பதிவு செய்த நாள்
10
அக்
2015
10:10
பெ.நா.பாளையம்: ஆனைகட்டி, ஆர்ஷ வித்யா குருகுலம் ஆசிரமத்தில், பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிக்கு, ஓதுவார்கள் இசை அஞ்சலி செலுத்தினர். கோவை மாவட்டம், ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலம் நிறுவனர் தயானந்த சரஸ்வதி சுவாமிகள், செப்., 23ல் முக்தியடைந்தார். அவரது நினைவை போற்றும் வகையில், நேற்று முன்தினம் ஷோடமி பூஜை நடந்தது. நேற்று ஓதுவார்கள் சார்பில் காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை ஆசிரமத்தில் இசை அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. ஸ்ருதி சேவா டிரஸ்ட் எனும் திருமுறை சேவை மையம் சார்பில் ஓதுவார் மூர்த்திகள் ஒருங்கிணைந்து திருமுறைகளை பாடி, இசை அஞ்சலி செலுத்தினர். திருமுறை சேவா மையம் மூலம், தமிழக சிவாலயங்களில் பணி நியமனம் செய்யப்பட்ட, 40 ஓதுவார்கள், திருமுறை சேவையாற்றி வருகின்றனர். அவர்களுக்கான மாதாந்திர ஊக்கத் தொகை, தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் ஸ்ருதி சேவா அறக்கட்டளை சார்பில், 2005 முதல் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.