பதிவு செய்த நாள்
05
பிப்
2016
10:02
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசிப்பெரு விழா நேற்று துவங்கியது. விழாவை முன்னிட்டு பூத்தமலர் பூ அலங்காரம் நடந்தது. கருமாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான பூச்சொரியல் நிகழ்ச்சி இன்று காலை நடக்கிறது. இதனால் பக்தர்கள் பலரும் அதிகளவில் பூக்களை வாங்கி கோயிலுக்கு காணிக்கையாக செலுத்துவர். இதனால் மல்லிகை, கனகாம்பரம் பூக்களின் விலை நேற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகை ரூ.500 , கனகாம்பரம் ரூ.400 க்கு விற்றது. நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.300க்கும் மேலாக அதிகரித்து ரூ.800 முதல் ரூ.900, கனகாம்பரம் ரூ.400க்கும் மேல் அதிகரித்து ரூ.800 முதல் ரூ.850 வரை விற்பனையானது. இதேபோல் ஜாதி மல்லி ரூ.700, ரோஜா ரூ.40 , முல்லை ரூ. 120, அரளி ரூ.60, பிச்சி ரூ.90, சம்மங்கி ரூ. 70 க்கு விற்பனையானது. வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘மல்லிகை, கனகாம்பரம் வரத்து குறைவாக இருப்பதாலும், இன்று பூச்சொரியல் விழா இருப்பதாலும் விலை அதிகரித்துள்ளது’ என்றார்.
கோட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரியல் விழாவையொட்டி திண்டுக்கல்லில் மல்லிகை, கனகாம்பரம் பூக்கள் விலை கிலோ ரூ.800 க்கு விற்பனையானது. திண்டுக்கல்லில் மல்லிகை 961 எக்டேரிலும், கனகாம்பரம் 400 எக்டேரிலும் சாகுபடியாகிறது. மல்லிகை, கனாகாம்பரம், காக்கரட்டான், முல்லை, ரோஜா உள்ளிட்டவை மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, சேலம் மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. திண்டுக்கல் மார்கெட்டிற்கு நாள்தோறும் மல்லிகை, கனகாம்பரம் 400 கிலோ வரை விற்பனைக்கு வரும். கடந்த சில மாதங்களாக மழையால் வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது. பனிப் பொழிவும் உள்ளதால் பூக்கள் செடியிலேயே வாடி கருகி போகின்றன. இதனால் உள்ளூர் வரத்தும் வெகுவாக குறைந்துவிட்டது.