திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மலை மீது இன்று (நவ., 25) மாலை 6.15 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. காலை தேரோட்டம் நடக்கிறது.இங்குள்ள சுப்பிர மணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா நவ., 17ல் துவங்கியது. நேற்றிரவு பட்டாபிஷேக உற்சவம் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினர். கோர்வத்தனாம்பிகை அம்பாளிடமிருந்து பெற்ற நவரத்தின செங்கோல், சுவாமியின் பிரதிநிதியான திருவிழா நம்பியார் சிவாச்சார்யாரிடம் வழங்கப்பட்டது. தங்க குடத்தில் புனிதநீர் நிரப்பி சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், சுவாமியின் கிரீடத்திற்கு அபிஷேகம் முடிந்து, சுவாமியிடம் சாத்தப்படியானது. இன்று மகா தீபம்: காலை தேரோட்டமும், மாலை கோயிலுக்குள் பால தீபம், மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். நாளை தீர்த்த உற்சவம் நடக்கிறது. மலையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.