சபரிமலையில் பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் முன்பதிவு செய்வது எப்படி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2015 10:11
சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் தங்குவதற்கு ஆன்லைன் மூலமும், சன்னிதானத்தில் அக்காமடேஷன் அலுவலகத்தில் நேரிலும் அறைகள் முன்பதிவு செய்யலாம். சன்னி தானத்தில் மொத்தம் 608 அறைகள் மட்டுமே உள்ளது.சபரிமலையில் முக்கிய வழிபாடு நெய்யபிஷேகம். மதியத்துக்கு பின்னர் வரும் பக்தர்கள் அடுத்த நாள் அதிகாலை 4.15 மணி முதல்தான் அபிஷேகம் செய்ய முடியும். இதனால் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்குகின்றனர். இதற்காக அறைகள் எடுக்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். www.sabarimalaaccomodation.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியும். ஆனால் நாள் ஒன்றுக்கு அதிக பட்சமாக 100 அறைகள் மட்டுமே இதில் வழங்கப்படுகிறது. 15 நாட்கள் முன்னதாக பதிவு செய்ய முடியும். இதற்கான பணமும் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் சபரிமலை சன்னிதானத்தின் இடது புறம் 108 படிக்கட்டின் பக்கத்தில் அமைந்துள்ள அக்காமடேஷன் அலுவலகத்தில், அறைகள் இருப்பை பொறுத்து 24 மணி நேரமும் முன்பதிவு செய்ய முடியும். 12 மற்றும் 16 மணி நேரம் என்ற அடிப்படையில் அறைகள் கிடைக்கும். பில்கிரிம் சென்டர்களில் உள்ள அறைகளுக்கு 12 மணி நேரத்துக்கு 250 ரூபாய், 16 மணி நேரத்துக்கு 350 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படு கிறது. இதில் இரண்டு பேர் தங்கலாம். கூடுதலாக தங்கும் ஒரு பக்தருக்கு 12 மணி நேரத்துக்கு 100 ரூபாயும், 16 மணி நேரத்துக்கு 150 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இங்கு 20 பேர் தங்கும் பெரிய ஹாலுக்கு ஆறாயிரம் ரூபாய் கட்டணம் ஆகும். 50 பேர் வரை கூடுதல் கட்டணம் செலுத்தி இங்கு தங்கலாம்.பாலாழி, சோபானம், ஸ்ரீமணிகண்டன் ஆகிய கட்டடங்களில் உள்ள அறைகளில் கட்டில் உள்ளிட்ட பர்னிச்சர்கள் உண்டு. இங்கு 12 மணி நேரத்துக்கு 1600, 16 மணி நேரத்துக்கு 2200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட அக்காமடேஷன் அலுவலகத்தில் அறைகள் இருந்தால் 24 மணி நேரமும் பெறமுடியும். இதன் டெலிபோன் எண்: 0473-520 2049.