விழா முடிந்தவுடன் அம்மனை அன்றைய தினமே ஆற்று நீரில் கரைத்து விடுவார்கள். அதற்காக அம்மனை வழியனுப்பும் "பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது. அம்மன் கோயிலை மூன்றுமுறை சுற்றிவந்து பக்தர்களிடம் பிரியாவிடைபெற்றார். ஏராளமான பக்தர்கள் கோயிலை சுற்றி நின்று பூக்களை தூவி அம்மனை வழியனுப்பினர்.