பதிவு செய்த நாள்
30
நவ
2015
11:11
திருவொற்றியூர்: வடிவுடையம்மன் கோவிலில், 46 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக தேர் வடிவமைக்கப்பட்டு நேற்று வெள்ளோட்டம் நடந்தது. பிரம்மாண்டமாக, 41 அடிக்கு உயர்ந்து நிற்கும் தேர் வடிவமைப்பிற்கு, தேக்கு மற்றும் இலுப்பை மரங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. தேரை தாங்கி நிற்கும் சக்கரம் திருச்சியிலுள்ள பெல் நிறுவனத்தில் செய்யப்பட்டது.
கடந்த, 1941ம் ஆண்டுக்கு பின், 74 ஆண்டுகளுக்கு பின், மாடவீதிகளை சுற்றி வந்த தேரை காண பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். காலை, 8:50 மணிக்கு சன்னிதி தெருவில் இருந்து புறப்பட்ட தேர், டி.எச்., ரோடு, தெற்கு மாட வீதி, மேற்கு மாட வீதி, வடக்கு மாட வீதிகளை சுற்றி வந்தது. தேரை ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர். மதியம், 12:00 மணியளவில் சன்னிதி தெருவில் தேர் நிலை நிறுத்தப்பட்டது.
மாசி மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் தேரோட்ட திருவிழாவின்போது தேர் பயன்படுத்தப்படும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. முண்டகக்கண்ணியம்மன் கோவில் மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவிலில், திருப்பணிகள் முடிந்து, நேற்று காலை, மகா கும்பாபிஷேகம் மற்றும் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, கடந்த 27ம் தேதி காலை, முதல் யாகசாலை பூஜையும், 28ம் தேதி காலை, மாலை இரண்டாம் காலம், மூன்றாம் காலம் பூஜையும் நடந்தன. நேற்று அதிகாலை, நான்காம் காலம் பூஜைகளுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. காலை, 8:00 மணிக்கு, ராஜகோபுரம் உற்சவர் விமானம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின், 8:30 மணிக்கு, மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு, 7:00 மணி அளவில் அம்மன் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது.
கிருஷ்ணமூர்த்தி குருக்கள் தலைமையில், 30 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினர். கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
ராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோவில்ராயபுரம் கல்மண்டபத்தில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலில், கடந்த, 2014ம் ஆண்டு மார்ச்சில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கின. கோவிலின் ராஜகோபுரம் புதுப்பித்தல், மற்ற கோபுரங்களுக்கு வண்ணம் பூசுதல், புதிய தரை தளம் அமைத்தல் போன்ற பணிகள் கோவில்
உபயதாரர்கள் அளித்த, 30 லட்சம் ரூபாயில் திருப்பணிகள் நடந்து முடிந்தன.
காசி, அலகாபாத் திரிவேணி சங்கமம், கோதாவரி, ராமேஸ்வரம் ஆகிய புனித ஸ்தலங்களில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டது. 18 யாக குண்டங்களில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, விசேஷ திரவிய ஹோமம், பூர்ணஹூதி யாத்ராதான சங்கல்பம் போன்ற பூஜைகள் நடந்தன. காலை, 8:15 மணிக்கு, கலசங்கள் கோவிலை வலம் வந்தன. காலை, 8:30 மணிக்கு, கோவிலின் ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளான நவக்கிரகம், காசிவிசுவநாதர் மற்றும் விசாலாட்சி, பைரவர், சுப்ரமணியர், விநாயகர் மற்றும் மூலவரான அங்காள பரமேஸ்வரி சன்னிதிக்கு பெருநகர் பாலாஜி சர்வசாதகர் தலைமையில், 80 சிவாச்சாரியார்கள் தலைமையில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.