பதிவு செய்த நாள்
28
நவ
2015
11:11
கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் கார்த்திகை தீபத் திருநாள், தியானலிங்கம் உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக கொண்டாடப்பட்டது. கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமியை கார்த்திகை தீபத் திருநாளாக பாரம்பரியமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த நாளில்தான் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் அமையப்பெற்றுள்ள தியானலிங்கமும் உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. பிராணப் பிரதிஷ்டை செயல்முறை மூலம் சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தியானலிங்கம், கார்த்திகை தீபத் திருநாளான 1999ம் ஆண்டு நவம்பர் 23ம் நாளன்று, முறையாக உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்நாளைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருநாள், தியானலிங்கம் உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக ஈஷாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
நவம்பர் 25ம் தேதி கார்த்திகை பௌர்ணமியன்று நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில், ஈஷா ஆசிரமவாசிகளும் தன்னார்வத் தொண்டர்களும் தீபங்கள் ஏற்றி, தியானலிங்க வளாகத்தையும் ஆசிரம வெளிகளையும் ஒளிவெள்ளத்தால் அலங்கரித்தனர். அன்றைய தினம் பௌர்ணமி என்பதால் ஈஷாவிற்கு வருகை தந்த பொதுமக்கள் தங்கள் கரங்களால் தியானலிங்கத்தில் பால் மற்றும் நீர் அர்ப்பணிப்பு செய்யும் வாய்ப்பைப் பெற்றனர். மாலை 6.30 மணியளவில் லிங்கபைரவி உற்சவ மூர்த்தி ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.
கார்த்திகை தீபத்தின் சிறப்புகள் பற்றி சத்குரு...: இந்தக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை, எதை செய்தாலும் அதை மனித நல்வாழ்விற்கு வழிவகுக்கும் வகையில், விஞ்ஞான ரீதியாகவே செய்தார்கள். மனிதனின் நல்வாழ்வு, அவனின் உள்நிலை வளர்ச்சிக்கு உதவுவதோடு, அவன் முக்தியை நாடி செல்வதற்கும் வழி செய்கிறது. இவ்வகையில், விளக்கு ஏற்றுவது முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், நாம் பார்த்து உணர்வதற்கு, ஒளி மிக அத்தியாவசியம். நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தை நாம் புரிந்துகொள்வதில் நம் பார்வை பெரும் பங்கை வகிக்கிறது. வெளிச்சம் இல்லாவிட்டால், நம்மை சுற்றி இருக்கும் எதையும் நம்மால் உணர முடியாது. இதன் அடிப்படையில் நமக்கு ஒளி முக்கியம். ஆனால் இந்நாளின் முக்கியத்துவம் வெறும் வெளிச்சம், அல்லது விளக்கு ஏற்றுவதைப் பற்றி மட்டும் அல்ல.
ஒரு வருடத்தின் இந்த பாகத்தை, தக்ஷிணாயனம் (அ) சாதனா பாதை என்று அழைப்பர். இதில் இந்த கார்த்திகை மாதத்தில் தான் நாம் ’கைவல்ய பாதைக்குள்’ மெதுமெதுவாக அடி எடுத்து வைக்கும் நேரம். இதை பல கதைகளில் கேட்டிருப்பீர்கள். பிதாமகர் பீஷ்மர், சாதனா பாதையில் இறக்க விரும்பாமல், அம்புப் படுக்கையில் காத்திருந்து, ’உத்தராயண’த்தில் உயிர் நீத்தது நாம் அனைவரும் அறிந்த கதைதான். அவர் உத்தராயணத்தில் (அ) கைவல்ய பாதையில் இறக்க விரும்பியதற்கான காரணம், அந்த நேரத்தில் தான் வாழ்க்கையின் பலன்களை அறுவடை செய்யமுடியும். நம் உள்நிலையில் அறுவடை செய்ய வேண்டியவற்றை கைவல்ய பாதையில் மிக எளிதாக அறுவடை செய்துவிடலாம்.
இந்த கார்த்திகை மாதம், சாதனா பாதையில் இருந்து கைவல்ய பாதைக்கு மெதுவாக மாறும் நேரம். இந்நேரத்தில் விளக்குகள், அதில் இருந்து வெளிவரும் ஒளி, ஞானோதயம், விழிப்புணர்வு, முக்திக்கான அடையாளக் குறியீடுகள். இதைக் குறிப்பதற்குத் தான் வீட்டிலே பல விளக்குகள் ஏற்றி வைக்கிறோம். இது ஏதோ ஒரே ஒரு விளக்கை ஏற்றுவதைப் பற்றி அல்ல. நம் கலாச்சாரத்தில் பொதுவாக கார்த்திகை மாதத்தில், எப்போதும் ஏற்றுவதை விட இரண்டு மடங்கு அதிகமாக தீபம் ஏற்றுவார்கள். ஒன்று, வருடத்தின் இந்த நேரத்தில் பகல் நேரம் குறைவாக இருப்பதால், நம் தினசரி வேலைகளை செய்ய நமக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் தேவைப்படும் என்பதால். மற்றொன்று நம் வாழ்வில் ஒளியை பெருக்கிக் கொள்ளும் நேரம் இது என்பதால். இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் என்றால், நமக்கு 700 கோடி விளக்குகள் ஏற்ற வேண்டும். ஆனால் எல்லோருக்கும் நாம் ஒருவரே ஏற்ற முடியாது என்பதால், இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் நீங்கள் குறைந்தது இதையாவது செய்யவேண்டும். உங்களுக்கென்று ஒன்று, உங்களுக்கு நெருக்கமானவருக்கு ஒன்று, உங்களுக்கு சிறிதும் பிடிக்காதவருக்கு ஒன்று, என்று குறைந்தது மூன்று விளக்கேனும் நீங்கள் தினமும் ஏற்ற வேண்டும்!