பதிவு செய்த நாள்
06
நவ
2015
02:11
மலைகளும், பிரம்மபுத்திரா நதியும் பாயும் மாநிலம் அசாம். ஒரு காலத்தில், இம்மாநிலம், காமரூபம் என அழைக்கப்பட்டது. நாம், பராசக்தியை, காமாட்சி என அழைப்பது போல, இவர்கள், காமா அல்லது காமாக்யா என்ற பெயரில் அழைத்தனர். காமாக்யாவை, காமா + ஆக்யா என்று பிரிப்பர். காமா என்றால், பக்தர்கள் மீது விருப்பமுள்ளவள்; ஆக்யா என்றால், பெயர் மற்றும் காமா என்ற பெயரைக் கொண்டவள் என்றும் பொருள். திருமாலின் தசாவதாரங்களில், வராக அவதாரம் நிகழ்ந்த தலம் இது! இரண்யன் எனும் அசுரன், பூமிதேவியைக் கடத்தி கொண்டு பாதாளத்தில் மறைந்தான். அவளை மீட்க, பன்றி வடிவெடுத்து, தன் பற்களால் பூமியை அகழ்ந்து சென்றார் திருமால். அவனை வதம் செய்த பின், பூமியை, தன் தெற்றுப் பல் நுனியில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். பூமாதேவிக்கும், வராகருக்கும் ஏற்பட்ட இந்த ஸ்பரிசத்தில், பவுமன் பிறந்தான். பவுமன் என்றால், பூமியின் பிள்ளை என்று பொருள். ஆனால், இவன் சென்றால், அவ்விடத்தில் இருள் படியும் அளவுக்கு மிகவும் கறுப்பாக இருந்தான்.
சட்டத்தை பரிபாலிப்போரின் பிள்ளைகள், தங்கள் பெற்றோர் கையில் தானே ஆட்சி இருக்கிறது என்ற தைரியத்தில், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போடுவர். அதுபோல, பவுமனும், திருமாலின் பிள்ளை என்ற தைரியத்தில், மக்களுக்கு பல்வேறு கொடுமைகளை செய்து வந்தான். அத்துடன், தேவலோகத்துக்கு சென்று, இந்திரனின் வெண்கொற்றக் குடையையும், அவனது தாய் அதிதி அணிந்திருந்த, அமுதம் சொட்டும் குண்டலங்களையும் பறித்து வந்தான். பின், ப்ராக் ஜ்யோதிஷபுரம் என்ற ஊரை தலைநகராகக் கொண்டு, ஆட்சி செய்து வந்தான். ப்ராக் என்றால், முன்பக்கம் அல்லது கிழக்கு என்று பொருள். ஜ்யோதிஷபுரம் என்றால், பிரகாசமான நகரம் என்று அர்த்தம். பாரதத்தின் கிழக்கு பகுதியில், காமரூப தேசம் இருந்ததால், ப்ராக் ஜ்யோதிஷபுரம் என்று பெயர் வைத்தான். சிகப்பாக இருப்பவர்களுக்கு, கருப்பையா என்று பெயர் வைப்பதைப் போல, இவன் சென்றாலே இருட்டாகும் இடத்துக்கு, ஒளி நகரம் என்று பெயர் சூட்டினான்.
மனிதனாய் பிறந்திருந்தாலும், அசுர குணத்துடன் விளங்கியதால், இவனை, நரகாசுரன் என்றே மக்கள் அழைத்தனர். திருமாலுக்கும், பூமாதேவிக்கும் பிறந்த பிள்ளை என்பதால், தேவர்கள் அவனைப் பற்றி புகார் செய்ய தயங்கினர். ஆனாலும், நாளுக்கு நாள் இவனுடைய அட்டகாசம் அதிகரிக்கவே, அவனைப் பற்றி திருமாலிடம் புகார் செய்தனர். அச்சமயத்தில், திருமால் – கிருஷ்ணராகவும், பூமாதேவி – சத்யபாமாவாகவும் பூமியில் அவதாரம் செய்திருந்தனர். இந்நிலையில், தேவர் மற்றும் முனிவர் குலப் பெண்கள், 16,100 பேரை கடத்தி வந்து, தன் பாதுகாப்பில் அடைத்து வைத்து, அவர்களை கொடுமை செய்தான் நரகாசுரன். அப்பெண்கள் மற்றும் தேவலோகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை மீட்க, சத்யபாமாவுடன் கருடன் மீது ஏறி புறப்பட்டார் கிருஷ்ணர். ப்ராக் ஜோதிஷபுரத்துக்குள் நுழைவது, அவ்வளவு எளிதல்ல; அந்நகருக்கு மலைகளே அரண் போல இருந்தன. உள்ளே ஆயுதங்களால் ஆன கோட்டை எழுப்பியிருந்தான். அதைத் தாண்டி போனால், தண்ணீருக்கு நடுவே கோட்டைகளை அமைத்திருந்தான். பெரும் ஆழம் மிக்க அக்கோட்டைகளை கடப்பது, மிகவும் சிரமம்; இதையும் கடந்து சென்றால், நெருப்பு எரியும் அக்னி கோட்டை தடுத்தது; இதன்பின், கடும் புயல் வீசும் வாயுகோட்டை! இவ்வளவையும் கடந்தால் தான், அவனது இருப்பிடத்தை அடைய முடியும். அத்தனை கோட்டைகளையும் தகர்த்து, உள்ளே சென்றார் கிருஷ்ணர்.
அவரை, நரகாசுரனின் அமைச்சரான முரன் என்பவன், தடுத்தான்; அவனுக்கு ஐந்து தலைகள். தன் சக்ராயுதத்தை, அவன் மீது ஏவி, தலைகளை அறுத்தார் கிருஷ்ணர். இதனால் அவனுக்கு, முரஹரி என்றும், முராரி என்றும் பெயர் ஏற்பட்டது. முரன் + அரி என்று இதைப் பிரிப்பர். அரி என்றால், எதிரி; முரனுக்கு எதிரி என்பதால், முராரி ஆனார். இதையறிந்த முரனின் ஏழு பிள்ளைகளும், கிருஷ்ணருடன் போரிட்டனர்; அவர்களையும் சம்ஹாரம் செய்தார் கிருஷ்ணர். வேறு வழியின்றி, நரகாசுரனே யானை மீது ஏறி பெரும்படையுடன் வந்து, கிருஷ்ணரை எதிர்த்தான். அவனது சேனையின் பெரும்பகுதியை கருடனும், சத்யபாமாவும் அழித்தனர். சத்யபாமா, வில் வித்தையில் வல்லமை மிக்கவள் என்பதால், அவளது வில்லுக்கும், அம்புக்கும் பலர் பலியாயினர். பகல் வேளை போய், இரவு வந்தது; இரவில், அசுரர்களுக்கு பலம் அதிகமாகும். அதனால், பெரும் பலத்துடன் போரிட்டான் நரகாசுரன்; விடியும் வரை போர் நடந்தது. அன்று, ஆச்வினம் மாதம், தேய்பிறை சதுர்த்தசி திதி. ஆச்வின மாதம் என்பது, புரட்டாசி அமாவாசைக்கு மறுநாளான பிரதமை திதியிலிருந்து, ஐப்பசி அமாவாசை முடிய உள்ள, 30 நாட்கள். விடியும் வரை நரகாசுரனை சமாளித்த கிருஷ்ணர், அதிகாலையில் அவனை வதம் செய்து, எல்லாப் பெண்களையும் மீட்டார். தெய்வத்தின் கையால் அழிந்ததால், நரகாசுரனுக்கு முக்தி கிடைத்தது.
மனம் திருந்திய நரகாசுரன், தன் இறந்த நாளை ஆனந்த திருநாளாக கொண்டாட வரம் கேட்டான்; கிருஷ்ணரும் கொடுத்தார். ஒருவர் இறந்து போனால், எண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம் உண்டு. சூரிய உதயத்துக்கு முன், இரண்டு நாழிகை (48 நிமிடம்) முன்னதாக நரகாசுர வதம் நிகழ்ந்ததால், நாம், அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம். அப்போது எந்த நீரில் குளித்தாலும், அது, கங்கைக்குரிய அந்தஸ்தை பெறுவதால், கங்கா ஸ்நானம் என்கிறோம். நரகாசுர வத கதையைக் கேட்டவர்கள், நீதிமான்களாக திகழ்வதுடன், திருமாலின் அருள் பெறுவர் என்பது ஐதீகம். நரகாசுர வத காட்சிகளை இங்குள்ள படங்களில் கண்டு மகிழுங்கள். தி. செல்லப்பா