பதிவு செய்த நாள்
26
நவ
2015
05:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக தீர்த்த உற்சவம் நடந்தது. கோயிலில் நவ.17ல் துவங்கிய திருவிழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு, உற்சவர் சன்னதியில் விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன், சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், அஸ்தரதேவர் எழுந்தருளினர். கார்த்திகை கொடியேற்றம் தொடங்கி காலை வரை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், உற்சவர்களுக்கு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, சுவாமிகளுக்கு புஷ்ப அலங்காரமாகி தீபாராதனைகள் நடந்தன. உச்சிகால பூஜை முடிந்து, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன், சரவணப் பொய்கையில் எழுந்தருளினர். அங்கு ஆறுமுக சுவாமி சன்னதியில் யாகம் வளர்க்கப்பட்டு, பூஜைகள் முடிந்து அஸ்தரதேவருக்கு சரவணப்பொய்கையில் தீர்த்த உற்சவம் நடந்தது.