பதிவு செய்த நாள்
07
ஜன
2016
11:01
பழநி: தமிழகத்தின் முதன்மை ஆன்மிக சுற்றுலா ஸ்தலமான பழநிகோயிலுக்கு சாதாரண நாட்களில் 25ஆயிரம் பக்தர்களும், விடுமுறை, விழாக் காலங்களில் தினமும் 50 ஆயிரம்பேர் வரை வந்து செல்கின்றனர். இதுவே தைப்பூசம், பொங்கல் விடுமுறை தினங்களில் இன்னும் பலமடங்கு அதிகரித்து விடுகிறது. சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் கேரளா, கர்நாடகா வெளிமாநிலம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்களின் வருகை ஆண்டிற்கு ஆண்டு அதிகமாகி வருகிறது. அதற்கேற்ப பிரச்னைகளும் அதிகரித்துள்ளது. பழநியில் இவ்வாண்டு தைப்பூச விழா ஜன.,18 முதல் ஜன.,27வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தீர்வு காணப்படவேண்டிய பிரச்னைகளில் ஒரு சில:
கிரிவீதியில் வாகனங்களால் நெரிசல்: பழநிகோயில் சார்பாக, சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடம் தனியாக உள்ளது. அங்கு போதிய வசதியில்லாத காரணத்தால், நான்கு கிரிவீதிகøயும் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிறிய விபத்துகளும் நடக்கிறது.
பாலிதீன் பயன்பாடு தாராளம்: சுற்றுலா ஸ்தலமான, பழநியில் பாலிதீன் பயன்பாடு, நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தடை என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. அடிவாரம், பஸ்ஸ்டாண்ட், கிரிவீதி ஆகிய பகுதி ஹோட்டல், டீக்கடை, தள்ளுவண்டி கடைகளில் பாலிதீன் பயன்பாடு அதிகமாக உள்ளது.
கூடுதல் விலை: பழநி கோயில் அடிவாரம், ரோட்டோர கடைகளில், சுகாதாரமற்ற உணவு, மற்றும் காபி, டீ, சோப்பு, ஷாம்பு உட்பட அனைத்து பொருட்களையும், சீசன் நேரங்களில் அவரவர் நோக்கத்திற்கு, அடக்க விலையை காட்டிலும், கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.
மயில்கள், கோயில்கள் மாயம்: பழநிமலைக்கோயில் பாதவிநாயகர்கோயில் முதல் அழகுநாச்சியம்மன்கோயில், வின்ச் ஸ்டேஷன் வரை ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பஸ் ஸ்டாண்டில் துவங்கி அடிவாரம், மலைக்கோயிலைச் சுற்றிலும், நடைபாதையை ஆக்கிரமித்து, தள்ளுவண்டி, பழக் கடைகள் உள்ளன. இவற்றால் மீனாட்சியம்மன்கோயில், கிரிவீதியிலுள்ள மயில்களை பக்தர்கள் வழிபட சிரமப்படுகின்றனர்.
திருட்டு அதிகரிப்பு: தைப்பூசவிழா பக்தர்கள் குவிந்து உள்ளநிலையில் பழநிஅடிவாரப்பகுதியில் போலீசார் பற்றாக்குறை காரணமாக நாள்தோறும் வெளிமாநில, வெளியூர் பக்தர்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். அவர்களிடம் கைவரிசை காட்ட, வெளியூர் திருடர்களின் நடமாட்டமும் உள்ளது.
போதை தொந்தரவு: பழநிகோயிலுக்கு செல்லும், முக்கியவீதிகளான பஸ் ஸ்டாண்ட் அடிவாரம் ரோடு, தனியார் பார் கடைகள் உள்ளது. இதில் மது அருந்திய போதை ஆசாமிகள், அரைகுறை ஆடையுடன் ரோட்டில் நடப்பதால் சில குடிமகன்களின் ஆபாச வார்த்தைகளால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். குளத்துரோடு பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுபானகடையில் குடிமகன் களின் சேட்டைகளால், சிறுவர்கள், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஒருவழிப்பாதை அவசியம்: பழநி தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களி லிருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திண்டுக்கல்-பழநி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வருகின்றனர். இதில் மதுரை, தேனி உள்பட பக்கத்து மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்கள் மொத்தமாக ஒட்டன்சத்திரத்தில் குவிகின்றனர். இதனால் ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி, சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, ஆயக்குடி, பழநி வரை நீண்ட வரிசையாக, பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதால் தைப்பூசவிழா நேரத்தில் ஒருவழிப்பாதையாக மாற்றவேண்டும்.
திருடர்கள் ஜாக்கிரதை: பாதயாத்திரையாக வரும் போது, திருடர்களும் தங்களை பக்தர்களாக அடையாளம் காட்டிக்கொண்டு, மற்றவர்களிடம் நன்றாக பேசி பழகுவர். அவர்களாகவே முன்வந்து, டீ, பிஸ்கட், உணவுப் பொட்டலங்களை வாங்கித்தருவர். அசந்து தூங்கும்போது, பொருட்களை கொள்ளையடித்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. இதில்பக்தர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
யாசகர்கள் தொந்தரவு: பழநிக்கு வரும் பக்தர்களிடம் யாசகம் பெறுவதற்காக வெளிமாநில பெண்கள், சிறுவர்கள் அவர்களிடம் தகராறு செய்கின்றனர். மேலும் வின்ச் ஸ்டேஷன், அடிவாரப்பகுதிகளில் பிச்சைகாரர்கள் குவிந்துள்ளனர். இதனாலும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
துப்புரவுபணியில் 500 பேர்: நகராட்சி தலைவர் வேலுமணி: தைப்பூச நாளில் வெளியூர் துப்புரவு பணியில் மட்டும் 500 பேருக்குமேல் ஈடுபடுத்த உள்ளோம். 15 இடங்களில் தண்ணீர் பந்தல், 6 இலவச தற்காலிக கழிப்பிடங்கள், 3 இடங்களில் தடுப்பூசி மையம் என ரூ.25 லட்சம் மதிப்பில் சுகாதாரம், மருத்துவம், குடிநீர் பணிகள் நடைபெற உள்ளது. சேதமடைந்த ரோடுகளை ரூ.1.5கோடியில் செப்பனிடுகிறோம். கோயில், அடிவார வீதிகளில் குவியும் குப்பை அள்ள தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு தடை: கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழநி நகருக்குள் 4 திசை ரோடுகளிலும் 42 இடங்களில் குடிநீர், தற்காலிக நிழற்பந்தல்கள் அமைக்கப்படும். கிரிவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். கொடைக்கானல் ரோடு, அய்யம்புள்ளிரோடு, பூங்காரோடு பகுதிகளில் செக்போஸ்ட் அமைக்க உள்ளோம். இலவச வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தங்கும்விடுதிகள், கழிப்பறைகள் திறக்கப்பட்டுள்ளது. யானைப்பாதை, படிப்பாதையில் கழிப்பறைவசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. நடமாடும் கழிப்பிடவாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ரோப்கார், பெரியநாயகியம்மன் கோயில் திடீர் மின்தடையை சமாளிக்க ஜெனரேட்டர்கள் தயார்நிலையில் உள்ளது. மலைக்கோயிலில் தீயணைப்பு நீர்தும்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைமையம், ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. மலைக்கோயிலில் 68 இடங்களில் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் இணைப்பு அமைக்கப்பட்டு உள்ளது.
பக்தர்கள் பேட்டி: மோகன், புதுக்கோட்டை: இங்கு 40பேர் பஸ்சில் வந்தோம். சுற்றுலா வாகனங்கள் நிறுத்துமிடத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லை. வாகனங்களின மறைவில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கிரிவீதியில் நடக்க முடியவில்லை. உடலில் அலகு குத்திவரும் பக்தர்கள் பாடு திண்டாட்டம் தான்.
பன்னீர்செல்வம், முசிறி: கிரிவீதியில் அவ்வளவாக குப்பை இல்லை. கழிப்பறை சுத்தமாக உள்ளது. நகராட்சி பஸ் ஸ்டாண்ட், அடிவாரபகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.
ஸ்ரீதர், சிவசேனா மாவட்ட இளைஞர்அணி தலைவர்: பழநிகோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கூடுதலாக குடிநீர் வசதி செய்துதரவேண்டும். முக்கியமாக கழிப்பறைகளை சுத்தம் செய்ய கூடுதலாக துப்புரவு பணியாளர்களை நியமிக்கவேண்டும். கிரிவீதியில் தடையை மீறும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். பூட்டியுள்ள பக்தர்கள் தங்கும் அறைகளை திறக்க வேண்டும்.
சேகர், நிறுவனர், பாலதண்டாயுதபாணி பக்தர்கள் பேரவை: தைப்பூசவிழா அன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் குவிகின்றனர். மலைக்கோயிலை இரவு 1 மணிக்கு அடைத்து விடுவதால் அதிகாலை 4 மணி தரிசனத்திற்காக பக்தர்கள் கிரிவீதியில் பாதுகாப்பில்லாமல் காத்துகிடக்கின்றனர். அவர்களை யானைப்பாதையில் தங்க அனுமதிக்க வேண்டும். மலைக்கோயிலில் தரிசனம் முடித்துவெளியே வரும் பகுதியில் இடையூறாக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளதால் நெரிசல் ஏற்படுகிறது. அவற்றை இடமாற்றம் செய்யவேண்டும். உள்ளூர் மக்களும் திருவிழாவில் பங்குபெற வசதியாக தைப்பூச பொது உண்டியல் வைக்க வேண்டும்.