பதிவு செய்த நாள்
07
ஜன
2016
11:01
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகேயுள்ள, பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பெரிய அளவிலான யாக குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி. இங்குள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில், தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா மாநில பக்தர்கள் மத்தியிலும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் அடுத்து வரும் செவ்வாய்க் கிழமை, கோவிலில் நடக்கும் குண்டம் விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து, தங்கள் நேர்த்திக்கடனை நிறைவு செய்வர். புகழ்பெற்ற கோவிலின் கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்கு பின்னர், வரும், 20ம் தேதி நடக்கிறது. இதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து கூறியதாவது: கோவில்களுக்கு வர்ணம் பூசும் பணி ஓரிரு நாளில் நிறைவு பெறும். கோவில் திருமண மண்டபம் முன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மெகா அளவில் யாக குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் தெப்பகுளம் பகுதியில் அமைந்துள்ள பண்ணாரி மாரியம்மனின் சகோதரி என்ற அழைக்கப்படும் சருகுமாரியம்மன் கோவிலிலும் வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்டுள்ளது. 1.60 கோடி ரூபாய் செலவில் நடக்கும் கும்பாபிஷேக விழா பணிகளுக்கு, நன்கொடை வழங்க நினைக்கும் பக்தர்கள் கோவில் அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.