பதிவு செய்த நாள்
08
பிப்
2016
12:02
வேலூர்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், 30 ஆண்டுகளுக்கு பின், மஹோதய புண்ணியகால விழா, இன்று கொண்டாடப்பட்டது. தை அமாவாசை தினத்தில், திருவோணம் நட்சத்திரம் மற்றும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை ஆகியவை, ஒருசேர அமையும் தினம், மஹோதய புண்ணியகாலமாக கொண்டாடப்படுகிறது. எனவே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகம் போல், 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அமையும், மஹோதய புண்ணியகாலம் என்பது, மிகவும் விசேஷமானது என்று, ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர். இதையொட்டி, தி.மலை அண்ணாமலையார் கோவிலில் நேற்று நள்ளிரவு, 1:00 மணிக்கு, மஹா அபிஷேகம் நடந்தது. இன்று, சூரிய உதயத்துக்கு முன், இந்திர தீர்த்தம் எனப்படும் அய்யங்குளத்தில், மஹோதய புண்ணியகால தீர்த்தவாரி நடைபெற்றது. பின், ராஜகோபுரம் எதிரிலுள்ள, 16 கால் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். தொடர்ந்து, மாட வீதியில் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.